கிரிக்கெட்

மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி எங்கள் வெற்றியை பறித்து விட்டனர் - பாபர் அசாம்

Published On 2023-09-14 23:14 GMT   |   Update On 2023-09-14 23:14 GMT
  • முதலில் ஆடிய பாகிஸ்தான் 42 ஓவரில் 252 ரன்கள் சேர்த்தது.
  • அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது.

கொழும்பு:

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. மழையால் போட்டி 42 ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 252 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 86 ரன்கள் எடுத்தார்.

அடுத்து ஆடிய இலங்கை கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான ரன்னை எடுத்து, இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது.

அந்த அணியின் குசால் மெண்டிஸ் 91 ரன்னில் அவுட்டானார். சரித் அசலங்கா கடைசி வரை ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறியதாவது:

எங்கள் பந்துவீச்சு மோசமாக இருந்தது. எங்களை விட இலங்கை அணியினர் சிறப்பாக விளையாடினார்கள். அதனால் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.

எங்களுடைய பந்துவீச்சும் சரி, பீல்டிங்கும் சரி, சரியான தரத்தில் இல்லை என்பதால் நாங்கள் தோற்றோம். போட்டியின் மிடில் ஓவர்களில் எங்களுடைய பந்துவீச்சு எடுபடவில்லை.

இலங்கை அணியின் பார்ட்னர்ஷிப்பை எங்களால் பிரிக்க முடியவில்லை. மெண்டிஸ், சமரவிக்ரமா ஜோடி சேர்ந்து ரன்களை குவித்ததால் இன்றைய ஆட்டத்தில் நாங்கள் தோல்வியை தழுவினோம்.

இலங்கை அணி பேட்டிங் ஆரம்பத்திலும் சரி, ஆட்டத்தை முடித்ததிலும் சரி சிறப்பாக செயல்பட்டனர்.

கடைசி கட்டத்தில் சிறந்த பவுலர்கள் பந்து வீசவேண்டும் என முடிவு செய்தேன். அதனாலேயே ஆட்டத்தின் கடைசி ஓவருக்கு முதல் ஓவரை ஷகினிடம் கொடுத்தேன். அதன்பின், இறுதி ஓவரை சமான் கானிடம் கொடுத்தேன். அவர்மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று தோல்வியை தழுவினோம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News