சினிமா

கேரள கனமழை - முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் வழங்கிய நடிகை ரோஹிணி

Published On 2018-08-15 10:09 GMT   |   Update On 2018-08-15 10:09 GMT
தொடர் கனமழையால் கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், நடிகை ரோஹிணி கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் அளித்துள்ளார். #KeralaRain #Rohini
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. 15 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை நிரம்பியுள்ளது. அதேபோல் முல்லை பெரியாறு அணையும் 142 அடியை தொட்டுள்ளது. 

மொத்தமாக 33 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பெரும்பாலான ஏரிகள், குளங்களும் நிரம்பிவிட்டன. 

வரலாறு காணாத பேரழிவை கேரள சந்தித்துள்ளதால் இதுவரை 186 பேர் உயிர் இழந்துள்ளனர். 211 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



இந்த மழை காரணமாக மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடி சேதமடைந்துள்ளதாக முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒதுக்கி உள்ள ரூ.100 கோடி போதாது என்றும் முதல் கட்டமாக ரூ.1200 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. அதேபோல் பிரபலங்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அனுப்பி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் ரூ.25 லட்சம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், நடிகை ரோஹிணி ரூ.2 லட்ச ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். #KeralaRain #KeralaFloods #Rohini

Tags:    

Similar News