search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகாசி விசாகம் திருவிழா"

    திருப்பரங்குன்றம், சோலைமலையில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முருகப்பெருமான் திருவீதி உலா வந்தார்.
    தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் முதற்படை வீடு என்ற பெருமை கொண்ட திருத்தலமாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவில் அமைந்து உள்ளது. அறுபடைவீடுகளிலேயே திருமண திருத்தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. கோவிலின் கருவறை மலையை குடைந்து அமைந்துள்ளதால், குடவரை கோவிலாக சிறப்பு கொண்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

    அதே போல இந்த ஆண்டிற்கான விசாக திருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து வசந்த மண்டபத்திற்கு சாமி எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்று முருகப்பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 28-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 5 மணிக்கு சண்முகர் சன்னதியில் இருந்து வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமான், தனது சன்னதியை விட்டு இடம் பெயர்ந்து கொறடு மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சாமிக்கு குடம் குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது.

    முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திகடனாக பால்குடம் சுமந்தும், பல்வேறு வகையான காவடிகளை எடுத்தும் கோவிலுக்கு வருகிறார்கள். திருவிழா காலங்களில் உற்சவர் சன்னதியில் இருந்து சாமி தெய்வானையுடன் (உற்சவர்) எழுந்தருளி நகர் வலம் வருவது வழக்கம். ஆனால் விசாக திருவிழாவில் மட்டும் ஆண்டிற்கு ஒரு முறை சண்முகர் தனது சன்னதியை விட்டு இடம்பெயருவது தனி சிறப்பாகும்.

    இதேபோல அழகர்மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலைமுருகன் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது வைகாசி மாத வசந்த உற்சவ திருவிழாவாகும். இந்த விழா கடந்த 19-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. இதில் காப்புகட்டுதல், சண்முகார்ச்சனை, மகாபிஷேகம், சாமி புறப்பாடு நடந்தது.

    நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்று, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பிரகாரங்கள் வழியாக முருகப்பெருமான் புறப்பாடு நடந்தது. விழாவை தொடர்ந்து தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வருகிற 28-ந்தேதி 10-ம் நாள் திருவிழாவுடன் வசந்த உற்சவ திருவிழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்பட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
    ×