search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசுவாசம்"

    • சரீரத்தை விட மதிப்பு மிக்கது நமது ஜீவன்.
    • நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்.

    சரீரத்திற்கு தேவையானவற்றை மனிதர்கள் சேமிக்கிறார்கள். ஆனால் சரீரத்தை விட மதிப்பு மிக்கது நமது ஜீவன். அது நித்திய நித்திய காலம் வாழக்கூடியது என்பதை உணர முடியாமல் மனிதன் இருப்பது வருந்தத்தக்கது.

    கல்வி கற்கின்ற ஒருவன் தான் வேலைவாய்ப்பு பெற, அடுத்து என்ன படிக்க வேண்டும் என கற்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறான். நோய்வாய்ப்பட்ட ஒருவர், ஏற்கனவே வியாதிப்பட்டு குணமடைந்த ஒருவரிடம் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றீர்கள் என விசாரிக்கிறார்.

    இப்படியாக எல்லாவற்றிற்கும் ஆலோசனை கேட்கும் நாம் மரித்தும் உயிரோடு எழுந்த இயேசுவிடம், நமது நித்திய வாழ்வுக்கான வழியை கேட்டு தெரிந்து கொள்ள விருப்பமற்றவர்களாக இருக்கிறோம்.

    'மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவனாயிருக்கிறேன்' (வெளி 1:18) என இயேசு கூறுகிறார்.

    கடவுளிடம் வேண்டினால் விண்ணுலகை அடையலாம் என்றும், நன்மை செய்தால் மறுவாழ்வு உண்டு என்றும் பொதுவாக நம்மில் சிலர் நினைப்பது உண்டு.

    ஆனால் வேத வசனத்தில் தேவன் நமக்கு ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது (1 யோவான் 5:11,12) என்று கூறப்பட்டுள்ளது.

    அதாவது கடவுள் நமக்கு நித்திய முடிவில்லாத வாழ்வை தந்தது உண்மைதான். ஆனால் அந்த வாழ்வு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் இருக்கிறது என்றும், கிறிஸ்துவை உடையவன் ஜீவனை உடையவன் என்றும் வேதம் கூறுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பொழுது, தாங்கள் ஆசீர்வாதமாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். குறிப்பாக செல்வச்செழிப்பான வாழ்க்கை மற்றும் வியாதி இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள், தாங்கள் ஆசீர்வாதமாக இருப்பதாக எண்ணிக்கொள்வது உண்டு. ஆனால் இவை அனைத்தும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள்.

    இவை எல்லாவற்றிற்கும் மேலான ஆசீர்வாதத்தை கடவுள் நமக்கு வைத்திருக்கிறார். அது தான் நித்திய வாழ்வு. முடிவில்லாத வாழ்க்கை. நிரந்தரமாக வாழ்கிற வாழ்க்கை. மரித்த பின்பு ஒரு வாழ்க்கையா? என நம்மில் சிலர் வாக்குவாதம் பண்ணுவது உண்டு.

    ஆனால் வேதம் கூறுகிறது, "கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வான்.

    என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்" (யோவான் 16.7).

    "நித்திய ஜீவனை தருவேன் என்பதே அவர் நமக்குத் தந்த வாக்குத்தத்தம்" (1 யோவான் 2:25).

    இந்த பூமியில் தன்னுடைய வாழ்வை காப்பாற்ற போராடுகிற மனிதன், தான் மரித்த பின்பு தன்னுடைய சரீரத்தை விட்டு பிரிகிற ஜீவன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என யோசிக்க தவறி விடுகிறான்.

    "ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும், அது அவனுக்கு ஜீவன் அல்ல" என்று (லூக் 12:15) வேதம் கூறுகிறது. "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

    மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" என்று (மத்.16.26) வேதம் கூறுகிறது.

    "நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோவான் 1.25) என்று இயேசு கூறுகிறார். தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய வாழ்வு மட்டுமல்ல, உலக ஐசுவரியங்களையும் கொடுக்க தேவன் விரும்புகிறார்.

    "நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டும் என்பதே நம் தேவனுடைய விருப்பம். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும்" (நீதிமொழிகள் 10-12).

    "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" என்று பிலிப்பியர் 4:20 கூறுகிறது.

    எப்படி கிறிஸ்து வழியாக நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வது நிச்சயமோ, அதுபோல இவ்வுலகில் நம்முடைய எல்லா தேவைகளும் கிறிஸ்து வழியாக நிறைவாக்கப்படும் என்று வேதம் கூறுகிறது.

    எதை உடுப்போம்; எதை குடிப்போம் என்று கவலைப் படாதீர்கள். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:31-33) என்பதே கர்த்தருடைய வார்த்தை.

    கடவுள் நமக்கு ஐசுவரியங்களைத் தருவது நிச்சயம். ஆனால் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தில் நித்தியகாலம் வாழ்கிற வாழ்க்கையை நாம் விரும்பித் தேட வேண்டும். அப்படி நாம் செய்யும் போது இவ்வுலகில் நாம் மகிழ்ச்சியாக வாழ என்ன தேவையோ, அவை எல்லாவற்றையும் சேர்த்து தர அவர் வல்லமை உள்ள தேவன்.

    ஒருவேளை இன்று ஏதோ ஒரு தேவையைக் குறித்து கவலையோடு இருக்கிறீர்களா? கலங்காதீர்கள். அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் எல்லா ஆசீர்வாதங்களாலும் நிரப்ப விரும்புகிறார். ஏனென்றால் அவர் உங்களை நேசிக்கிறார். இம்மையிலும் மறுமையிலும் நாம் ஆசீர்வதிக்கப்பட அவரை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்வோம், ஆமென்.

    ×