search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாபஸ் இல்லை"

    சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை என டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். #DonaldTrump #Syria #WhiteHouse
    வாஷிங்டன்:

    சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் இருந்து தனது நாட்டு படைகள் வெளியேறும் என்று அறிவித்தார். இது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகளுடன் இணைந்து சண்டையிட்டு வரும் குர்து போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் துருக்கி அரசுடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் ‘சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரை தோற்கடிக்கும் வரை அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படமாட்டாது. அதேபோல் குர்து போராளிகளின் பாதுகாப்பையும் துருக்கி அரசு உறுதி செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், “சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படும் வரை சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறாது என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

    துருக்கி அரசு குர்து போராளிகளை தனது நாட்டில் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
    சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.32,500 கோடி) அளவிற்கு தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப பொருட்களின் மீது 25 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக கடந்த மாத மத்தியில் ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இதற்கு பதிலடியாக சீனாவும், அமெரிக்காவில் இருந்து தனது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் 545 முக்கிய பொருட்களுக்கு 34 பில்லியன் டாலர்கள் அளவிற்கு கூடுதல் வரியை விதித்தது. இதையடுத்து டிரம்ப், சீன பொருட்களுக்கு மேலும் 200 பில்லியன் டாலர்கள் மதிப்பில் கூடுதல் வரியை அண்மையில் சீன பொருட்களுக்கு விதித்தார். இதற்கு சீனாவும் தக்க பதிலடி கொடுத்தது.

    இந்த நிலையில், டிரம்ப் அமெரிக்காவின் ‘பாக்ஸ்’ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இந்த விஷயத்தில் சீனா உடன்பாடு காண விரும்பினால் அதுபோல் அமெரிக்காவும் நடந்துகொள்ளும். ஆனால் இது அமெரிக்காவுக்கு நியாயம் கிடைக்கும் உடன்பாடாக இருக்கவேண்டும். இல்லையென்றால் சீனப் பொருட்கள் மீதான கூடுதல் வரியை அமெரிக்காவால் 500 பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்க இயலும். அதே நேரம் சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இதுவரை இல்லை” என்றார். 
    ×