search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராயல் சேலஞ்சர்ஸ்"

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி திரில் வெற்றியை பெற்றது. #IPL2019 #RCBvMI

    பெங்களூரு:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டது. கடந்த ஆண்டு ஆலோசகராக இருந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா இந்த சீசனில் ஒரு வீரராக மும்பை அணிக்கு திரும்பினார்.

    ‘டாஸ்’ ஜெயித்த பெங்களூரு கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து குயின்டான் டி காக்கும், கேப்டன் ரோகித் சர்மாவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டிற்கு துரத்தியடித்த இவர்கள் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் 52 ரன்கள் திரட்டினர். இந்த ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பிரித்தார். அவரது பந்து வீச்சில் ‘ரிவர்ஸ் ஸ்வீப்’ ஷாட் அடிக்க முயற்சித்த டி காக் (23 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து சூர்யகுமார் யாதவ் வந்தார். மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா 48 ரன்கள் (33 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த திருப்தியுடன் நடையை கட்டினார்.




    அடுத்து வந்த யுவராஜ்சிங், யுஸ்வேந்திர சாஹலின் சுழலில் ‘ஹாட்ரிக்’ சிக்சர்கள் விளாசி அட்டகாசப்படுத்தினார். ஆனால் மறுபடியும் அதே ஓவரில் பந்தை தூக்கியடித்த போது எல்லைக்கோடு அருகே முகமது சிராஜூவினால் அருமையாக கேட்ச் செய்யப்பட்டார். யுவராஜ்சிங் 23 ரன்களில் (12 பந்து, 3 சிக்சர்) வெளியேறினார்.

    அதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் (38 ரன், 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), பொல்லார்ட் (5 ரன்) ஆகியோருக்கு ஒரே ஓவரில் சாஹல் ‘செக்’ வைத்தார். தொடர்ந்து குருணல் பாண்ட்யா, மெக்லெனஹான் தலா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து விக்கெட் சரிவால் ரன்வேகம் சற்று தளர்ந்தாலும் கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார். இறுதி ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.

    20 ஓவர் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களுடன் (14 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். பெங்களூரு தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 188 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. தொடக்க ஆட்டக்காரர் மொயீன் அலி 13 ரன்னில் தேவையில்லாமல் ரன்-அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து பார்த்தீவ் பட்டேல் 31 ரன்னிலும், கேப்டன் விராட் கோலி 46 ரன்களிலும் (32 பந்து, 6 பவுண்டரி), ஹெட்மயர் 5 ரன்னிலும் வீழ்ந்தனர். இதில் கோலி ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டியில் 5 ஆயிரம் ரன்களை எட்டிய 2-வது வீரர் (முதலில் சுரேஷ் ரெய்னா) என்ற சாதனையுடன் வெளியேறினார்.

    மறுமுனையில் டிவில்லியர்ஸ் போராடினார். அவர் ரன் கணக்கை தொடங்கும் முன்பே ஸ்லிப்பில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை யுவராஜ்சிங் கோட்டை விட்டார். அதை சாதகமாக பயன்படுத்தி சிக்சர் மழை பொழிந்த டிவில்லியர்ஸ் 31 பந்தில் அரைசதத்தை எட்டினார்.

    கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா, கிரான்ட்ஹோமின் (2 ரன்) விக்கெட்டை கபளகரம் செய்ததுடன் அந்த ஓவரில் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    இதையடுத்து கடைசி ஓவரில் பெங்களூரு அணிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட ஷிவம் துபே சிக்சர் அடித்தார். அடுத்த பந்தில் அவர் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்து ஒரு ரன் எடுத்தார். எஞ்சிய 4 பந்தில் 3 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்த மலிங்கா தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

    பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. டிவில்லியர்ஸ் 70 ரன்கள் (41 பந்து, 4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. மும்பை தரப்பில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். பெங்களூரு தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.

    #IPL2019 #RCBvMI
    ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #IPL2019 #CSK #RCB
    சென்னை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல். போட்டியையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்கள் 4 அடுக்கு பாதுகாப்பை கடந்த பிறகே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    நுழைவு வாயில் இருந்து ஸ்டேடியத்தில் உள்ள இருக்கை வரை இந்த 4 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    கமாண்டோ உள்பட 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும் மைதானத்தை சுற்றிலும் சிறப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    கடந்த ஐ.பி.எல். போட்டியின் போது காவிரி போராட்டம் காரணமாக மைதான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து ஐ.பி.எல். போட்டி புனேக்கு மாற்றப்பட்டது.


    கடந்த முறையை போல தற்போது எந்த விதமான அசம்பாவித சம்பவமும் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஸ்டேடியத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சேப்பாக்கம் ஸ்டேடியத்தை சுற்றிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு நிபுணர்களும் மோப்பநாயும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ரசிகர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.



    வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல்களுக்கும் கூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல போலீசாருடன் தனியார் தன்னார்வ தொண்டர்களும் இணைந்து பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டிக்காக சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். போட்டி முடிந்து ரசிகர்கள் செல்வதற்கு வசதிக்காக இந்த ரெயில்கள் இயக்கப்படுகிறது. #IPL2019 #CSK #RCB 
    ×