search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியபாளையம் கோவில்"

    • கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.
    • மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருவள்ளூர்:

    சென்னை கோயம்பேடு அடுத்த பாடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி சுகந்தி(வயது39). இவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

    சாமி தரிசனம் முடிந்ததும் அனைவரும் பூண்டி ஏரிக்கு சென்று அங்கு சமைத்து சாப்பிட்டனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகுமாரின் மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் சிலர் பூண்டி ஏரியில் குளித்தனர்.

    ஆழமான பகுதிக்கு சென்ற சுகந்தி தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டனர். மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்ட அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகந்தி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • 91 கிலோ 61 கிராம் எடையுள்ள தூய தங்கக்கட்டிகள் திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது.
    • ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.1.04 கோடி கோவில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

    சென்னை:

    இந்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெரியபாளையம், பவானியம்மன் கோவிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பலமாற்று பொன் இனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அரக்கு, அழுக்கு, போலிக் கற்கள் மற்றும் இதர உலோகங்கள் நீக்கப்பட்டு 130 கிலோ 512 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இப்பொன் இனங்களை இத்திருக்கோவில் பரம்பரை அறங்காவலர் தீர்மானத்தின் அடிப்படையில் மும்பையிலுள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி தூய தங்கக் கட்டிகளாக மாற்றி பாரத ஸ்டேட் வங்கியின் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரமாக முதலீடு செய்திடும் பொருட்டு, 91 கிலோ 61 கிராம் எடையுள்ள தூய தங்கக்கட்டிகள் திருக்கோவில் நிர்வாகத்தின் மூலம் பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.46 கோடியே 31 இலட்சம் ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25 சதவீதம் ஆகும்.

    இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித்தொகையான ரூ.1.04 கோடி கோவில் சார்ந்த திருப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

    இந்நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி துரைசாமிராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பெரியபாளையம் பவானி அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    திருவள்ளூர்:

    பெரியபாளையம் பவானியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடிப் பெருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 14 வாரங்கள் விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    நேர்த்தி கடன் செலுத்த தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து பெரியபாளையம் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    பக்தர்களின் வசதிக்காக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி, கோவிலை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு, குடிநீர், கழிப்பிட வசதி, இருப்பிட வசதி உட்பட பல்வேறு வசதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இதில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், ஊத்துக் கோட்டை துணை கண்காணிப்பாளர் சாரதி கலந்து கொண்டனர்.

    ×