search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரியாணி விருந்து"

    • திருமங்கலத்தை அடுத்துள்ள பி.அம்மாபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • நள்ளிரவில் பிரியாணி தயாரான பிறகு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் சிறிய முதல் பெரிய அளவில் குலதெய்வ கோவில்கள் உள்ளன. இங்கு வருடந்தோறும் திருவிழாக்கள் நடைபெறும். அப்போது கிடாய்கள் பலியிட்டு பிரியாணி மற்றும் அசைவ விருந்து தயாரித்து பக்தர்களுக்கு பரிமாறப்படும். இதில் திரளானோர் பங்கேற்பார்கள்.

    அதன்படி திருமங்கலத்தை அடுத்துள்ள பி.அம்மாபட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். நேற்று மாலை கோவில் முன்பு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பிரியாணி தயாரிக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட கிடாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெட்டப்பட்டு ரத்தம் கோவில் முன்பு தெளிக்கப்பட்டது. அப்போது பலியை அம்மன் ஏற்றுக்கொள்வதாக ஐதீகம்.

    அதன்பின் வெட்டப்பட்ட கிடாய்கள் மூலம் 1500 கிலோ பிரியாணி தயார் செய்யப்பட்டது. இந்த பணியில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். நள்ளிரவில் பிரியாணி தயாரான பிறகு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

    அம்மாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்வேறு சமுதாய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி கோவில் திருவிழாவை நடத்தினர். வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பேறு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி கொடுக்கும் சக்தி வாய்ந்த அம்மனாக காளியம்மன் அருள்பாலிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    ×