search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதிய ராஷ்டிர சமிதி"

    • 2018ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது
    • காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர் என்றார் ஒவைசி

    இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து, இறுதி முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 2018-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 47 சதவீத வாக்குகளை பெற்று பாரத ராஷ்டிரிய சமிதி (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது.

    இந்திய தேசிய காங்கிரஸால் 19 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 30 அன்று தெலுங்கானா சட்டசபையில் உள்ள 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெல்வதற்கு அங்கு பாரதிய ராஷ்டிர சமிதியை தவிர, காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் களத்தில் உள்ளன. பிரசாரத்தில் அனல் பறக்கும் விமர்சனங்கள் நடைபெறுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, வாக்கு சேகரிப்பின் போது ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பி.ஆர்.எஸ்., ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானா தேர்தலில் ஐதராபாத்திற்கு உட்பட்ட 9 இடங்களுக்கு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அங்குள்ள நம்பள்ளி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் பிரசாரம் செய்தார்.

    அப்போது ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

    காங்கிரஸ் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    பிறரை குற்றம் சாட்டும் முன் ராகுல் காந்தி கண்ணாடியில் தன்னை பார்த்து கொள்ள வேண்டும். 2019ல் 540 பாராளுமன்ற இடங்களுக்கு போட்டியிட தலைமையேற்ற ராகுல் காந்தியால் அக்கட்சிக்கு 50 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் கிடைத்தது. இது ஏன்? நீங்கள் (ராகுல்) பிரதமர் மோடியிடம் இருந்து எவ்வளவு தொகையை பெற்றீர்கள்? மைனாரிட்டி ஆதரவாளர்கள் என சொல்லி கொண்டு, பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்கு காரணமான சிவசேனையுடன் காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் கூட்டணி வைத்திருக்கிறது. மைனாரிட்டிகளுக்கும் ஏழைகளுக்கும் குரலாக ஏ.ஐ.எம்.ஐ.எம். வளர்ச்சி பெற்று வருவதால் எங்களை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இங்க் தெளிக்கப்பட்ட வெறும் காகிதம்; அதில் ஒன்றுமில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமண திட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பலன் கிடைக்குமே தவிர இஸ்லாமியர்களுக்கு பலன் எதுவும் இல்லை. எங்கள் ஆடைகளையும், தொப்பிகளையும் நோக்கி காங்கிரஸார் விரல் நீட்டும் போது அன்பு குறித்து அவர்கள் பேசுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்? தெலுங்கானாவில் அவர்கள் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டவர் என்பதை மறக்காதீர்கள்.

    இவ்வாறு ஒவைசி பேசினார்.

    • 2018ல் கே.சி.ஆர். கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது
    • கே.சி.ஆர். குடும்பத்தினரால் மாநிலம் முழுவதும் ஊழல் பரவி உள்ளது என்றார் ராகுல்

    தெலுங்கானாவில், வரும் நவம்பர் 30 அன்று அம்மாநில சட்டசபையின் 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலின் முடிவுகள், டிசம்பர் 30 அன்று வெளியிடப்படும்.

    கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் - தற்போது பி.ஆர்.எஸ். என பெயர் மாற்றப்பட்டுள்ள (பாரத் ராஷ்டிர சமிதி) அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வென்றது. அதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் ஆட்சியமைத்தார்.

    தற்போது அவருக்கு எதிராக தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. இக்கட்சிகளை தவிர அசாதுத்தீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். (AIMIM) கட்சியும் போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கம்மம் மாவட்ட பினபாகா மற்றும் வாரங்கல் மாவட்ட நரசம்பேட்டை பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவு தேடி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் வெற்றி எனும் புயலை எதிர்கொள்ள கே.சி.ஆர். தயாராக வேண்டும். மக்களாட்சியை கொண்டு வர காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. தெலுங்கானாவில் நிலவும் ஊழல் மக்களை சலிப்படைய செய்து விட்டது. பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள அனைத்து துறைகளையும் தன் குடும்பத்தின் வசம் வைத்து கொண்டு ஊழலை வளர்த்திருக்கிறார், கே.சி.ஆர். காங்கிரஸ் இலவசமாக ஏழைகளுக்கு அளித்த விவசாய நிலங்களை கே.சி.ஆர். அரசு டிஜிட்டல்மயமாக்கல் எனும் பெயரில் பதிவுகள் இல்லாமல் அழித்து விட்டது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், கே.சி.ஆர். குடும்பம் ஏமாற்றி அபகரித்து வைத்துள்ள செல்வத்தை மீட்டு மக்களுக்கு செலவு செய்வோம். தனி தெலுங்கானா அமைய பாடுபட்ட கட்சி காங்கிரஸ் கட்சிதான். ஐதராபாத் நகரை "மென்பொருள் துறை தலைநகர்" (IT Capital) என மாற்றியதும் காங்கிரஸ் கட்சிதான். தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் பா.ஜ.க., பி.ஆர்.எஸ்., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகியவை மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளன.

    தெலுங்கானாவில் மக்களாட்சி அமைந்ததும், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்பட்டு காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

    • சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.
    • பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது.

    கம்மம் :

    தெலுங்கானாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தி மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கம்மம் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது மாநிலத்தை ஆளும் பாரதிய ராஷ்டிர சமிதி அரசையும், முதல்-மந்திரி சந்திரசேகர் ராவையும் கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    'பாரதிய ராஷ்டிர சமிதி' என்பது, 'பா.ஜனதா உறவினர் சமிதி' போலத்தான். சந்திரசேகர் ராவ், தன்னை ஒரு பேரரசராகவும், தெலுங்கானாவை தனது பேரரசாகவும் நினைத்துக்கொள்கிறார்.

    பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பா.ஜனதாவுக்கு எதிராகத்தான் நின்று இருக்கிறது. ஆனால் சந்திரசேகர் ராவின் கட்சி, பா.ஜனதாவின் பி டீமாகத்தான் உள்ளது.

    சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்களை பா.ஜனதாவுக்கு அடிபணியச் செய்துள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் ரிமோட் கண்ட்ரோல், பிரதமர் மோடியிடம் இருக்கிறது.

    சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் சேராது. இதை பிற எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கூறிவிட்டேன்.

    காங்கிரஸ் கட்சி சமீபத்தில் கர்நாடகத்தில் ஒரு ஊழல் மற்றும் ஏழை விரோத அரசுக்கு எதிராக வெற்றி பெற்றது. ஏழைகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் ஆதரவுடன் நாங்கள் அவர்களை தோற்கடித்தோம்.

    இது தெலுங்கானாவிலும் நடைபெறும். மாநிலத்தின் பெரும் பணக்காரர்கள், அதிகாரம் மிக்கவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர். மறுபுறம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்கள் எங்களுடன் இருக்கின்றனர். கர்நாடகாவில் நடந்தது இங்கேயும் நடக்கும்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

    • விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்.
    • எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம்.

    ஐதராபாத் :

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட அம்பேத்கர் சிலையை முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய அவர், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்தியில் பாரதிய ராஷ்டிர சமிதி ஆட்சி அமைக்கும் என கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பாரதிய ராஷ்டிர சமிதி மராட்டியத்தில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்றது. மேற்கு வங்காளம், பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலும் இதைப்போன்ற ஆதரவை எதிர்பார்க்கிறது. நான் சில விஷயங்களைச் சொல்கிறேன். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் அடுத்த அரசு நம்முடையது.

    இதை நம் எதிரிகள் சிலரால் ஜீரணிக்க முடியாமல் போகலாம். ஆனால் விளக்கேற்ற ஒரு தீப்பொறி போதும்' என்று கூறினார். மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தலித் பந்து திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் சந்திரசேகர் ராவ் கூறினார்.

    இந்த திட்டத்தின் கீழ், தலித் குடும்பத்தினருக்கு தொழில் தொடங்குவதற்காக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.
    • கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.

    ஐதராபாத் :

    தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) என்ற பெயரில் கடந்த 2001-ம் ஆண்டு கட்சி தொடங்கினார். தெலுங்கானா பிரிவினைக்காக பாடுபட்ட அவர், மாநில பிரிவினைக்குப்பின் தெலுங்கானாவில் ஆட்சியையும் பிடித்து உள்ளார்.

    இந்த நிலையில் தனது கட்சியை கடந்த அக்டோபர் மாதம் தேசிய கட்சியாக மாற்றி, பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) என பெயரையும் மாற்றி சந்திரசேகர் ராவ் அறிவித்தார்.

    பின்னர் இதற்கு அங்கீகாரம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு டி.ஆர்.எஸ். கட்சி கடிதம் அனுப்பியது. இந்த பெயர் மாற்றத்துக்கு தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பாரதிய ராஷ்டிர சமிதியாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி கட்சித்தலைமை அலுவலகத்தில் சந்திரசேகர் ராவ் கொடியேற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    ×