search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாடி"

    பாடியில் முதியவரை ஆட்டோவில் கடத்தி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    பாடி வடக்கு மாடவீதியை சேர்ந்தவர் கோபிநாத் (71). இவர் நேற்று காலை அதே பகுதியில் நடைபயிற்சி சென்றார்.

    அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் கோபிநாத்தை கத்தி முனையில் மிரட்டி கடத்திச் சென்றனர். பின்னர் அவரிடம் இருந்த 6 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் இறக்கிவிட்டு இருவரும் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து கொரட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபிநாத் கடத்தப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    இதில் கோபிநாத்தை கடத்தியது திருநின்றவூர் பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளியான மகேஷ், அவனது கூட்டாளி விஜய் என்பது தெரிந்தது.

    இதையடுத்து திருநின்றவூரில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான இருவரும் இதே போல் பல்வேறு இடங்களில் முதியவர்களையும், தனியாக நடந்து செல்பவர்களையும் ஆட்டோவில் கடத்திச் சென்று கொள்ளையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிந்தது.

    சென்னையை அடுத்த பாடி லூக்காஸ் மேம்பாலம் அருகில் உள்ள 20 அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனர்.
    சென்னை:

    சென்னையை அடுத்த பாடி லூக்காஸ் மேம்பாலம் அருகில் 20 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் 18 வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

    தீயின் புகை வெளியேறியதால் வீடுகளில் இருந்து மக்கள் பதட்டத்துடன் வெளியேறினார்கள். தீயணைப்புத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மிக உயர்ந்த கட்டிடம் என்பதால் சாதாரன தீயணைப்பு வண்டிகள் மூலம் தீயை அணைக்க இயலாது என்பதால் ராட்சத தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன.

    அம்பத்தூர், வில்லிவாக்கம், ஜெ.ஜெ. நகர், கோயம்பேடு, எழும்பூர் ஆகிய பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனங்களில் உள்ள நவீன கருவிகள் மூலம் வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    18 மாடி உயரத்திற்கு எழுப்பப்பட்ட ஏணியின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரி கூறுகையில், அடுக்கு மாடியில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும். மிக உயர்ந்த கட்டிடம் என்பதால் அதற்கான வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கப்பட்டது.

    தீ மேலும் அருகில் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றார். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அங்குள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதட்டம் அடைந்தனர். தீ கட்டுக்குள் வந்த பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
    ×