search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி ஆசிரியை"

    மதுரையில் பள்ளி ஆசிரியையிடம் 12 பவுன் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை சத்யசாய் நகரில் உள்ள ரோஜா வீதியை சேர்ந்தவர் வீரபாண்டி.இவரது மனைவி லட்சுமி பிரபா(வயது30), இவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    இவர் தினமும் மதுரையில் இருந்து பஸ்சில் அறந்தாங்கிக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று காலை லட்சுமி பிரபா எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்திற்கு தனது மொபட்டில் புறப்பட்டார். புதூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று லட்சுமி பிரபாவை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினான்.

    இதுகுறித்து புகாரின் பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகிறார்கள்.

    பழனியில், ஓடும் ஆட்டோவில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #PalaniSchoolTeacher #pavithra
    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் தில்லையாடி வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் பகவதி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு பவித்ரா (வயது 24), மயில், அனிதா ஆகிய மகள்கள் உள்ளனர். பி.ஏ. படித்துள்ள பவித்ரா, பழனியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கு, அடுத்த மாதம் (ஆகஸ்டு) திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை இவர், கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வீட்டைவிட்டு வெளியே சென்றார். பின்னர் பழனி ஆர்.எப். ரோட்டில் ஒரு வாலிபரை அவர் சந்தித்தார். அங்கிருந்து அவர்கள் 2 பேரும், முத்துராமலிங்கம் என்பவரின் ஆட்டோவில் அடிவாரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    ஆட்டோவில் ஏறியதில் இருந்தே பவித்ராவிடம் அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. பழனி பூங்கா ரோட்டில் உள்ள தேவர் சிலை அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது, ஆட்டோவில் இருந்து திடீரென பவித்ரா அலறினார். இதனால் திடுக்கிட்ட டிரைவர் முத்துராமலிங்கம் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தினார்.

    இதனையடுத்து அந்த வாலிபர், ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து தப்பியோடி விட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பவித்ரா ரத்தவெள்ளத்தில் ஆட்டோவுக்குள் இருந்தார். அவர் அருகே, ஒரு பிளேடு கிடந்தது. அந்த பிளேடால் அவருடன் பயணம் செய்த வாலிபர், பவித்ராவின் கழுத்தை அறுத்திருப்பது தெரியவந்தது.

    இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த முத்துராமலிங்கம், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பவித்ராவை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆசிரியை பவித்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிசென்ற பவித்ராவின் உறவினர் மாயவனை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் தான், பவித்ரா கழுத்து அறுக்கப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #PalaniSchoolTeacher #pavithra
    நாகை அருகே பள்ளி ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ-மாணவிகள் கதறி அழுது பாச போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1939-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியைகள்-ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இரண்டாம் வகுப்பு ஆசிரியையாக இசபெல்லா ஜூலி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி, இசபெல்லா ஜூலியை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார். பள்ளி ஆசிரியையின் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் குவிந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியை இசபெல்லா ஜூலியை சூழ்ந்து கொண்டு, நீங்கள் வேறு பள்ளிக்கு போகக்கூடாது என்று கூறி அவரது கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    மாணவ, மாணவிகளின் பாசப்போராட்டத்தை கண்ட ஆசிரியையும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அங்கு நடைபெற்ற மாணவர்கள், ஆசிரியையின் பாச போராட்டத்தை கண்ட பெற்றோர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டனர். மாணவ, மாணவிகள் ஆசிரியையை கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. 
    நெல்லையில் பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய ரூ.3¼ லட்சம் லஞ்சம் வாங்கிய உதவி தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ரேச்சல் ஜானட் (வயது 42). இவர் நம்பித்தலைவன் பட்டயத்தில் உள்ள ஆர்.சி. தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பள்ளிக்கூட நிர்வாகம் பணி நியமனம் செய்த போதும், கல்வித்துறை அந்த பணியை நிரந்தரம் செய்து ஒப்புதல் அளிக்கவில்லை.

    பணி நிரந்தரம் செய்வதற்கு களக்காடு உதவி தொடக்க கல்வி அலுவலர் இசக்கிமுத்து, அவருடைய உதவியாளர் கனகசபாபதி ஆகியோர் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்று ஆசிரியையின் சகோதரர் ஜான் வின்சென்ட்டிடம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜான் வின்சென்ட் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து போலீசாரின் அறிவுரைபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்தை நேற்று மாலையில் நெல்லையில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு ஜான் வின்சென்ட் கொண்டு சென்றார். அங்கு இருந்த இசக்கிமுத்து, கனகசபாபதி ஆகியோர் அந்த பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக 2 பேரையும் பிடித்து கைது செய்தனர்.

    ×