search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை தொடக்கம்"

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி நாளை கடைசி டெஸ்டில் களம் இறங்குகிறது. #AUSvIND
    சிட்னி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அடிலெய்டு மற்றும் மெல்போர்னில் நடந்த டெஸ்டுகளில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மெல்போர்னில் கிடைத்த வெற்றியால் அதிக நம்பிக்கையை பெற்றுள்ள இந்திய அணி, கடைசி டெஸ்டிலும் சாதிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகியுள்ளது.

    இந்திய அணி 1947-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. ஏன், எந்த ஒரு ஆசிய அணியும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. தற்போது இந்திய அணிக்கு புதிய வரலாறு படைக்க பொன்னான வாய்ப்பு கனிந்துள்ளது. கடைசி டெஸ்டில் டிரா செய்தாலே தொடரை வசப்படுத்தி விடலாம். இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது. புஜாரா (2 சதத்துடன் 328 ரன்), கேப்டன் விராட் கோலி (259 ரன்) நல்ல பார்மில் உள்ளனர். மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து தருவது அவசியமாகும். அப்போது தான் மிடில்வரிசை பேட்ஸ்மேன்கள் நெருக்கடியின்றி விளையாட முடியும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (20 விக்கெட்), முகமது ஷமி (14 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (11 விக்கெட்) வலு சேர்க்கிறார்கள்.

    இந்திய மிடில் வரிசை பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, மனைவிக்கு குழந்தை பிறந்ததால் தாயகம் திரும்பி விட்டார். இதனால் அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும். ஆஸ்திரேலியாவில், சுழற்பந்து வீச்சுக்கு கொஞ்சம் ஒத்துழைக்கும் ஒரே ஆடுகளம் சிட்னி தான். அதனால் காயத்தில் இருந்து ஏறக்குறைய தேறிவிட்ட அஸ்வினை 2-வது சுழற்பந்து வீச்சாளராக சேர்த்துக் கொள்ளலாமா? அல்லது ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு அளிக்கலாமா? என்பது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கிறது. அணியில் யார்-யாருக்கு இடம் கிடைக்கும் என்பது இன்று தெரிந்து விடும்.

    இந்திய அணியின் எழுச்சியால் ஆஸ்திரேலிய அணி கலகலத்து போய் உள்ளது. அனுபவம் வாய்ந்த ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இல்லாததால் அவர்களின் பேட்டிங் வரிசை சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. ஆனாலும் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன் என்று மிரட்டக்கூடிய பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.

    சொந்த மண்ணில் இந்தியாவிடம் தொடரை இழந்ததில்லை என்ற பெருமையை கட்டிக்காப்பதற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லா வகையிலும் கடுமையாக மல்லுகட்டுவார்கள். சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான மார்னஸ் லபுஸ்சானே அழைக்கப்பட்டு இருப்பதால், மிட்செல் மார்ஷ் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்சை கழற்றி விட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க அணி நிர்வாகம் விரும்புவதாக தெரிகிறது. #AUSvIND

    கேரள சட்டசபை நாளை தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #KeralaAssembly
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் செங்கனூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராமச்சந்திரன். சிபிஐ (எம்) கட்சியை சேர்ந்த இவர் கடந்த ஜனவரி மாதம் காலமானார். இதை தொடர்ந்து செங்கனூர் தொகுதிக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட சிபிஐ எம்.மின் சஜி செரியன் சுமார் 20,956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், கேரள சட்டசபை கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கேரள சட்டசபை நாளை தொடங்க உள்ளது. கேள்வி நேரம் முடிந்ததும் புதிதாக தேர்வு செய்யபட்டுள்ள சஜி செரியன் எம் எல் ஏவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும். ஜூன் 21ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். #KeralaAssembly
    ×