search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தக்காளி செடி"

    • தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ.1.50-க்கு வாங்கி நடவு செய்தனர்.
    • ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி விளைவிக்க ரூ.1 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வருடம் முழுவதும் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இங்கு உள்ள தக்காளி மார்க்கெட்டிருந்து உள்ளூர் தேவை போக சேலம், திண்டுக்கல், கோவை , மதுரை, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தற்போது பல தனியார் நிறுவனங்கள் தரமில்லாத தக்காளி விதைகள் விற்பனை செய்ததால் தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ.1.50-க்கு வாங்கி நடவு செய்தனர்.

    இந்த நிலையில் பி.கொல்லஹள்ளி, ரெட்டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, கரகூர், சோமன அள்ளி உள்ளிட்ட கிராமத்தில் தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்டவை பாதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி விளைவிக்க ரூ.1 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளதாகவும், பயிர்களில் வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சவால்களை விவசாயிகள் சந்திக்கும் நிலையில் கிலோ தக்காளி ரூ.10 வரை மட்டுமே தற்போது விற்பனை ஆகிவருகிறது.

    இதனால் விரக்தி அடைந்த பி.கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்த நிகழ்வு விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • தக்காளியில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில், சின்ன வெங்காயத்திற்கு அடுத்தபடியாக தக்காளி விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி தற்போது அறுவடைக்கு வந்துள்ள நிலையில், சில பகுதிகளில் தக்காளியில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தக்காளியில் வாடல் நோயை கட்டுப்படுத்துவது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- பல்லடம் பகுதியில் தக்காளி பயிரிட்ட ஒரு சில தோட்டங்களில் வாடல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நோய் ஏற்பட்ட செடிகளில் தண்டு, இலைகள், மற்றும் பழங்களில் கோடுகள் ஏற்பட்டு இருக்கும். இலைகளில் கருப்பு வட்ட புள்ளிகள் தோன்றி அந்த இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறும். பழங்களில் வட்ட வட்ட புள்ளிகள் ஏற்படும். பழுத்த பழங்களின் கழுத்துப்பகுதி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாக மாறிவிடும். செடியில் உள்ள பேன் மூலம் வாடல் நோய்க்கான வைரஸ் பரவுகின்றது. நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தக்காளி செடிகளை பிடுங்கி அழித்து விட வேண்டும். தக்காளி விதைப்பதற்கு முன் நிலத்தை சுற்றி மக்காச்சோளம், கம்பு ஆகிய பயிர்களை நடவு செய்யலாம். 'இமிடா குளோரைடு' அல்லது ஊடுருவும் பூச்சிக்கொல்லிகளை பரிந்துரையின் பேரில் தெளித்து வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மழை காலங்களில்தக்காளி செடி பாதிப்பதோடு, மண்ணில் விழுந்து காய்களும் அழுகி வீணாகி நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வரும் சூழல் உள்ளது.
    • பந்தல் அமைக்கும் பொழுது மண்ணோடு செடி, காய்கள் ஒட்டாதததோடு மழை பெய்தாலும், தரமான தக்காளி அறுவடை செய்ய முடியும்.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக மாறியுள்ளது. ஆண்டு முழுவதும் சாகுபடி சீசன் காலங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வரை சாகுபடி செய்யப்படுகிறது. மழை காலங்களில்தக்காளி செடி பாதிப்பதோடு, மண்ணில் விழுந்து காய்களும் அழுகி வீணாகி பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வரும் சூழல் உள்ளது.

    இதற்கு தீர்வு காணும் வகையில்தோட்டக்கலைத்துறை சார்பில் தக்காளிச்செடிகளுக்கு குச்சி நட்டு, கம்பி கட்டி நவீன முறையில் பந்தல் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதோடு விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    உடுமலை பகுதிகளுக்கு இத்திட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில் நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:-

    மழை காலங்களில் தக்காளி செடிகள் மற்றும் காய்கள் மண்ணில் விழுந்தும், மழை நீர் வடியாமலும், ஒட்டுமொத்த சாகுபடியும் பாதிக்கிறது.இதற்கு தக்காளி நடவு செய்த வயல்களில் 6 அடி குச்சி நட்டு, 3 வரிசை கம்பி கட்டி, செடிகளை, கயிறு வழியாக இணைத்து, பாதுகாக்கும் தக்காளி பந்தல் நடைமுறை உள்ளது.இவ்வாறு செய்யும் போது மண்ணோடு செடி, காய்கள் ஒட்டாததோடு மழை பெய்தாலும், தரமான தக்காளி அறுவடை செய்ய முடியும்.

    கூடுதல் மகசூல் பெறமுடியும். நடப்பாண்டு முதல் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், பந்தல் அமைத்தால் தோட்டக்கலைத்துறை சார்பில், ஹெக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 100 ஹெக்டர் பரப்பளவில், மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் இந்த நடைமுறையில், பந்தல் அமைத்து, உரிய பில், ஆவணங்களுடன் விண்ணப்பித்து, பின்னேற்பு மானியமாக தொகையை பெற்றுக்கொள்ளலாம்.மேலும், விபரங்களுக்கு தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    ×