search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செம"

    செம படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த அர்த்தனா, பாலியல் தொல்லைகளை மறுக்க தெரிந்தால் போதும் தவிர்க்க முடியும் என்று கூறியிருக்கிறார். #Arthana
    சமுத்திரகனியின் ‘தொண்டன்’ மூலம் நடிகையாக அறிமுகமானவர் அர்த்தனா. தற்போது ஜி.வி.பிரகாஷின் ‘செம’ படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்திருக்கிறார். இவர் தன்னுடைய அனுபவங்களை கூறியிருக்கிறார்.

    எப்படி சினிமாவிற்குள் வந்தீர்கள்? 

    சின்ன வயசிலிருந்தே நடிப்பு எனக்கு பிடிச்ச விசயம். அப்பா, அம்மா நான் எல்லாரும் திருவனந்தபுரம் தான். படிச்சது எல்லாமே அங்கதான். நான் அப்பா அம்மா செல்லம். சின்ன வயசு ஸ்கூல் படிக்கும் போதே டிராமா, கல்ச்சுரல் எல்லாதிலும் நடிப்பேன். ஸ்கூல் முடிக்கும்போதே நான் டீவியில் தொகுப்பாளராக பண்ண ஆரம்பிச்சுட்டேன். 

    காலேஜ்ல விஸ்காம் முடிச்ச பின்னாடி ஒரு மலையாளப் படத்துல சுரேஷ் கோபி சார் கசினுக்கு ஜோடியா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அதற்குப்பிறகு ஒரு தெலுங்குப்படம் பண்ணேன். அப்புறம் தான் சமுத்திரகனி சார் மூலமா ‘தொண்டன்’ படம் வாய்ப்பு கிடைத்தது. இப்ப தமிழில் மூணு படங்கள் பண்ணிட்டேன். 



    மூன்று மொழிகளில் படம் பன்ணிட்டீங்க எந்த இண்டஸ்டரி உங்களுக்கு பிடிச்சிருக்கு? 

    அப்படி எதுவும் இல்லை. ஒவ்வொரு இடத்திலேயும் ஒவ்வொண்னு ஸ்பெஷல் தான். நான் தமிழ்ல தான் மூணுபடம் பண்ணிருக்கேன். மத்த மொழில ஒரு படம் தான் பண்ணிருக்கேன். தமிழ்தான் எனக்கு நெருக்கம்.

    செம பட அனுபவம் எப்படி இருந்தது? 

    ஜி.வி.பிரகாஷ் ரொம்ப நல்ல மனிதர். ஒரு பெரிய நடிகர் போல இல்ல. நல்லா பேசினாரு நிறைய எங்கரேஜ் பண்ணாரு. உண்மையா சொல்லனும்னா செம எனக்கு மூணாவது படம். வெண்ணிலா கபடி குழு 2 தான் முதல்ல கமிட் ஆனேன். அந்த படம் இப்ப ரிலீஸ்க்கு ரெடியா இருக்கு.

    செம படம் என்ன நிறைய இடத்துக்கு கொண்டு போயிருக்கு. இப்படம் மூலமா கிடைச்ச வாய்ப்புதான் ‘கடைக்குட்டி சிங்கம்’ அதுல நான் மூணு ஹிரோயின்ல ஒருத்தரா பண்றேன்.

    கடைக்குட்டிச் சிங்கம்ல என்ன ரோல் பண்றீங்க? அந்தப்படம் எப்படி வந்திருக்கு? 

    ஷூட்டிங் முழுக்க முடிஞ்சிடிச்சு அதில மூணு ஹிரோயின் நடிச்சிருக்கோம். நானும் ஒரு கேரக்டர். இது முழுக்க கிராமத்துல வாழுற ஒரு குடும்பத்த பத்தின கதை. ரொம்ப நாளுக்கு அப்புறம் குடும்ப பிரச்சனைகள பேசுற படமா, குடும்பத்தோடு பாக்குற படமா இது இருக்கும். பாண்டிராஜ் சாரோட பசங்க பட மாதிரி ஒரு எமோசனல் டிராவல் இதுல இருக்கும். படத்துல நான் கிராமத்து பெண்ணா நடிக்கிறேன். இப்போதைக்கு இது மட்டும் சொல்லத்தான் அனுமதி. படம் வர்றப்ப இன்னும் நிறைய பேசலாம். 



    படத்தில் மூணு ஹிரோயின். ஈகோ, சண்டைகள் எதுவும் வரலையா? 

    எனக்கு எப்பவும் வராது, யார் என்ன பண்ணினாலும் நம்ம வேலையை கரைக்ட்டா பண்ணிட்டா எந்தப்பிரச்சனையும் இல்ல. நான் ரொம்ப அமைதி. எனக்கு எப்பவும் ஒரு நல்ல நடிகையா பேர் எடுக்கனும். எமோசன கரக்ட்டர் பண்ற நடிகைன்னு பேர் எடுத்தா போதும். 

    உங்களுடைய கனவு ரோல், கேரக்டர் எதுவும் இருக்கா? 

    நிறைய இருக்கு. எத சொல்றது. எல்லாமே சொல்லலாமா?. நான் புதுசு. நான் சொன்னா ரொம்ப பெரிசா தெரியும். எனக்கு சோசியல் கருத்துக்கள் பத்தி பேசற படத்துல நடிக்கனும். ஒரு பயாக்கிராஃபி படத்தில நடிக்கனும். ஒரு வரலாற்று படத்தில் நடிக்கனும். அப்புறம் ரொம்ப நாள் ஆசை மனநலம் பத்தி நிறைய பேசுற அத சரியா அணுகுற ஒருபடத்தில கண்டிப்பா ஒரு ரோல் பண்ணனும். இன்னும் சொல்லிக்கிட்டே இருப்பேன். இப்போதைக்கு இது போதுமே! 

    சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்மெண்ட் பத்தி இப்போ வெளிப்படையா பெண்கள் பேசுறாங்க, அதப்பத்தி உங்களுடைய கருத்து என்ன ? 

    ஆமா. வெளிப்படையா பேசப்படுறதே நல்லது தானே!. இது இந்தத்துறையில் மட்டும் இல்ல. எல்லாத்துறையிலும் இருக்கு. எனக்கு இது வரை இந்த மாதிரி நடந்ததில்லை. அதற்காக இது சினிமாவில் கிடையாதுனு சொல்லல. இருக்கலாம். பெண்கள் வெளியில் வரும்போது இந்த மாதிரி நடப்பது வருத்தம் தான். ஆனால் உங்கள் சம்மதம் இல்லாம உங்கள யாரும் எதுவும் பண்ணிட முடியாது. எப்படி நோ சொல்வது என்பது எனக்குத் தெரியும். மறுக்க தெரிந்தால் போதும் இதைத் தவிர்க்க முடியும். நோ சொல்ல கற்றுக்கொள்ளுங்கள். இதைத்தாண்டித்தான் பெண்கள் முன்னேற வேண்டும். 

    நீங்கள் இதுவரை நடித்த படங்கள் அனைத்திலும் குடும்பப் பெண்ணாக நடித்திருக்கிறீர்கள். கவர்ச்சியாக நடிப்பீர்களா? மாடர்ன் பெண்ணாக நடிப்பீர்களா?

    எனக்கே ஒரே மாதிரி ரோல் பண்ணுவது போல் தான் இருக்கிறது. இதில் மாட்டிக்கொள்ளக்கூடாது. இதிலிருந்து மாறி நடிக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை. மாடர்ன் ரோல்கள் பண்ண நான் ரெடி. கவர்ச்சி என்பது பார்ப்பவரை பொருத்தது. நான் எனக்கு செட்டாகிற உடைகள் போட்டு நடிப்பதில் எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் ரெடி.

    உங்களுடைய அடுத்த படம் பற்றி? 

    அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகுது. வெண்ணிலா கபடி குழு, கடைக்குட்டி சிங்கம் இரண்டும் ரிலீசுக்கு ரெடி. இப்ப அடுத்து ரெண்டு படங்கள் பேசிட்டு இருக்கேன். இதைத்தவிர மலையாளப்படமும் பேசிக்கிட்டு இருக்காங்க. கூடிய சீக்கிரம் சொல்றேன்.
    ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா, யோகி பாபு, மன்சூர் அலிகான், கோவை சரளா நடிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் ‘செம’ படத்தின் விமர்சனம். #Sema #SemaReview
    திருச்சியில் காய்கறி மற்றும் கருவாடு ஆகியவற்றை லோடு வண்டியில் விற்று வருகிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இவருடன் நண்பர் யோகி பாபுவும் வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் இரவில் குடுகுடுப்புக்காரன் ஜி.வி.பிரகாஷின் வீட்டை பார்த்து, கெட்ட காலம் வரபோகுது என்று சொல்ல, உடனே ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா சிவகுமார், ஜோதிடர் ஒருவரை சந்தித்து ஜாதகம் பார்க்கிறார்.

    அதில் ஜி.வி.பிரகாஷுக்கு மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லை என்றால் 6 வருடம் கழித்துதான் திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். இதனால், அவசரமாக ஜி.வி.பிரகாஷுக்கு பெண் தேடுகிறார்கள். ஆனால், எந்த பெண்ணும் ஜி.வி.பிரகாஷை திருமணம் செய்ய மறுக்கிறார்கள்.



    உள்ளூரில் தான் பெண் கிடைக்க மாட்டுது என்று முடிவு செய்து வெளியூரில் மன்சூர் அலிகான், கோவை சரளாவின் பெண்ணான நாயகி அர்த்தனாவை பெண் பார்க்க செல்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து போக, திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

    இந்நிலையில், அர்த்தனாவை அதே ஊரில் வசிக்கும் எம்.எல்.ஏ.வின் மகன் ஒருதலையாக காதலித்து வருகிறார். அர்த்தனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்து, மன்சூர் அலிகானிடம் நீங்கள் வைத்திருக்கும் கடனை அடைத்து உங்களை பணக்காரனாக்குகிறேன் என்று கூறி, அவர் மனதை மாற்றுகிறார்.

    இதனால், ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனாவின் திருமணத்தை நிறுத்தி விடுகிறார் மன்சூர் அலிகான். திருமணம் நின்றதை நினைத்து ஜி.வி.பிரகாஷின் அம்மா, தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால், கோபமடையும் ஜி.வி.பிரகாஷ், மன்சூர் அலிகானிடம் உன் பெண்ணை திருமணம் செய்து காட்டுவேன் என்று சவால் விடுகிறார்.

    இறுதியில் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய சவாலை வென்றாரா? மன்சூர் அலிகான், எம்.எல்.ஏ. மகனுக்கு அர்த்தனாவை திருமணம் செய்து வைத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    முதன் முறையாக கிராமத்து இளைஞனாக நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். துறுதுறுவென நடித்து மனதில் நிற்கிறார். பெண் கிடைக்காமல் ஏங்குவது, அழகான பெண் கிடைத்தவுடன் கெத்தாக சுற்றுவதும், பெண் கிடைக்காது என்றதும் கோபத்துடன் சவால் விடுபவராகவும் நடித்து கவர்ந்திருக்கிறார்.

    நாயகியாக நடித்திருக்கும் அர்த்தனா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷுடன் படம் முழுக்க வலம் வருகிறார் யோகிபாபு. இவருடைய காமெடி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சுஜாதா சிவகுமார், மன்சூர் அலிகான், கோவை சரளா ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 



    வித்தியாசமான கதையை கையில் எடுத்து படம் இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் வள்ளிகாந்த். முதல் பாதி வழக்கமான திரைக்கதை என்றாலும், பிற்பாதியில் எதிர்பார்க்காத திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்திற்கு பெரிய பலம் காமெடி. அதுபோல், பாண்டிராஜ்ஜின் வசனமும் கைக்கொடுத்திருக்கிறது.

    ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ‘சண்டாளி...’ பாடல் முணுமுணுக்க வைக்கிறது. விவேக் ஆனந்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘செம’ செமதான்.
    வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள அர்த்தனா, படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். #Sema #Arthana
    பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `செம'. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். இவர் `தொண்டன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அப்போது நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

    விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது “இயக்குநர், தயாரிப்பாளர் தொல்லையால் அர்த்தனா அழுததாக சர்ச்சை கிளம்பினாலும் கிளம்பும். அதற்கு நாங்கள் காரணம் இல்லை. படப்பிடிப்பில் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. திருமணத்துக்கு பெண்பார்க்க செல்லும் ஒரு இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகளை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் நகைச்சுவையாக படமாக்கி உள்ளோம்” என்றார்.



    பின்னர் மேடையில் அழுத காரணம் குறித்து நடிகை அர்த்தனா கூறியதாவது:-

    “படப்பிடிப்பில் டைரக்டரோ, தயாரிப்பாளரோ எனக்கு தொந்தரவு கொடுக்கவில்லை. நான் அழுததற்கு காரணம் வேறு. எளிதில் நான் உணர்ச்சிவசப்படுவேன். படப்பிடிப்பில் இயக்குனரும், நடிகர்களும் கஷ்டப்பட்டதை பார்த்தேன். எல்லோருடைய வாழ்க்கையும் இந்த படத்தில் உள்ளது. அதை நினைத்து படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அழுகை வந்தது. இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக வருகிறேன். அடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடிக்கிறேன்”

    இவ்வாறு அர்த்தனா கூறினார். #Sema #GVPrakash #Arthana

    வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `செம' படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அர்த்தனா அவரது அடுத்தடுத்த படங்களிலும் கிராமத்து பின்னணியில் வருகிறார். #Sema #Arthana
    ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனா நடிப்பில் உருவாகி வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `செம'. வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தொண்டன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முக்கி கதாபாத்திரத்தில் நடித்திருந்த அர்த்தனா இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். படம் பற்றி அர்த்தனா பேசும் போது,



    வள்ளிகாந்த் கதை சொன்ன விதமும், என்னுடைய மகிழினி கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. தென் தமிழக பின்னணியில், ஒரு பக்கத்து வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மகிழினி பெயருக்கேற்றார் போல உண்மையானவள், நம் வாழ்வில் எங்கேயாவது அவளை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திக் கொள்ள உதவியாக இருந்த இயக்குனர் வள்ளிகாந்துக்கு நன்றி".



    அர்த்தனாவின் அடுத்த இரண்டு படங்களும் கூட கிராமத்து பின்னணியில் உருவாகும் படங்கள் தான். அவை கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், விக்ராந்த்தின் வெண்ணிலா கபடி குழு. "இந்த இரண்டு படங்களிலுமே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்ததால், கிராமத்து பெண்கள் போல தாவணி உடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். என்னுடைய திரை வாழ்வை 'செம' தொடங்கி வைத்திருக்கிறது. மே 25-ஆம் தேதி ரிலீஸுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நகரத்து பெண் கதாபாத்திரங்களிலும் நடிப்பேன்" என்றார். #Sema #GVPrakashKumar #Arthana

    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘செம’ படம் வெளியாகும் அதே தினத்தில் அதர்வாவின் ‘செம போத ஆகாதே’ திரைப்படமும் வெளியாக இருக்கிறது. #GVPrakash #Atharvaa
    தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார். 

    அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படம் ஜி.வி.பிரகாஷூக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக `செம' படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செம போத ஆகாதே’ படமும் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

    அதர்வாவின் ‘செம போத ஆகாதே’ திரைப்படம் மே 18ம் தேதி வெளியாகிறதாக இருந்தது. அன்றைய தினத்தில் அரவிந்த் சாமியின் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’, விஜய் ஆண்டனியின் ‘காளி’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால், தன் படத்தை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளார் அதர்வா.

    பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் செம போத ஆகாதே படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - அர்த்தனா நடிப்பில் உருவாகி இருக்கும் செம படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிடுகிறார். #Sema #GVPrakashKumar
    தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகியும் வருகிறார். 

    அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படம் ஜி.வி.பிரகாஷூக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இந்த நிலையில், அவரது நடிப்பில் அடுத்ததாக `செம' படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கிறது. டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

    இயக்குநர் பாண்டிராஜின் உதவியாளரான வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அர்த்தனா விஜயகுமார் நடித்திருக்கிறார். யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



    பசங்க புரொடக்சன்ஸ் சார்பில் பாண்டிராஜ் இந்த இந்த படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு, விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். #Sema #GVPrakashKumar #Sivakarthikeyan

    ×