search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை பயணம்"

    ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சபரிமலைக்கு செல்ல விரும்பும் இளம்பெண்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறியது.

    கேரள அரசின் அறிவிப்பை தொடர்ந்து சபரிமலை சென்ற பெண்கள் பலரும் பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டக்காரர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2-ந்தேதி பிந்து, கனகதுர்கா என்ற 2 கேரள பெண்கள் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.



    கேரள பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்ததை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த மனிதி அமைப்பின் பெண்களும் சபரிமலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து கேரள அரசுக்கு மனு அனுப்பினர். இதற்காக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்திக்க நேரம் ஒதுக்கும்படியும் கேட்டுள்ளனர்.

    இதற்கிடையே ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்கள் 4 பேர் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆந்திர பெண்கள் கோட்டயம் வந்துள்ளதாகவும், அங்கிருந்து எரிமேலி வழியாக பம்பை சென்று சன்னிதானம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ஆந்திராவில் இருந்து ஏற்கனவே பல பெண்கள் சபரிமலை வந்து பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்பி சென்றுள்ளனர். இப்போது மேலும் 4 பெண்கள் சபரிமலை வந்திருப்பதாக வெளியான தகவல் சபரிமலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SabarimalaTemple

    சென்னையில் இருந்து 40 பெண்கள் வருகிற 22-ந் தேதி சபரிமலை பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்துக்கான பாதுகாப்பு கேட்டு கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறார்கள். #Sabarimala #WomenDevotees
    சென்னை:

    பெண்கள் சபரிமலைக்கு செல்லலாமா? செல்ல கூடாதா? என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ‘சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரளா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் ‘கோவில் புனிதம் கெட்டுவிடாதா?’, என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் ஐயப்ப பக்தர்களும் அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களும் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். இதனால் புனித தலமான சபரிமலை தற்போது போராட்ட தலமாக மாறியிருக்கிறது.

    இந்தநிலையில் ‘மனிதி’ எனும் சமூக நல அமைப்பு சார்பில் 40 பெண்கள் அடங்கிய குழு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குழுவினர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து ‘மனிதி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வசுமதி வசந்த் (வயது 39), செல்வி (44) ஆகியோர் கூறியதாவது:-

    சபரிமலை என்பது ஒரு திருத்தலம். அது ஒரு பொது இடம். வழிபடும் இடத்தில் ஒரு சாராருக்கு இடமில்லை என்பது தீண்டாமை போன்றது தான். ஐயப்பனை காணவேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கும் உண்டு. ஆனால் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி சபரிமலையில் பெண்களின் வழிபடும் உரிமைக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள். இந்த முட்டுக்கட்டையை சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பால் தகர்ந்து எறிந்திருக்கிறது. இதனை நாங்கள் மனதார வரவேற்கிறோம். இதன்மூலம் நீண்ட நாளாக முடங்கியிருந்த எங்களின் வழிபாட்டு உரிமை திரும்ப கிடைத்திருக்கிறது.

    எதையுமே போராடி பெறுவது என்பதே பெண்களின் தலையெழுத்தாகி விட்டது. சபரிமலையிலும் அந்த நிலை மாறவேண்டும். எங்களின் வழிபாட்டு உரிமையை தடை செய்வது மிகப்பெரிய தவறு. சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுப்பது, விரட்டுவது போன்றவற்றை இனியும் பார்த்து கொண்டிருக்க முடியாது.

    அதனால் தான் ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பெண்களை எங்கள் அமைப்பு ஒருங்கிணைத்தது. ‘சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்புகிறோம், எனவே உரிய பாதுகாப்பு செய்து தாருங்கள்’, என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மின்னஞ்சலில் கடிதம் அனுப்பினோம். அவரும் எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தருவதாக பதில் கடிதம் மூலம் உறுதி அளித்திருக்கிறார். எனவே திட்டமிட்டபடி எங்கள் பயணத்தை ஏற்படுத்தி ஐயப்பனை தரிசிக்க செல்வோம்.



    இந்த பயணத்தில் தமிழகம், கேரளா, ஒடிசா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 40 பேரை ஒருங்கிணைத்திருக்கிறோம். இதில் ஆன்மிக சிந்தனை உடையவர்கள் ஏராளம். பாதி பேர் 5 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிவர இருக்கிறார்கள். திட்டமிட்டபடி சென்னையில் இருந்து 22-ந் தேதி புறப்பட்டு மறுநாள் காலை 10 மணியளவில் கேரளா மாநிலம் கோட்டயத்தில் கூடுகிறோம். பின்னர் அங்கிருந்து பம்பை வழியாக ஐயப்பனை தரிசிக்க செல்கிறோம். எங்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தான்.

    1990-க்கு முன்பாக சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கான சான்றுகள் உள்ளன. எனவே பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டவும், இழந்த உரிமையை பெறவும் தான் இந்த பயணம். மற்றபடி நாத்திகமோ, முற்போக்கு சிந்தனையோ இந்த பயணத்திலோ அல்லது எங்கள் அமைப்பிலோ இல்லை. கடவுளை வழிபட பாலின வேறுபாடு பார்ப்பது நியாயமற்ற செயலாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏற்கனவே சபரிமலைக்கு செல்லும் பெண்கள் ஒரு சிலரால் தடுக்கப்பட்டும், விரட்டப்பட்டும் வரும் நிலையில் சென்னையில் இருந்து 40 பெண்கள் குழுவாக செல்வது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  #Sabarimala  #WomenDevotees


    சபரிமலைக்கு வழிபாடு செய்ய செல்ல விரும்பும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக பார்க்கலாம். #SabarimalaVerdict #Sabarimala
    சென்னை:

    சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பெண்களையும், அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று முற்போக்கு சிந்தனையாளர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களும், ஆண்டுதோறும் விரதம் இருந்து சபரிமலை செல்பவர்களும் இந்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    இதுபற்றி ஆன்மீகவாதிகள் கூறும்போது, கோவிலுக்கு பெண்கள் செல்வதை எதிர்க்கவில்லை. ஆனால் இயற்கையிலேயே பெண்ணாக படைக்கப்பட்டவர்களுக்கும், ஆணாக படைக்கப்பட்டவர்களுக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேறுபாடுகள் உண்டு. அதை வைத்துதான் ஆலய வழிபாட்டிலும் முன்னோர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள் என்றனர்.

    சபரிமலையானது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த காடு மலைகளை கடந்துதான் செல்ல வேண்டும். மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. அது சங்க காலத்தில் சேரர்களின் வழிபாட்டு தலமாக விளங்கியது.

    சுவாமி அய்யப்பன் சார்ந்த வரலாற்று கதைகளில் பெண்கள் மாதவிலக்கு காலங்களில் இங்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது. இன்னொரு காரணமாக சுவாமி அய்யப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமும் சொல்லப்படுகிறது.

    கோவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின்போது வன விலங்குகளால் ஏதாவது ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் பூப்படைந்த பெண்கள் இக்கோவிலுக்கு வர தடை விதிக்கப்பட்டது.

    10 வயது வரையுள்ள பெண்களும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் மற்ற வயதுடைய பெண்கள் சபரிமலைக்கு செல்வதில்லை.

    சபரிமலை பயணம் மேற்கொள்வதற்கு பக்தர்கள் 41 நாட்கள் கடினமான விரதம் இருக்க வேண்டும். இதற்காக பக்தர்கள் விரதத்தின் தொடக்க நாளன்று உத்திராட்சமோ அல்லது துளசிமணி மாலைகளோ அணிய வேண்டும். 41 நாட்களும் மாமிச உணவு, மீன், மதுபானங்கள், புகையிலை, புகைப்பிடித்தல், பெண்கள் தொடர்பு, அநாகரீகமான பேச்சுக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். காலணிகள் அணியக்கூடாது.

    மேலும் தலைமுடி மற்றும் முகத்தில் வளரும் மீசை போன்றவைகளை திருத்தக்கூடாது. ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து நீராடிவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

    கருப்பு, நீல நிறம் அல்லது குங்குமப்பூ கலரில் பாரம்பரிய துணிகள் மட்டுமே அணிய வேண்டும். தற்போது விரதங்களுக்கான விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் குறைந்து விட்டாலும் பொதுவான விதிமுறைக்கு உட்பட்டு விரதம் கடைபிடித்து வருகிறார்கள்.

    சில தீவிர பக்தர்கள் வீட்டில் இருந்து வெளியேறி தனி இடத்தில் 41 நாட்கள் கடும் விரதம் கடைபிடிப்பார்கள். முன்பு ‘பெரிய பாதை’ என்ற ஒரு வழி மட்டுமே இருந்தது. அடர்ந்த காட்டின் வழியே செல்ல வேண்டும். இதில் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருந்தது. வெள்ளை நிற ஆடைகள் வெகுதூரம் வரை தெரியும் என்பதால் வனவிலங்குகளிடம் இருந்து தப்ப குறைந்த ஒளிசிதறல் கொண்ட கருப்பு, நீலம், சிவப்பு நிற துணிகளை பயன்படுத்தினர்.

    முந்தைய காலத்தில் காட்டு வழியாக நடந்து சென்று பம்பா நதியை அடையவே வெகுநாட்கள் ஆகும். தற்போது பம்பா நதிவரை வாகனங்கள் செல்வதுபோல் முந்தைய காலத்தில் செல்ல வழியில்லை.

    இதனால் முந்தைய காலத்தில் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் பொருட்கள் ஒருபுறமும், வழி உணவிற்கான பொருள்கள் மற்றொரு புறமுமாக இருமுடியை எடுத்துச் சென்றனர்.

    10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களால் 41 நாட்கள் விரதம் இருப்பது கடினம். எனவேதான் தடை விதித்தனர். ஆனால் இன்றைய காலத்தில் ஆன்மீகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆணுக்கு பெண் சமம் என்ற கோ‌ஷம் ஓங்கி வருகிறது.

    சபரிமலை பயணம் என்பது அடர்ந்த வனப்பகுதி வழியாக 45 கி.மீ. தூரமாக இருந்தது. ஆனால் இப்போது காட்டு வழிப்பாதை மேம்படுத்தப்பட்டு இரு பக்கங்களிலும் கடைகள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய சாலையாக மாறி விட்டன.

    சபரிமலை விரதமும், கட்டுப்பாடுகளும் பக்தர்களை சபரிமலை பயணத்துக்கு தங்களை தயார் செய்வதாகவே இருந்தது. ஆனால் காலப்போக்கில் விரத முறைகள் மாறிவிட்டன. கட்டுப்பாடுகளும் தளர்ந்து விட்டன. அவரவர் விருப்பப்படி ஒருநாள் ஒரு வாரம் என விரதம் இருந்து சபரிமலை சென்று திரும்புகிறார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டு தற்போது பெண்களை கோவிலுக்கு அனுமதித்தாலும் அவர்களால் 41 நாட்கள் விரதம் இருப்பது இயலாத ஒன்றாகும். கழுத்தில் மாலையுடன் 41 நாள் விரதம் இருந்து இருமுடி கட்டிச் செல்பவர்கள் மட்டுமே 18 படிகள் வழியாக அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.



    எனவே குறைந்த நாள் விரதம் இருந்தும் பெண்கள் 18 படிகளில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சந்நிதானத்தின் பின்புற வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தென் மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஆண்டுக்கு 4½ கோடி முதல் 5 கோடி பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இதன்மூலம் கோவிலுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

    அதிக வருவாய் கிடைப்பதால் கேரள அரசாங்கமும் அய்யப்பன் கோவில் நடைமுறைகளில் மாற்றம் செய்வதை கண்டுகொள்ளாமல் வரவேற்கிறது. தற்போது பெண்களும் அனுமதிக்கப்படுவதால் வருவாய் மேலும் இரட்டிப்பாகும் என்பதால் கேரள அரசு வரவேற்கிறது. ஆனால் ஆன்மீகவாதிகளும், தீவிர பக்தர்களும் பெண்கள் அனுமதிப்பதை ஏற்கவில்லை. விரதத்தின் புனிதம் கெட்டுவிடும் என்ற அதிருப்தி நிலவுகிறது. #SabarimalaVerdict #Sabarimala


    ×