search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் விற்பனை"

    • பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதையொட்டிய நகரங்களில் சட்டவிரோதமாக குழந்தைகள் விற்பனை நடைபெறுவதாக சி.பி.ஐ. கவனத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். அப்போது சிலர் சட்டவிரோதமாக குழந்தைகளை விற்பனை செய்து வருவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டெல்லியில் ரோகிணி மற்றும் கேசவ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக பெண்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் உள்பட 7 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    அவர்களது பெயர் சோனிபட்டை சேர்ந்த நீரஜ், டெல்லி பஸ்சிம் விஹாரை சேர்ந்த இந்து பவார், படேல் நகரை சேர்ந்த அஸ்லம், கன்னையா நகரை சேர்ந்த பூஜா காஷ்யப், மாளவியா நகரை சேர்ந்த அஞ்சலி, கவிதா மற்றும் ரிது ஆகும். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    இந்த கும்பல், குழந்தை இல்லாத தம்பதிகளை சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். பிறந்த பச்சிளம் குழந்தைகளை தத்துக்கொடுப்பு என்ற பெயரில் முறையாக வழங்குவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி பலரும் இந்த கும்பலிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர். இதன்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் பெறப்பட்டு உள்ளது.

    பணத்தைப் பெற்றுக்கொண்டு போலி தத்தெடுப்பு ஆவணங்களை உருவாக்கி குழந்தைகளை விற்றுள்ளனர். இந்த குழந்தைகள் பெற்றோரிடமும், பாதுகாவலர்களிடமும் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 10 குழந்தைகளை இந்த கும்பல் விற்றுள்ளதாக தெரிகிறது.

    கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5.5 லட்சம் ரொக்கமும், ஆவணங்களும் மீட்கப்பட்டு உள்ளன.

    மேலும் இந்த சோதனையின்போது 2 பச்சிளம் குழந்தைகளையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

    இதுபோன்ற சட்டவிரோத குழந்தை விற்பனை செய்யும் தொழில் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×