search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிருத்திகை நட்சத்திரம்"

    • ஓம் என்னும் பிரணவப் பொருளை சிவப்பெருமானுக்கு மட்டுமின்றி உலகுக்கே முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
    • முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதி நூலை பாடியிருக்கின்றார். அதன் மூலம் ஆறு திருத்தலங்கள், முருகனின் அறுபடை வீடுகள் என்ற சிறப்பை பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    1.திருப்பரங்குன்றம்- சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகள் தெய்வானையை மணந்த திருத்தலமிது.

    2. திருச்செந்தூர் -அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச்சூடிய திருத்தலமிது.

    3. பழனி- மாங்கனிக்காக தமையன் விநாயக ரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுத பாணியாக நின்ற திருத்தலமிது.

    4. சுவாமிமலை- தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக காட்சி தரும் திருத்தலமிது.

    5. திருத்தணி-சூரனை வதம் செய்த பின் சினம் தணிந்து குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.

    6.பழமுதிர் சோலை- அவ்வைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சி தரும் திருத்தலமிது.

    முருகன் தமிழ்க்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலவன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் அவர் அழைக்கப்படுகிறார்.

    புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன. புராணங்களின்படி சிவனிட மிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவண பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது. கார்த்திகைப் பெண்கள் 6 பேர், இந்த ஆறு குழந்தைகளை வளர்த்தனர். பின்னர் ஒரு கார்த்திகைத் திருநாளில் பார்வதி இந்த ஆறு குழந்தைகளையும் இணைத்தார். ஆறுமுகங்களைப் பெற்ற இவர் ஆறுமுகன் என்று அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாள் இவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    ஓம் என்னும் பிரணவப் பொருளை சிவப்பெருமானுக்கு மட்டுமின்றி உலகுக்கே முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு. ஓம் என்பது அ.உ.ம. என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது. அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும். அ.உ.ம. என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது. முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ.உ.ம. மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன். முருகப்பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

    தெய்வயானை கிரியா சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள். முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது. அத்தகைய சிறப்புடைய முருகனை ஆடி கிருத்திகையில் வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும்.

    • சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு.
    • கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம்.

    கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் முருகப் பெருமான், உரிய கிரகம் சூரியன். இந்த கிரகத்திற்குரிய அதிதேவதை சிவன். சிவனை வழிபட்டால் பல்வேறு செல்வ வளங்களை பெற்று மகிழ்ச்சி பெறலாம்.

    சூரிய வழிபாடு மிகவும் தொன்மையான வழிபாடு. கிருத்திகை நட்சத்திரகாரர்கள் சூரிய வழிபாடு செய்தால் சகல செல்வங்களும் பெறலாம். மயிலாடுதுறை அருகே உள்ள காத்ர சுந்தரேஸ்வரர் கோவில் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்.

    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் கிருத்திகை நட்சத்திரத்தன்றோ, பிரதோஷ நாட்களிலோ இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வளம் பெறலாம் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ள கிருத்திகை நட்சத்திரப் பெண்கள் புண்ணிய நதிகள் தீர்த்தத்தால் இத்தல அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், சுமங்கலி பூஜை செய்தும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வெள்ளிக்கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திர நாட்களில் இந்தக்கோவிலில் தரிசனம் செய்தால் சிறந்த மணவாழ்க்கை அமையும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெள்ளிக் கிழமை அதிக நன்மைகள் தரும் தினமாக அமைந்திருக்கின்றது.

    இந்நாட்களில் கிருத்திகை நட்சத்திரத்தின் நல்ல மின் காந்த கதிர்வீச்சுகள் பூமியில் படரும் அது மிகவும் நல்லது. அத்தி மரம் கிருத்திகை நட்சத்திரத்திற்கு உரிய மரமாகும். இந்த மரத்தின் உடலில் பால் நிரம்பி இருக்கும். அந்தப் பால் கார்மேகங்களை தன் பக்கம் இழுக்கும் குணம் கொண்டது.

    இதன் குச்சிகளை எரித்தால் அதன் புகை மழை பொழியும் கருமேங்களை வரவழைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.

    கிருத்திகை நட்சத்திரத்தின் கெட்ட கதிர் வீச்சுகள் மனித உடலில் படும் போது பல வகையான உடல் மாற்றம், மன மாற்றம் நோய்கள் உண்டாகின்றன. இதற்கு கிருத்திகை நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தையும், நோய்களையும் நீக்க இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அத்தி மரத்தை 20 நிமிடம் கட்டிப்பிடிக்கலாம் அல்லது அதன் நிழலில் உட்காரலாம்.

    கிருத்திகை தோஷம் உடையோர் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்புப் பூவும் நீரும் கைகளில் ஏந்தி சூரிய பகவானே எனது தோஷத்தைப் போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 108 தடவைகள் இதனை செய்யலாம்.

    கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமைத் தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு சிவப்புப் பூமாலை அணியலாம். சிவப்புப் பூவால் அர்ச்சித்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத்தரும்.

    • புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை, தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது.
    • தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக் கூடாது.

    1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

    2. நெய் வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.

    3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் கூடாது. ஊது பத்திகளுக்கென்று உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது. இல்லையேல் ஒரு சிறிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம்.

    4. கற்பூரம் ஏற்றும் போது தட்டில் சிறிதளவு திருநீறை வைத்து அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும். திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து ஏற்றலாம். பூஜைக்குரிய வெற்றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு.

    5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

    6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.

    7. விளக்கு பூஜை செய்யும் போது குத்து விளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.

    8. தீபம் ஏற்ற தூய்மையான புதிய அகல்விளக்கை பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோவில்களில் மறுபடியும் ஏற்றக் கூடாது.

    9. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.

    10. விநாயக பெருமானுக்கு: 1, 7 தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 6 தீபம், நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3 அல்லது 9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

    11. தீபங்களை வாகனங்களுக்கு முன்பாகவும் ஏற்றலாம். சிவன் கோவிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன் சிங்கம், நந்தி முன்பாக, பிள்ளையார் பெருச்சாளி முன்பாக, பெருமாள் கருடன் முன்பாக, முருகர் மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.

    12. தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

    13. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றி பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.

    14. காலையில் உஷத் காலத்திலும், மாலையில் சூரிய அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும்.

    15. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.

    16. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.

    17. புதிய மஞ்சள் துணி திரி போட்டு விளக்கு ஏற்றினால் செய்வினை, தீயசக்திகள் தொந்தரவுகள் அண்டாது.

    18. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக் கூடாது.

    19. தீப சரஸ்வதி என்று மூன்று முறையும், தீப லட்சுமி என்று மூன்று முறையும் குல தெய்வத்தை நினைத்து மூன்று முறையும் என தீபத்தை பன்னிரண்டு முறை வணங்க வேண்டும்.

    20. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும், இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம்.

    குத்துவிளக்கும் குடும்பப்பெண்ணும்

    குத்துவிளக்கின் 5 முகங்களிலும் தீப ஒளி பிரகாசிப்பதுபோல, குலவிளக்காகத் திகழும் குடும்பப் பெண்ணும் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசிதபுத்தி, சகிப்புத்தன்மை என்னும் 5 குணங்களுடன் சிறப்பாகப் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காகவே, திருமணம் ஆகி மறுவீடு வந்ததும் மணப்பெண்ணை முதலில் குத்துவிளக்கு ஏற்றச் சொல்வது நடைமுறையில் வழக்கமாக உள்ளது.

    பஞ்சமி திதியில் ஜோதி வழிபாடு

    அமாவாசையிலிருந்து ஐந்தாம் நாள், பவுர்ணமியில் இருந்து ஐந்தாம் நாள், இந்நாட்களில் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்.

    பஞ்சமி திதியன்று குத்துவிளக்கில் ஐந்து எண்ணெய் கலந்து ஐந்து முகத்தினையும் ஏற்றி கல்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்து சுலோகங்கள் கூறி விளக்கிற்கு பூஜை செய்யவும்.

    தீபத்தில் எரியும் ஐந்து முகங்களில் ஏதாவது ஓர் தீபத்தை உற்றுப் பார்த்தபடியே மனதை ஒரு முகப்படுத்தி நம்முடைய வேண்டுதல்களை மனதிற்குள் சொல்லி வந்தால் அது நிச்சயம் நிறைவேறும். இப்படி ஜோதியை நோக்கி வழிபடும்போது ஓம் ஸ்ரீபஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லவும். இப்படிச் செய்தால் அம்பிகையின் அருளாளல் நமது வேண்டுதல்கள் நிறைவேறும்.

    • தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.
    • சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்துவிளக்காக இருக்க வேண்டும்.

    தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது.

    தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கிப் பூஜை செய்ய வேண்டும். பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாகத் தீபவழிபாடு செய்யலாம். வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, 1 மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு, பூட்டுபோட்டு, தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும். வீட்டிலே நாம் இம்மாதிரி தீபபூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.

    தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும்.

    ஒவ்வொரு மாதம் அமாவாசை மற்றும் பவுர்ணமியில் திருவிளக்கு ஏற்றி விளக்கு பூஜை செய்தால் கீழ்கண்டபடி பலன்கள் கிடைக்கும்.

    சித்திரை- தான்யம் உண்டாகும்

    வைகாசி- செல்வம் கிடைக்கும்

    ஆனி- விவாகம் நடக்கும்

    ஆடி- ஆயுள் விருத்தி

    ஆவணி- புத்திரப்பேறு உண்டாகும்

    புரட்டாசி- பசுக்கள் விருத்தி

    ஜப்பசி- பசிப்பிணி நீங்கும்

    கார்த்திகை- நற்கதி உண்டாகும்

    மார்கழி- ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்

    தை- வாழ்வில் வெற்றி கிடைக்கும்

    மாசி- துன்பம் அகலும்

    பங்குனி- தர்மசிந்தனை பெருகும்

    சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்துவிளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்துவிளக்கு ஏற்ற வேண்டாம்.

    குத்துவிளக்கு மும்மூர்த்திகளின் வடிவம். குத்துவிளக்கின் தாமரை வடிவமான ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம அம்சம். நீண்ட தண்டு (நடுப்பாகம்) விளக்கேற்றி வைக்கும்பொழுது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்க்க ஏற்றி வைக்கக்கூடாது.

    5 செல்வம் தரும் முக விளக்கு

    காலை 6 மணி முதல் 7 மணி வரை வீட்டில் தீபம் ஏற்றுவது சர்வ மங்கள யோகம் தரும். ஒரு முகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் மத்திய பலன் கிட்டும், இருமுகம் உள்ள விளக்கை ஏற்றுவதால் குடும்ப ஒற்றுமைக் கிட்டும். மூன்று முகம் கொண்ட விளக்கை ஏற்றுவதால் புத்திர சுகம், நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் பசு, பூமி லாபம் கிடைக்கும். ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.

    விளக்குகளில் பித்தளை, வெள்ளி, அகல் விளக்குகள் கூட உள்ளன. ஆனால், மண்ணால் செய்யப்பட்ட விளக்குகளும், வெள்ளை, பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட விளக்குகளும் பூனைக்கு மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது. விளக்கேற்றுவதில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு எண்ணெய் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

    அதாவது மகாலட்சுமி தாய்க்கு நெய் விளக்கும், நாராயணனுக்கு நல்லெண்ணையும், கணபதிக்கு தேங்காய் எண்ணையும், ருத்ராதி தேவதைக்கு இலுப்பு எண்ணையும், தேவிக்கு ஐந்து வகை எண்ணையும் சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணையும் சிறப்பு வாய்ந்தது.

    திசைகளும் தீபங்களும்

    நாம் அன்றாடம் காலையும், மாலையும் பூஜை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும்?

    தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத்தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.

    மேற்குத்திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.

    தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

    தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்

    1. ராகு தோஷம்- 21 தீபங்கள்

    2. சனி தோஷம்- 9 தீபங்கள்

    3. குரு தோஷம்- 33 தீபங்கள்

    4. துர்க்கைக்கு- 9 தீபங்கள்

    5. ஈஸ்வரனுக்கு- 11 தீபங்கள்

    6. திருமண தோஷம்- 21 தீபங்கள்

    7. புத்திர தோஷம்- 51 தீபங்கள்

    8. சர்ப்ப தோஷம்- 48 தீபங்கள்

    9. கால சர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்

    10. களத்திர தோஷம்- 108 தீபங்கள்.

    விடியற்காலை விளக்கு வழிபாடு

    விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

    பூஜைக்கு ஏற்ற விளக்குகள்

    குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு அதற்கு அடுத்து சிறப்புடையது. எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக்கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

    தீபம் பேசும்

    ஏதாவது ஒரு அமாவாசை அன்று 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும். நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.

    108 முறைக்கு குறையாமல் தினமும் பின்வரும் மந்திரம் ஜபித்து வரவேண்டும். வாயாலும் சொல்லலாம்.

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் நமோ பகவதி தீபிகா ஜோதி சொரூபணி

    ஆகர்ஷய ஆகர்ஷய வாவா ஸ்வாஹா

    சரியாக 90 தினங்களுக்குள் தீபம் உங்களுடன் பேசுவதை நீங்கள் சூட்சுமமாக உணர முடியும். உங்கள் எதிர்காலத்தையும், உங்கள் அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வையும், எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் தடங்கல்களைத் தாண்டும் வழிமுறைகளையும், நீங்கள் கண்கூடாக உணர முடியும்.

    இந்த பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்ததும் கண்டிப்பாக அசைவம், மது, புகை தவிர்க்க வேண்டும்.

    தீபம் ஏற்றும் முறை

    முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3வது மேற்கு நோக்கி இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது. குளிர்விக்கும்போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2வது வடக்கே உள்ள திரியையும், 3-வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும்.

    ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி, 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில்- தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி- எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    தீபம் பிரகாசிக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் நிலவும்

    கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணி தீபம், மறுநாள் கார்த்திகை தீபம், கார்த்திகை மாத முப்பது நாட்களிலும் தீபகானம் செய்ய வேண்டும். வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் பவுர்ணமி முதல் மூன்று நாட்களாவது தங்களுடைய வீட்டில் வரிசையாக தீபம் ஏற்ற வேண்டும். தீபம் எங்கெல்லாம் பிரகாசமாக ஜொலிக்கின்றதோ அங்கே லட்சுமி கடாட்சம் உண்டாகும். பொதுவாக தீபம் சந்ததியை வளர்க்கும் என்பது சமய குரவர்களின் கூற்றாகும். வசதிக்கேற்றபடி நெய், நல்லெண்ணெய், இலுப்பெண்ணெய், தீபங்கள் ஏற்றலாம்.

    எவ்வளவு தீபம் ஏற்ற வேண்டும்?

    1 தீபம்: மன அமைதி

    9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.

    12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.

    18 தீபங்கள்: சக்தி தரும் சக்தி தீபம்.

    27 தீபங்கள்: நட்சத்திர தோஷம் நீங்கும், விரும்பியது கிட்டும்.

    48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.

    108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.

    508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.

    1008 தீபங்கள்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    சொக்கப்பனை

    வீட்டளவில் தீபம் என்பது ஊரளவில் சொக்கப்பனை. சொக்கப்பனையின் உள்ளர்த்தம் மன இருள் அகன்று அக ஒளி ஏற்பட்டால் தீயன கருகும் ஞான ஒளி மனதில் உண்டாகும். தீயன தூசாகும் என்பதே. கார்த்திகை பவுர்ணமியன்று பல ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. அதில் பனை ஓலை கொளுத்தப்படுகின்றது. பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் மற்றவர்களுக்காக பயன்படுகின்றது. கொளுத்தப்பட்ட பனை ஓலையின் சாம்பல் கூட புனிதமானது, அதுவும் நமக்கு பயன்படுகின்றது. அது போல நாமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதையே இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது.

    கார்த்திகை தீபம்

    தீப வழிபாட்டில் சிறப்பானது கார்த்திகை தீபம் ஆகும். இது கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவது.

    அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக

    இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி

    ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு

    ஞானத் தமிழ் புரிந்த நான்.

    என்று சொல்லி கார்த்திகை மாதத்தில் தினமும் மாலையில் விளக்கேற்றி வழிபட வேண்டும். கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.

    தீபம் தரும் பலன்கள்

    நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.

    நல்லெண்ணெய் எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.

    விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும்.

    வேப்பஎண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும்.

    நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும்.

    கிழக்கு திசையில் தீபம் ஏற்றி வணங்கிட துன்பம் அகலும், கிரகங்களின் சோதனை விலகும்.

    மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிப்பீடை, கிரக தோஷம், பங்காளி பகை ஆகியவை நீங்கும்.

    வடக்கு திசையில் தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும், திருமணத்தடை, கல்வித்தடை ஆகியவை நீங்கி சர்வமங்களம் உண்டாகும்.

    தெற்கு திசையில் தீபம் ஏற்றக்கூடாது. அது அபசகுணம் என அஞ்சப்படுகிறது.

    கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

    கணவன்-மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பஎண்ணெய் தீபம் உகந்தது.

    அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணெய் தீபம்.

    எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரங்களை திருப்தி செய்யவும் ஏற்றது.

    மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்ப எண்ணெய், நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.

    மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

    கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணெயின் தீபங்கள்.

    தேங்காய் விளக்குகள்

    தேங்காயை இரு பாதியாக உடைத்து அதில் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றினால் எந்த காரியமும் சித்தியாகும் என்பது நம்பிக்கை.

    • கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.
    • கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    முன்னொரு காலத்தில் ஒரு கார்த்திகை பவுர்ணமியன்று ஒரு சிவாலயத்தில் தீபம் ஒன்று நீண்ட நேரம் எரிந்து திரி கருகி அணையும் தருவாயில் மெல்லியதாக எரிந்து கொண்டிருந்தது. அந்த சமயம் அங்கு வந்த எலி ஒன்று விளக்கிலிருந்த திரியை இழுத்துப் போகும் நோக்கத்தோடு அணைந்து போகும் நிலையிலிருந்த அத்திரியை இழுத்தது.

    எலியினால் தூண்டப்பட்ட திரி பிரகாசமாக எரியத் துவங்கியதும் எலி பயந்து ஓடி விட்டது. கார்த்திகை பவுர்ணமியன்று சிவன் ஆலயத்தில் விளக்கை பிரகாசமாக எரிய வைத்து புண்ணியத்தைச் செய்ததால் அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்து சிவ பக்தராக விளங்கினார்.

    இறைவனின் கருணையால் தன் முற்பிறவியினை அறிந்த மகாபாலி தன் ஆட்சி காலத்தில் கார்த்திகை தீப விழாவை சிறப்பாக கொண்டாடி வந்தார். பின்னர் அவர் இறைவனின் திருவடியைச் சேரும் காலத்தில், இறைவனை நோக்கி மக்கள் அனைவரும் இக்கார்த்திகை பவுர்ணமியன்று தீபமேற்றி வழிபட்டு நன்மை அடைய வேண்டும் என்று வேண்டினார். அவ்வாறே ஈசனும் வரமளிக்க இன்றும் மக்கள் அனைவரும் இல்லந்தோறும் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், அண்ணாமலையானுக்கு அரோகரா என விண்அதிர முழக்கமிடுவார்கள்.

    இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும் என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார். தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

    கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இதுதான் தீபா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.

    கார்த்திகை தீபம் ஏற்றும் போது...

    துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை, அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை - தன்பகத்தைக் காட்டுமலை தன்னைக் கருத்தில் உறும் அன்பர் இடர் வாட்டுமலை அண்ணாமலை.

    பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளை களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும். தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் நிறுத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே.

    விளக்கம்: இந்தப்பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

    விரதமுறை

    கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வர். மறுநாள் காலையில் காலைக் கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

    ×