search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    கார்த்திகை தீபத்தின் கதை
    X

    கார்த்திகை தீபத்தின் கதை

    • கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது.
    • கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    முன்னொரு காலத்தில் ஒரு கார்த்திகை பவுர்ணமியன்று ஒரு சிவாலயத்தில் தீபம் ஒன்று நீண்ட நேரம் எரிந்து திரி கருகி அணையும் தருவாயில் மெல்லியதாக எரிந்து கொண்டிருந்தது. அந்த சமயம் அங்கு வந்த எலி ஒன்று விளக்கிலிருந்த திரியை இழுத்துப் போகும் நோக்கத்தோடு அணைந்து போகும் நிலையிலிருந்த அத்திரியை இழுத்தது.

    எலியினால் தூண்டப்பட்ட திரி பிரகாசமாக எரியத் துவங்கியதும் எலி பயந்து ஓடி விட்டது. கார்த்திகை பவுர்ணமியன்று சிவன் ஆலயத்தில் விளக்கை பிரகாசமாக எரிய வைத்து புண்ணியத்தைச் செய்ததால் அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்து சிவ பக்தராக விளங்கினார்.

    இறைவனின் கருணையால் தன் முற்பிறவியினை அறிந்த மகாபாலி தன் ஆட்சி காலத்தில் கார்த்திகை தீப விழாவை சிறப்பாக கொண்டாடி வந்தார். பின்னர் அவர் இறைவனின் திருவடியைச் சேரும் காலத்தில், இறைவனை நோக்கி மக்கள் அனைவரும் இக்கார்த்திகை பவுர்ணமியன்று தீபமேற்றி வழிபட்டு நன்மை அடைய வேண்டும் என்று வேண்டினார். அவ்வாறே ஈசனும் வரமளிக்க இன்றும் மக்கள் அனைவரும் இல்லந்தோறும் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், அண்ணாமலையானுக்கு அரோகரா என விண்அதிர முழக்கமிடுவார்கள்.

    இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும் என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார். தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம்.

    கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

    இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இதுதான் தீபா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.

    கார்த்திகை தீபம் ஏற்றும் போது...

    துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை, அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை - தன்பகத்தைக் காட்டுமலை தன்னைக் கருத்தில் உறும் அன்பர் இடர் வாட்டுமலை அண்ணாமலை.

    பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளை களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும். தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் நிறுத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே.

    விளக்கம்: இந்தப்பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

    விரதமுறை

    கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வர். மறுநாள் காலையில் காலைக் கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

    Next Story
    ×