search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களப்பயணம்"

    • புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியின் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் சுகாதார தத்தெடுப்பு களப்பயணம் மேற்கொண்டனர்
    • 365 குடும்பத்தினருக்கு 5 ஆண்டுகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க முடிவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியின் முதலாமாண்டு பயிலும் 73 மருத்துவ மாணவ-மாணவிகள் சமூக மருத்துவம் மற்றும் நோய் தடுப்புத்துறை டாக்டர் சரவணன் தலைமையில் சுகாதார தத்தெடுப்புக்காக அண்டகுளம் அருகே உள்ள கடியாம்பட்டி கிராமத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்ற மாணவர்கள் சுகாதாரம் சார்ந்த தகவல்களை சேகரித்து ஒவ்வொரு மாணவரும் சுகாதார தத்தெடுப்புக்காக தலா 5 குடும்பங்கள் வீதம் தத்தெடுத்து குடும்பத்தில் உள்ளவர்களின் தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டனர். தத்தெடுத்த 365 குடும்பத்தார்களிடமும் தங்களது தொலைபேசி எண்ணை கொடுத்து 5 ஆண்டுகள் எம்.பி.பி.எஸ். படித்து முடிக்கும் வரை ஒவ்வொரு மாணவரும் அந்த 5 குடும்பத்திற்கு தேவையான மருத்துவ ஆலோசனை தேவைப்படும் நேரங்களில் வழங்கி கண்காணித்து வரவேண்டும். அந்த 5 குடும்பத்தை சேர்ந்தவர்களும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் அந்த மாணவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மருந்துகள் எடுத்துக்கொள்வது பற்றியும், அவசரகால நேரங்களிலும் முதலுதவி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடியாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு உடல் நலன் குறித்து டாக்டர் சரவணன் எடுத்து கூறினார்.

    • ஆவின் பால் உற்பத்தி நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்துச் சென்றனர்.
    • பெருங்கற்கால மண்பாண்டங்கள், வரலாற்றுக் கால நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அடுத்த கட்டிக்கானப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியின் தேசிய பசுமைப்படை மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஜே.ஆர்.சி., ஆகிய அமைப்புகள் இணைந்து, அரசு அருங்காட்சியகம் மற்றும் ஆவின் பால் உற்பத்தி நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மாணவர்களை களப்பயணம் அழைத்துச் சென்றனர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் திம்மராஜ், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ஜே.ஆர்.சி., ஒருங்கிணைப்பாளர் கவிதா, உதவி தலைமை ஆசிரியர் சாந்தி, சமூக அறிவியல் ஆசிரியர் கலைச்செல்வி, தமிழாசிரியர் விஜயகுமார் ஆகியோருடன் 45 மாணவ, மாணவிகள் களப்பயணம் சென்று பார்வையிட்டனர்.

    இதில், அரசு அருங்காட்சியகம் சென்ற மாணவ, மாணவிகளுக்கு, அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், தொல் பொருள் சான்றுக்கான நடுகல், பாறைக்கல்வெட்டு, மாவட்ட வரலாற்றை குறிக்கும் வகையில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள புதிய கற்கால கருவிகள், பெருங்கற்கால மண்பாண்டங்கள், வரலாற்றுக் கால நடுகற்கள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார்.

    மேலும், மனித உடலியல் பாகங்கள், புவியியல் பகுதி மற்றும் ஓவியங்கள் போன்ற கலைப்பொருட்கள் குறித்தும் மாணவர்கள் விரிவாக அறிந்து கொண்டனர். போர்க்காலங்களில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி மற்றும் போர்வாட்கள் மாணவர்களை பெரிதும் கவர்ந்தன. ஆவின் பால் உற்பத்தி நிலையத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள், பால் பொருள் உற்பத்தி, நெய் தயாரிக்கும் இடம், பால் பதப்படுத்தும் இடம், பாலில் இருந்து பல்வேறு உப பொருட்கள் தயாரிக்கும் பகுதிகளை பார்வையிட்டனர்.

    • மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.
    • நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கிளை நூலகம் எண் 2 மகளிர் வாசகர் வட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் நூலகத்திற்கு களப்பயணம் வந்தனர்.

    மாணவிகள் சைக்கிளில் ஊர்வலமாக நூலகத்திற்கு வந்தனர் .நூலகத்தில் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என நூலகர் கலாவதி விளக்கினார் .வாசிப்பின் அவசியம் குறித்தும் நூலகம் செல்வதால் ஏற்படும் வளர்ச்சி பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார். எந்த வகையான நூல்கள்நூலகத்தில் உள்ளது. மாணவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என நூலகர் மகேந்திரன், பிரமோத் அஷ்ரப் சித்திகா ஆகியோர் விளக்கினர் .மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்தும். பல்வேறுநூல்கள்குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனர் .

    இதை தொடர்ந்து நூலகத்தில் உறுப்பினராகாத மாணவிகள் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டனர் .அவர்களுக்கான உறுப்பினர் காப்பு தொகையை நூலக மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி செலுத்திஅவரும் ரூ .1000 செலுத்தி நூலகப் புரவலராகசேர்ந்தார்.தொடர்ந்து நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுடன் மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்த்தினர். பணி நிறைவு நூலகர் கணேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை பற்றி களஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
    • சான்றிதழ் படிப்பிற்கான பாடப்புத்தகம், உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் இயக்குநர் கடிதத்தில் தெரிவித்துள்ள தகவலின் படி மாவட்ட அளவில் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத் தொண்டு மற்றும் சமூக சேவை குறித்து மூன்று மாதச் சான்றிதழ் படிப்பு நடத்துவதாகத் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேற்படி சான்றிதழ் படிப்பானது, 6 நாட்கள் நேரடி வகுப்புகளாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்படும். மேலும், கிராம அளவில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை பற்றி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்படும். சான்றிதழ் படிப்பிற்கான பாடப்புத்தகம், உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இம்மூன்று மாதச் சான்றிதழ் படிப்பின் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    இம்மூன்று மாதச் சான்றிதழ் படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், களப்பணியாளர்கள், கிராம இளைஞர் தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இப்பயிற்சியில் சேர பயிற்சிக் கட்டணமாக ரூ. 1000 இணைய வழி வாயிலாக ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலரைத் தொடர்பு கொண்டு செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, தஞ்சாவூர் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் ராமு என்பவரை தொடர்பு கொள்ளளாம். தொலைபேசி எண் 9994287333 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×