search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர்"

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம் என்றும், தற்போது அதிருப்தியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ளனர் என்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். #DKShivakumar
    பெங்களூரு :

    பெங்களூருவில் மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். எல்லாருக்கும் பதவி மீது ஆசை இருக்கத்தான் செய்யும். ஆனால் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி, அதிகாரத்திற்காக பா.ஜனதா செய்யும் தந்திரங்கள் பற்றி நன்கு தெரியும்.

    எத்தனை எம்.எல்.ஏ.க்களுடன் அவர்கள் பேரம் பேசி உள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த விதமான பதவிகள், பணம் தருவதாக கூறியுள்ளனர் என்ற தகவல்கள் உள்ளன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பேரம் பேசியது உள்ளிட்ட எல்லா ஆதாரங்களையும் காங்கிரஸ் தலைவர்களிடம் எம்.எல்.ஏ.க்களே கொடுத்துள்ளனர்.



    எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவது பற்றி முதல்-மந்திரி குமாரசாமி, சித்தராமையாவுக்கு நன்கு தெரியும். அதனை அவர்கள் அலட்சியமாக விட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி குமாரசாமியும், சித்தராமையாவும் பொறுமையாக உள்ளனர். நானாக இருந்தால் 24 மணிநேரத்தில் எம்.எல்.ஏ.க்களுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிட்டு இருப்பேன். கூடிய விரைவில் எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுவோம்.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து ஆட்சியை கவிழ்க்க சதி நடந்து வருகிறது. தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் முகாமிட்டுள்ளனர். அந்த எம்.எல்.ஏ.க்கள் யார்? என்று தற்போது சொல்ல முடியாது. அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களா? பா.ஜனதாவை சேர்ந்தவர்களா? என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது.

    மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பலர் எங்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.

    இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார். #DKShivakumar
    கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் இன்று காலை மேகதாதுவிற்கு சென்றார். அங்கு அணை கட்டப்பட உள்ள பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். #MekedatuDam
    பெங்களூர்:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த மாதம் மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் கர்நாடகா வழங்கியது. இந்த திட்ட வரைவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

    கர்நாடகாவில் ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகர் அணை உள்பட சில சிறிய அணைகள் உள்ளன. அந்த அணைகளில் 104 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்க வசதி உள்ளது.

    இந்த தண்ணீரில் இருந்தே தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய உரிய பங்கு தண்ணீரை கர்நாடகம் தர மறுக்கிறது. இந்த நிலையில் மேகதாதுவில் கட்டப்படும் அணையில் 67 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.

    அத்தகைய சூழ்நிலையில் மொத்தம் 171 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வைத்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் முழுமையாக வறண்டுவிடும் அபாயம் உள்ளது.

    காவிரி நதி நீருக்கான சட்டப்போராட்டத்தில் தமிழகம் வெற்றி பெற்று தனக்குரிய பங்கை பெற்ற போதிலும், ஆண்டுதோறும் போதிய தண்ணீர் கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அடுத்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழக சட்டசபையில் நேற்று ஒரு மனதாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

    தமிழக அரசு பல்வேறு வழிகளில் தனது எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வந்த போதிலும், கர்நாடகா மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளது. நேற்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதில் மேகதாதுவில் அணை கட்ட உடனடியாக ஆய்வு பணிகளை தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை கர்நாடக நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மேகதாதுவிற்கு சென்றார். அங்கு அணை கட்டப்பட உள்ள பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.


    மந்திரி சிவக்குமாருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழுவினர் சென்றிருந்தனர். அவர்களுடன் மேகதாது அணை எப்படி கட்டப்படும் என்று மந்திரி சிவக்குமார் விவாதித்தார்.

    மேகதாது அணை அருகில் நீர் மின்நிலையம் கட்டப்பட உள்ளது. அந்த பகுதியையும் மந்திரி சிவக்குமார் ஆய்வு செய்தார். மேகதாது அணையை எப்போது கட்ட தொடங்கலாம் என்றும் அதிகாரிகளிடம் மந்திரி சிவக்குமார் கேட்டு அறிந்தார்.

    மேகதாது பகுதியில் சில மணிநேரம் தங்கியிருந்து மந்திரி சிவக்குமார் ஆய்வு நடத்தியுள்ளார். இந்த ஆய்வு தகவல்களை அவர் பெங்களூர் சென்றதும் குமாரசாமியிடம் தெரிவிக்க உள்ளார். இதை தொடர்ந்து மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடகா அதிரடியாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

    கர்நாடக அரசு தீவிரம் காட்டும் மேகதாது அணை காவிரி ஆற்றில் சிவசமுத்திரம் அருவி அருகே அமைய உள்ளது. தமிழகத்தின் ஒகேனக்கல் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் 2 பெரிய மலைகளுக்கு மத்தியில் இந்த அணை கட்டப்பட உள்ளது.

    664 மீட்டர் அகலத்தில் கட்டப்பட இருக்கும் மேகதாது அணையால் கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் அதிக நீர்வளம் பெற்று செல்வசெழிப்பாக மாறிவிடும். ஆனால் தமிழகத்தின் டெல்டா ஏற்கனவே காய்ந்து வரும் நிலையில் மேலும் நீர் பாசனப் பகுதிகளை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படும். #MekedatuDam
    எங்கள் நிலத்தில் நாங்கள் அணை கட்டுகிறோம். மேகதாது திட்டத்தில் தமிழகம் அரசியல் செய்ய வேண்டாம் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். #MekedatuDam #KarnatakaMinister
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியதை அடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கர்நாடக அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இதுகுறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது.

    இதில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர், நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே, போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பா, முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள் பசவராஜ் பொம்மை, எச்.கே.பட்டீல் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மேகதாது திட்டம் உள்பட கர்நாடக நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    “மேகதாது திட்டம் உள்பட கர்நாடகத்தில் நிறைவேற்றப்பட உள்ள பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் முன்னாள் நீர்ப்பாசனத்துறை மந்திரிகள் ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முக்கியமாக மேகதாது திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை அந்த மாநில அரசு கூட்டியுள்ளது. இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண நாங்கள் விரும்புகிறோம்.

    நான் நாளை(அதாவது இன்று) மேகதாதுவுக்கு நேரில் சென்று அணை கட்ட உள்ள இடத்தை பார்வையிட உள்ளேன். என்னுடன் ஊடகத்தினரையும் அழைத்து செல்கிறேன். நீர்ப்பாசனத்திற்காக நாங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தவில்லை. குடிநீர் பயன்பாடு மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்வது தான் இ்தன் நோக்கம். மேகதாது பகுதியில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் இல்லை.

    தமிழகம் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று நான் தமிழகத்தை கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற விவரங்களை தருகிறோம்.

    மேகதாது அணை திட்டம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    எங்களின் சட்ட நிபுணர் குழுவினர், தமிழகத்தை தொடர்பு கொண்டு பேசுவார்கள். இந்த திட்டம் தமிழகத்திற்கு உதவும். எங்களுக்கு இதில் இருந்து மின்சாரம் கிடைக்கும். அந்த நீரை நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம். இது எங்கள் மாநிலத்தின் உரிமை. இந்த திட்டத்தை எங்களின் சுயநலத்திற்காக மட்டும் செயல்படுத்தவில்லை.

    புதிய அணை கட்டுவதால் சுமார் 5 ஆயிரம் எக்டேர் நிலம் நீரில் மூழ்கும். இதில் பெரும்பகுதி வனப்பகுதியாக இருக்கிறது. நடப்பு ஆண்டில் 395 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை தமிழகத்திற்கு திறந்துவிட்டுள்ளோம். 64 டி.எம்.சி. நீரை தேக்கும் அளவுக்கு புதிய அணை கட்டப்படுகிறது. இந்த அணை நீரை நீர்ப்பாசனத்திற்கு பயன்படுத்தவே மாட்டோம்.

    கர்நாடக எல்லைக்குள் எங்கள் நிலத்தில் தான் அணை கட்டுகிறோம். நிலம், இதற்கு செலவிடப்படும் நிதி அனைத்தும் கர்நாடகத்திற்கு சொந்தமானது. வேறு எந்த மாநிலம் மீதும் கர்நாடகத்திற்கு விரோதம் இல்லை. அதனால் தமிழகம் ஆதங்கப்பட வேண்டியது இல்லை.

    இந்த விஷயத்தில் கர்நாடகம் அரசியல் செய்யவில்லை. இதுகுறித்து முழு விவரங்களையும் தமிழகத்திற்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த விஷயத்தில் மக்களுக்கு நல்லது செய்ய நாங்கள் தயாராக உள்ளோம். விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

    இந்த விஷயத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்கு தமிழகம் தயாராக இல்லை என்று அந்த மாநில அமைச்சர் சண்முகம் கூறி இருக்கிறார். எங்களுடன் பேச முடியாது என்று சொன்னால் எப்படி?. நாங்கள் தமிழகத்துடன் தகராறு செய்ய மாட்டோம். இரு மாநிலத்தினரும் சகோதரர்கள். காவிரி நீர் கர்நாடகத்தில் இருந்து தான் தமிழகத்திற்கு செல்ல வேண்டும்.

    மகதாயி நதி நீரை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று நடுவர் மன்றம் கூறியுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அநீதி ஏற்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நீரை பயன்படுத்திக்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கிருஷ்ணா நடுவர் மன்ற தீர்ப்பு விஷயத்தில் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த தடை ஆணையை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி சட்ட நிபுணர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.”

    இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார். #MekedatuDam #KarnatakaMinister
    ×