search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒற்றைத் தலைவலி"

    • உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது.
    • நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும்.

    நம்முடைய உடல் இயக்கம் சீராக நடைபெறுதற்கு தூக்கம் முக்கியமானது. பிறந்த குழந்தைகள் ஒரு நாளில் 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்குவார்கள். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை ஆழ்ந்த இரவுத் தூக்கம் அவசியமானது.

    தினசரி சீராக தூங்குவதன் மூலம் உடலையும், மனதையும் புத்துணர்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள முடியும். அதே சமயம். ஒரு நாளில் 8 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமான நேரம் தூங்கினால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இரவு நேரத்தில் சீரான தூக்கம் கொள்ளாமல் பகல்பொழுதில் தூங்குவதும். நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்தை பாதிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

    நீண்டநேரம் தூங்கும்போது தொடர்ச்சியாக உடல் அசைவின்றி இருக்கும். இதன் காரணமாக தசைகளின் இயக்கம் குறைந்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டில் இடையூறு ஏற்படும்.

    இதன்மூலம் சோம்பல் உணர்வு அதிகரிக்கும். எந்த வேலையும் செய்ய முடியாமல் அலுப்பு உண்டாகும். நீண்ட நேரம் ஒரே மாதிரியான அமைப்பில் படுத்திருக்கும் போது முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

     அதிக நேரம் தூங்கும்போது மூளையில் உள்ள நரம்புக் கடத்திகளின் செயல்பாடு குறைந்து நாளடைவில் நினைவாற்றல் இழப்பு ஏற்படக்கூடும். நீண்ட நேரம் தூங்கினால் தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் செரோடோனின் அளவு குறையும்.

    இதன் காரணமாக தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சினைகள் உண்டாகும். அதுமட்டுமல்லாமல், சிந்திக்கும் திறன், தீர்வுகாணும் திறன் குறைந்து எதிர்மறையான மனநிலை மாற்றத்துக்கும் வழிவகுக்கும்.

    அதிகப்படியான தூக்கம் ஹார்மோன் சுரப்பில் இடையூறை ஏற்படுத்துவதோடு, சீரற்ற நேரத்தில் தூங்கும் பழக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் மனஅழுத்தம், மனச்சோர்வு, மறதி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

    சீரற்ற தூக்கத்தால் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படுவதோடு உடல் இயக்கத்தின் அளவும் குறையும். இதனால், உடலில் தேவை யற்ற கொழுப்பு அதிகரிக்கும். இது உடல் பருமன் நோய்க்கு வழிவகுக்கும். அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்ற வாழ்வியல் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

    • தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம்.
    • வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும்.

    தூக்கத்தை தொலைப்பது தான், தலைவலி வர முக்கிய காரணம். வைரஸ் காய்ச்சலின் முன்னோட்டமாகவும், தலைவலி வரும். வலி நிவாரண மாத்திரைகளை, டாக்டரின் ஆலோசனையின்றி சாப்பிட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடுவது, மன நோயாகவும் மாற வாய்ப்புள்ளது.

    தலைவலி ஏன் வருகிறது?

    நீண்ட நாள் தலைவலி, குறுகிய கால தலைவலி என, இரண்டு வகைகள் உண்டு. நெற்றியின் இரண்டு பக்கத்திலும், காற்று சிற்றலைகள் உள்ளன. குளிர் தாக்குதலால், இவற்றின் உள்பக்க ஜவ்வு, வீக்கம் அடைந்து, மூக்கு சிற்றலை ஜவ்வில், சைனஸ் அலர்ஜியை ஏற்படுத்துவதால், தலைவலி ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டை நிபுணர் அறிவுரையின்படி, 5 நாட்கள் மாத்திரை உட்கொண்டால், சீராகி விடும்.

     கண் பார்வை குறைபாடும் ஒரு காரணமா?

    மூக்கின் நடுச்சுவர் வளைவு, ஜவ்வு வீக்கம் இருந்தாலும், அடிக்கடி தலைவலி வரும். இதை, அறுவை சிகிச்சை மூலமே, சரி செய்ய முடியும். கண் பார்வை குறைபாடு உள்ளோருக்கும், பின்பக்க தலைவலி வரும். கண்ணில் நீர் அழுத்தம் அதிகமானால், தலைவலி வரும்.

     ஒற்றைத் தலைவலி ஏன் வருகிறது?

    தலையின் ஒரு பக்கத்தில் ஒற்றைத் தலைவலி வரும். நீண்டநேரம் இருக்கும். வாந்தி வந்தால் குறைந்துவிடும். சில பேருக்கு, ஆண்டுக்கணக்கில் பாதிப்பு வரும். வலி நிவாரணிகளை, டாக்டரின் ஆலோசனை இன்றி சாப்பிடுவதால், மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், ஒற்றைத் தலைவலி வரலாம். நரம்பியல் நிபுணர்களை பார்த்து, சிகிச்சை எடுப்பது அவசியம்.

    தலைவலி வந்தால் நடக்கும்போது தள்ளாட்டம் வருமா?

    இரவில் அதிகம் கண் விழிப்போர், நீண்ட நேரம் புத்தகம் படிப்போர், இரவு ஷிப்டில் தொடர்ந்து வேலை செய்வோர், `வெப்சைட்'டில் மூழ்கி கிடப்போர், `டிவி'யை நீண்ட நேரம் பார்ப்போருக்கும் தலைவலி வர வாய்ப்பு உள்ளது. தூக்கத்தை தொலைப்பது தான், இதற்கு முக்கிய காரணம். சிலருக்கு முன்பக்க தலை வலிக்கும். நடக்கும்போது தள்ளாட்டம் வரும். மயக்கம் வரும். இத்தகைய பாதிப்பு உடையோர் நல்ல மனநல நிபுணரை சந்திப்பது நல்லது.

    விட்டு விட்டு தலைவலி வருவது ஏன்?

    தாழ்வான கட்டிடங்களுக்கு குனிந்து செல்லும்போதோ, கிரிக்கெட் விளையாட்டாலோ, எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு கவனிக்காமல் விட்டால், உள் காயங்கள் ஏற்படலாம். இவர்களுக்கு, விட்டு விட்டு தலைவலி வரும். தலையில், எக்ஸ்-ரே, `ஸ்கேன்' எடுத்து, பாதிப்பின் காரணம் அறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

     தீராத தலைவலி, புற்றுநோயின் அறிகுறியா?

    இடைவிடாத தலைவலி உள்ளோர், தூக்கத்தில் அடிக்கடி எழுந்து உட்கார்ந்து கொள்வோருக்கு, மூளையில் நீர் கட்டி, புற்றுநோய் கட்டி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கு, நீண்ட கால சிகிச்சை பெற வேண்டிய நிலை வரும். அதற்காக தலைவலி வருவோருக்கெல்லாம், புற்றுநோயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

    தலைவலிக்கும், உணவில் சேர்க்கும் உப்புக்கும் தொடர்பு உண்டா?

    பெரும்பாலான வைரஸ் காய்ச்சல்களுக்கு, தலைவலி, ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். காரணம் கண்டறிந்து, உரிய முறையில் சிகிச்சை பெறுவது நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவு குறைந்தாலும், உப்பின் அளவு கூடி அல்லது குறைந்தாலும், அளவுக்கு அதிகமாக தலைவலி வர வாய்ப்புண்டு.

     மன அழுத்தம் தலைவலிக்கு காரணமா?

    தலைவலி என, கடைகளில் இஷ்டம்போல் வலி நிவாரண மாத்திரை வாங்கிப்போட்டு, நோயின் தாக்கத்தை முற்ற விடக்கூடாது. அப்படி செய்தால், மனநோயாக மாற வாய்ப்புள்ளது. தொழில் வர்த்தகர்கள், பணிகளை இழுத்துப்போட்டுச் செய்வோர், வங்கி அதிகாரிகளுக்கும் தலைவலி வர வாய்ப்புள்ளது. மன அழுத்தத்தாலும் பாதிப்பு வரலாம். வேலையை கண்டபடி இழுத்துப்போட்டு செய்யாமல், பணிகளை முறைப்படுத்தி செய்வதும், இடைஇடையே ஓய்வு எடுப்பதும் நல்லது.

    சரியான நேரத்தில் உணவு கட்டாயம் என்கிறீர்களே?

    சாப்பிடாமல் பட்டினி கிடப்போர், உரிய நேரத்திற்கு சாப்பிடாமல் ஒரு வேளை மட்டும் சாப்பிடுவோர், முறையாக உணவு பழக்கம் இல்லாதோருக்கும், தலைவலி வரும். சரியான உணவு பழக்கம் அவசியம். இந்தியாவில், பெரும்பாலும் தலைவலியால் பாதிக்கப்படுவதற்கு, ரத்தக்கொதிப்பு காரணமாக உள்ளது. இதற்காக, ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    பெரிய மருத்துவமனைகளில், தலைவலிக்கென பிரத்தியேக பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், சரியான நேரத்தில் உணவு, சரியான தூக்கம், மன அழுத்தத்தால் பாதிக்காத வகையில் திட்டமிட்டு பணியாற்றுதல் ஆகியவற்றால், தலைவலி பாதிப்பில் இருந்து தப்பலாம்.

    • எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
    • அதிமதுரம் ஒரு `நிதானமான’ மலமிளக்கி.

    * அதிமதுரவேரை சுவைக்க வித்தியாசமான இனிப்பு தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

    * புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும். தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

    * அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் ரத்தம் நிற்கும்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.

    * அதிமதுர வேர் பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்துவர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.

    * குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை `அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்' எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

    * அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத்தொடங்கியிருக்கின்றன.

    * சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம்.

    * சைனஸ் பிரச்சினை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தை சிறிதளவு சேர்க்கலாம்.

    * அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது.

    * பொதுவாக அதிமதுரம் ஒரு `நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும்.  ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக்.

    * அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.

    * அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

    * வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறு கோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ×