search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா பாதுகாப்பு சபை"

    தெற்காசிய நாடுகளில் தலைதூக்கி வருவதாக நம்பப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கிளைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று தடை விதித்துள்ளது.
    நியூயார்க்:

    மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின.

    2013-ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் வலுப்பெற்ற இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ஆயிரம் வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
     
    ஆனால் ஈராக், சிரியாவில் இதன் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை ஏற்படுத்தும் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை பயங்கரவாதி தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாக ஐ.எஸ். அமைப்பினர் சமிபத்தில் தெரிவித்திருந்தனர். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பாகிஸ்தானில் கடந்த 2015-ம் ஆண்டில் தெஹ்ரிக்-இ-தலிபான் தலைவர் ஐ.எஸ்.ஐ.எஸ். நிறுவனரும் தலைவருமான அபுபக்கர் பக்தாதிக்கு செய்துதந்த சத்தியத்தின்படி, பின்னர் தலிபான் இயக்கங்களில் இருந்து பிரிந்துவந்த பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதி ஹபீஸ் சையத் தலைமையில் தெற்காசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை பரப்ப உறுதி ஏற்றதாக அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது.



    தெற்காசியாவில் உள்ள முக்கிய நாடுகளில் காலூன்ற நினைக்கும் இந்த அமைப்புக்கு ’ஐ.எஸ்.ஐ.எஸ். கோராசான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முஹம்மத் அமைப்பின் தலைவனான பயங்கரவாதி ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் கடந்த முதல் தேதியன்று அறிவித்தது.

    இதைதொடர்ந்து, தெற்காசிய நாடுகளில் தலைதூக்கி வருவதாக நம்பப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கிளைக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று தடை விதித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களின் மூலம் சுமார் 150 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்ததால் இந்த அமைப்புக்கு சர்வதேச தடை விதிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
    அமெரிக்க தேர்தலில் தலையிட சீனா முயற்சி செய்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் டிரம்ப் புகார் அளித்துள்ளார். #DonaldTrump #China #UNSecurityCouncil
    நியூயார்க்:

    உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லிணக்கம் இல்லை. இரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் தொடர்ந்து கூடுதல் வரி விதித்து வருகின்றன. தைவானுக்கு அமெரிக்கா போர் விமான பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது சீனாவுக்கு அமெரிக்கா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.



    இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பேரழிவு ஏற்படுத்துகிற ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நவம்பர் 6-ந் தேதி நடக்க உள்ள எங்கள் தேர்தலில் தலையிடுவதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. இது எனது நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும்” என்று குறிப்பிட்டார். இது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையின் 33 இடங்களுக்கும், 39 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. #DonaldTrump #China #UNSecurityCouncil
    இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள காஸா பகுதியில் பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்படுவது தொடர்பாக விவாதிக்க வரும் 13-ம் தேதி ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறது. #UNGeneralAssemblyemergencysession
    நியூயார்க்:

    1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.

    கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

    இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.

    குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் காஸா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இஸ்ரேல் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 129 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, கடந்த மே மாதத்தில் மட்டும் 61 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்நிலையில், காஸா எல்லையில் போராடும் பாலஸ்தீன மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையை அவசரமாக கூட்ட வேண்டும் என அரபு நாடுகள் மற்றும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு கோரிக்கை விடுத்தது.

    இதனையேற்று, ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது கூட்டம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு அவசர கூட்டம் வரும் புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  #UNGeneralAssemblyemergencysession
    ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக இந்தோனேசியா, ஜெர்மனி, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா மற்றும் டொமினிக்கன் ரிப்பப்ளிக் ஆகிய நாடுகள் தேர்வாகியுள்ளன. #UNelectsSecuritycouncil
    நியூயார்க்:

    சர்வதேச விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.

    இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

    15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது.

    அவ்வாறு முன்னர் தேர்வு செய்யப்பட்ட நெதர்லாந்து, ஸ்வீடன், எத்தியோப்பியா, பொலிவியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் பதவிக்காலம் அடுத்த ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. எனவே, புதிய தற்காலிக உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஓட்டெடுப்பு நேற்று நடைபெற்றது.



    மொத்தம் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையில் ஜெர்மனி மற்றும் டொமிமிக்கன் ரிப்பப்ளிக் நாடுகள் தலா 184 வாக்குகளை பெற்றன. தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவாக 183 வாக்குகளும், பெல்ஜியம் நாட்டுக்கு 181 வாக்குகளும் கிடைத்தன.

    ஆசிய-பசிபிக் கண்டத்தை சேர்ந்த நாடு என்ற வகையில் ஒரு இடத்துக்கு மாலத்தீவு - இந்தோனேசியா இடையே போட்டி நிலவியது. மொத்தம் பதிவான 190 வாக்குகளில் 144 வாக்குகள் இந்தோனேசியாவுக்கு ஆதரவாகவும், 46 வாக்குகள் மாலத்தீவுக்கும் கிடைத்தன. இதன் அடிப்படையில் இந்த வாக்கெடுப்பில் இந்தோனேசியா வெற்றிபெற்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்குள் நுழைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #UNelectsSecuritycouncil

    ×