search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயத்த ஆடை ஏற்றுமதி"

    • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது.

    திருப்பூர்:

    பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் மாநகருக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய அளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது.

    அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 ஆயிரத்து 787 கோடியே 3 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.12 ஆயிரத்து 216 கோடியே 35 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.70 சதவீதம் வர்த்தகம் குறைவாகும்.

    இதுபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.83 ஆயிரத்து 852 கோடியே 3 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 193 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.98 சதவீதம் குறைவாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

    இதுபோல் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.29 ஆயிரத்து 267 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.13 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஆர்டர் வருகை அதிகரித்து ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி நிலையில் பயணத்தை துவங்கியது.
    • வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்புக்கான வர்த்தக விசாரணைகளும் வரத்துவங்கியுள்ளன.

    திருப்பூர் :

    நடப்பு நிதியாண்டின் 10 மாதங்களில், ரூபாய் மதிப்பில் 12.9 சதவீதமும், டாலரில் 4.81 சதவீதமும், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி அடைந்துள்ளது.நடப்பு 2022 - 23ம் நிதியாண்டு துவக்கத்தில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி நிலையில் பயணத்தை துவங்கியது.

    ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது முந்தைய 2021 - 22ம் நிதியாண்டின் ஏப்ரல் மாதத்தைவிட நடப்பு நிதியாண்டு ஏப்ரல் மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி 24.20 சதவீதம், மே மாதம் 34.92 சதவீதம், ஜூன் மாதம் 59.02 சதவீதம் அதிகரித்தது.அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகளாவிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, உள்நாட்டில் கட்டுக்கடங்காமல் உயர்ந்த பஞ்சு, நூல் விலைகள், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இதன் எதிரொலியாக நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சி விகிதம் நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதம் 6.17 சதவீதம்,ஆகஸ்ட் மாதம் 6.87 சதவீத வளர்ச்சியையே எட்டமுடிந்தது.

    செப்டம்பர் மாதம் 10.63 சதவீதமும், அக்டோபர் மாதம் 13.35 சதவீதமும் ஏற்றுமதி சரிவை சந்தித்தது. நவம்பர் மாதம் முதல் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் படிப்படியாக மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளது.நவம்பர் மாத ஏற்றுமதி வர்த்தகம் 22.71 சதவீதம், டிசம்பர் மாத ஏற்றுமதியில், 10.51 சதவீதம் வளர்ச்சி நிலை எட்டப்பட்டுள்ளது.

    மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், கடந்த ஜனவரி மாதத்துக்கான ஏற்றுமதி வர்த்தக விவரங்களை வெளியிட்டது. முந்தைய நிதியாண்டின் ஜனவரி மாதம் 11,511 கோடி ரூபாய் மதிப்பில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்றிருந்தது. இந்த வர்த்தகம் நடப்பு நிதியாண்டின் ஜனவரி மாதம் 12,227 கோடி ரூபாயாக 6.22 சதவீதம் உயர்ந்துள்ளது.

    ஜனவரி மாத மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் உயர்ந்தாலும்கூட டாலர் மதிப்பில் 3.45 சதவீதம் சரிவையே சந்தித்துள்ளது. முந்தைய ஜனவரியில் 1.546 பில்லியன் டாலருக்கு நடந்த ஏற்றுமதி நடப்பு நிதியாண்டு ஜனவரியில் 1.493 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

    நடப்பு நிதியாண்டின் 10 மாதங்களில் ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 1 லட்சத்து 6,408 கோடி ரூபாய், டாலரில் கணக்கிடும்போது 13.333 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயத்த ஆடை ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.10 மாத ஏற்றுமதியை பொறுத்தவரை, ரூபாய் மதிப்பில் 12.9 சதவீதமும், டாலரில் 4.81 சதவீதமும் ஏற்றுமதியில் வளர்ச்சி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிதியாண்டு நிறைவடைய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன.பிரதான ஜவுளி மூலப்பொருட்களான பஞ்சு, நூல் விலைகள் சாதகமாக உள்ளன. வெளிநாடுகளிலிருந்து ஆடை தயாரிப்புக்கான வர்த்தக விசாரணைகளும் வரத்துவங்கியுள்ளன.

    எனவே வரும் மாதங்களில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் எழுச்சிபெறும் என்கிற நம்பிக்கை ஏற்றுமதியாளர் மத்தியில் எழுந்துள்ளது.

    • உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பொருளாதார மந்தநிலையில் ஏற்பட்டதால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
    • புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து ள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளுக்கு ஆடை களை ஏற்றுமதி செய்து வர்த்தகம் நடக்கிறது.

    ஆடை ஏற்றுமதி வர்த்தகம்

    கடந்த காலங்களில் நூல் விலை உயர்வு மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பொருளாதார மந்தநிலையில்  ஏற்பட்டதால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

    கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அகில இந்தியளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9 ஆயிரத்து 801 கோடிக்கு நடைபெற்றது. இது கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 22.7 சதவீதம் அதிகரிப்பு. திருப்பூரில் ஆயத்த ஆடை வர்த்தகம் மெல்ல மெல்ல ஆர்டர்கள் நடந்து வருகிறது.

    11 ஆயிரத்து 52 கோடி வர்த்தகம் 

    இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.11 ஆயிரத்து 52 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தம் ரூ.12 ஆயிரத்து 214 கோடிக்கு நடைபெற்றது.

    இது கடந்த ஆண்டை விட 10.53 சதவீதம் அதிகரிப்பு. ஆயத்த ஆடை ஏற்றுமதி சதவீதம் அதிகரித்துள்ளதால், புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து ள்ளனர்.

    • உக்ரைன்-ரஷியா இடையேயான போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை போன்றவை காரணமாக ஜவுளித்தொழில் பெரும் பின்னடைவை சந்தித்தது.
    • கடந்த ஆண்டு என்பது கொரோனா காலத்தில் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த காலகட்டமாகும்.

    திருப்பூர்:

    பின்னலாடை வர்த்தகத்தின் மூலமாக இந்தியாவுக்கு அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டிக்கொடுக்கும் ஊராக திருப்பூர் விளங்கி வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வரும் பனியன் தொழில் கடந்த கால சூழ்நிலைகள் காரணமாக முடக்க நிலையை சந்தித்துள்ளது. நூல் விலை அபரிமிதமான உயர்வு, உக்ரைன்-ரஷியா இடையேயான போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை போன்றவை காரணமாக ஜவுளித்தொழில் பெரும் பின்னடைவை சந்தித்தது. அதன்காரணமாக திருப்பூர் பின்னலாடை வர்த்தகமும் முடக்கியுள்ளது.

    இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த செப்டம்பர் மாதம் 18 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. அதன்தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதத்துக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் என்பது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 21 சதவீதம் வீழ்ச்சியடைந்து இருக்கிறது. அதாவது தொடர்ச்சியாக ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

    ஆயத்த ஆடைகள் மற்றும் ஓவன் ஆடைகள் தயாரிப்பில் இந்திய அளவில் திருப்பூரின் பங்களிப்பு மட்டும் 55 சதவீதமாக இருக்கிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி என்பது திருப்பூரில் ஆயத்த ஆடை தொழில் வீழ்ச்சியையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. திருப்பூரில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ரூ.20 ஆயிரத்து 250 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.18 ஆயிரத்து 80 கோடியாகும். டாலர் மதிப்பில் 2 ஆயிரத்து 572 பில்லியனாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 2 ஆயிரத்து 426 பில்லியன் டாலராக இருந்துள்ளது. கடந்த ஆண்டு என்பது கொரோனா காலத்தில் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் இருந்த காலகட்டமாகும்.

    அதன்பிறகு கொரோனா ஊரடங்கு முடிந்து தொழில் நிறுவனங்கள் செயல்பட தொடங்கிய பின்னரும் நடப்பு ஆண்டில் பெரிய அளவில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கவில்லை என்பதை காட்டுகிறது.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    நூல் விலை உயர்வு, உக்ரைன்-ரஷியா போர், உலக அளவில் பொருளாதார மந்தநிலை காரணமாக இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. செப்டம்பர், அக்டோபர் மாத ஏற்றுமதி என்பது அதற்கு முன்பு 4 மாத ஆர்டர்களை பொறுத்தது. நவம்பர், டிசம்பர் மாதம் வரை ஏற்றுமதி வர்த்தகம் என்பது குறைவாகவே இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆடைகள் தயாரிக்க வர்த்தக விசாரணை நடந்து வருகிறது. இந்த வர்த்தக விசாரணை ஆர்டராக மாறி ஆடைகளை தயாரித்து அனுப்பும்போது ஜனவரி, பிப்ரவரி மாதத்துக்கு பிறகு ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்க தொடங்கும். ஏ.இ.பி.சி., பியோ, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவை ஒருங்கிணைந்து புதிய ஆர்டர்களை ஈர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. பின்னலாடை தொழிலை பாதுகாக்க வசதியாக 'பேக்கிங் கிரெட்டிட்' மீதான வட்டி மானியத்தை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 4 மாதங்களாகவே திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் முழு வீச்சில் நடைபெறவில்லை. இருக்கின்ற ஆர்டர்களை மட்டுமே செய்து கொடுத்து வந்தனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு புதிய ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது வெளிநாடுகளில் இருந்து வர்த்தக விசாரணை மட்டுமே நடந்து வருகிறது. அவை ஆர்டர்களாக மாறும் என்று ஏற்றுமதியாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    ஏஐடியூசி. திருப்பூா் மாவட்ட 5 வது மாநாடு ஊத்துக்குளி சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம் வருமாறு:-

    மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் திருப்பூா் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, நூல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் தொழில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருவதுடன், பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆகவே, ஜவுளித் தொழிலைப் பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழக அரசு சுமைப்பணித் தொழிலாளா்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.21 ஆயிரமாக நிா்ணயிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில் பதிவுசெய்துள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் பணப்பயன்களை உயா்த்தி வழங்குவதுடன், ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நடப்பு பருத்தி ஆண்டில்(2022 அக்டோபர்-2023 செப்டம்பர்), மொத்த பஞ்சு வரத்து 397 லட்சம் பேல்(ஒரு பேல்-170 கிலோ) அளவு இருக்கும். 359 லட்சம் பேல் அளவு தேவைகள் உள்ளன. 38 லட்சம் பேல் அளவு கூடுதல் கையிருப்பாக இருக்கும் என்று மத்திய அரசு கணக்கிட்டுள்ளது.

    கடந்த சீசனில் வரலாறு காணாத அளவு ஒரு கேண்டி(356 கிலோ) 65 ஆயிரத்தில் இருந்து, 1.05 லட்சம் ரூபாய் வரை உயர்ந்தது. வழக்கமாக சர்வதேச விலையை காட்டிலும் இந்திய பருத்தி விலை குறைவாக இருக்கும்.

    கடந்த ஆண்டு சர்வதேச விலையை காட்டிலும் இந்திய பருத்தி விலை உயர்ந்ததால், ஜவுளி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது.ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை இறக்குமதி செய்யும் நாடுகளில் பொருளாதார மந்தநிலை முழுவதுமாக சீராகவில்லை. இது குறித்து இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:-

    நடப்பு பருத்தி ஆண்டில் தரமான பருத்தி அதிக அளவு கிடைக்கும் என்பதால் விலையும் கட்டுக்குள் வந்தது. கடந்த சில மாதங்களாக ஸ்தம்பித்திருந்த ஜவுளித்தொழில், டிசம்பர் மாதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    கடந்த 10 நாட்களில் பஞ்சு விலை 5,500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. நூற்பாலைகள் பல்வேறு காரணங்களால், 60 சதவீதம் மட்டுமே உற்பத்தியை தொடர்கின்றன. இந்நிலையில் 65 ஆயிரம் ரூபாயாக இருந்த பஞ்சு விலை, 70 ஆயிரத்தை கடந்துள்ளதால் நூற்பாலைகள் திகைத்துப்போயுள்ளன.

    பருத்தி சீசன் துவங்கிய ஒரே மாதத்தில் விலை உயர்வது ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் சவாலாக மாறிவிடும். இருப்பினும் இம்மாத இறுதியில் பருத்தி மார்க்கெட் நிலவரம் முழுமையாக தெரியவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகளாவிய நாடுகளில் இருந்து நம் நாட்டின் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன.
    • பஞ்சு, நூல் விலை குறைந்து வருகிறது. டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது.

    திருப்பூர்:

    நடப்பு நிதியாண்டில் (2022-23) ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களில் உலக சந்தைக்கு மொத்தம் ரூ.34,663.84 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது 2021-22ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.25,139.89 கோடியாக இருந்தது. இதன் மூலம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டை விட 37.88 சதவீதம் அதிகரித்துள்ளது. இது திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:-

    சீன எதிர்ப்பு அலையால் அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகளாவிய நாடுகளில் இருந்து நம் நாட்டின் ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிக அளவில் வருகின்றன. நூல் விலை மற்றும் இதர மூலப்பொருட்கள் விலை உயர்வால் வெளிநாட்டு வர்த்தகர்கள் கடந்த 1½ ஆண்டுகளில் 20 முதல் 25 சதவீதம் வரை ஏற்றுமதி ஆடைகளுக்கு விலை உயர்வு அளித்துள்ளனர்.

    நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 37.88 சதவீதமும், டாலரில் கணக்கிடும்போது, 32 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. பஞ்சு, நூல் விலை குறைந்து வருகிறது. டாலர் மதிப்பு உயர்ந்துள்ளது. ஏற்றுமதிக்கு சாதகமான சூழல் நிலவுவதால் அடுத்தடுத்த மாதங்கள் பிரகாசமாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×