search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன் வர்த்தகம்"

    • போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான பல வழக்குகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
    • கடந்த 6 மாதங்களாக போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

    மங்களூரு:

    போதைப்பொருள் நடமாட்டம் உடுப்பியில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா உத்தரவிட்டார். இதுதொடர்பாக அவர் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மணிப்பால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான பல வழக்குகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் தான். எனவே, அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தோம்.

    அதன்பேரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 2 மாணவர்களை அந்தந்த கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. மற்ற கல்லூரி அதிகாரிகளும் இதேபோல் மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்த 6 மாதங்களாக போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை 2 மாணவர்களும் இடைநீக்கத்தில் இருப்பார்கள்.

    இதுபோன்ற குற்றச்செயல்களில் யாரேனும் சிக்கிக் கொண்டால், அவர்கள் எந்த நிறுவனத்தாலும் ஆதரிக்கப்பட மாட்டார்கள் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

    மற்ற கல்வி நிறுவனங்களும் இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் சிக்கும்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பால் மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் வேறு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது சொந்த நெட்வொர்க் மூலம் கஞ்சாவை பார்சல் மூலம் கொண்டு வந்துள்ளார்.

    அந்த மாணவரை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும் மணிப்பால் மருத்துவக்கல்லூரி நிர்வாகமும் அந்த மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இனிமேல் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஆன்லைன் வர்த்தகம் மூலம் வரும் பார்சல்களும் கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்ைண கொன்று நாடகமாடிய கல்லூரி மாணவர் போலீசில் சிக்கியது எப்படி?
    • தனிப்படையினருக்கு ஐ.ஜி. சுதாகர் பாராட்டு

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது 63). விவசாயி. இவரது மனைவி சரோஜா (55).

    கடந்த 21-ந் தேதி மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி சரோஜா கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார். மேலும் வீட்டில் பீரோவில் இருந்த சில நகைகளும் மாயமாகி இருந்தது.

    இந்த சம்பவம் குறித்து சிறுமுகை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பிடிக்க 5 தனிப்படை அமைக்க ப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது போலீசாருக்கு அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் (19) என்ற கல்லூரி மாணவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. வசந்தகுமார் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவரை தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் சிறுமுகை தென்திருப்பதி நால் ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வசந்தகுமாரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் மூதாட்டியை கொன்று நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். கைதான வசந்தகுமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்க ப்பட்டார்.

    போலீசாரிடம் வசந்தகுமார் அளித்த வாக்குமூல விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. வசந்தகுமார் வாக்குமூலத்தில் கூறியிரு ப்பதாவது:-

    எனது தாயார் தையல் கடை வைத்துள்ளார். அவரிடம் மூதாட்டி சரோஜா துணிகளை தைப்பதற்கு கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். பின்னர் துணிகளை நான் எடுத்து சென்று மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்கி வருவேன்.

    அப்போது மூதாட்டி தனியாக இருப்பதையும், வீட்டில் நகை இருப்பதையும் நான் தெரிந்த கொண்டேன். இந்த நிலையில் நான் ஆன்லைன் டிரேடிங் (ஆன்லைன் வர்த்தகம்) செய்து வந்தேன். அதற்காக எனக்கு ரூ.1 லட்சம் தேவை பட்டது.

    இதனால் நான் மூதாட்டி வீட்டில் உள்ள நகைகளை எடுக்க முடிவு செய்தேன்.அவரை தொடர்ந்து கண்காணித்தேன். சம்பவத்தன்று வழக்கம் போல நான் மூதாட்டியிடம் பணம் வாங்குவதற்காக வீட்டிற்கு சென்றேன். மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை பயன்படுத்தி கொண்டு மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்தேன். யாருக்கும் தெரியாமல் பீரோவில் இருந்த நகைகளை எடுத்து கொண்டு வெளியே வர முயற்சி செய்தேன். அப்போது மூதாட்டி என்னை பார்த்து விட்டார்.

    அவர் சத்தம் போட்டால் நான் மாட்டி கொள்வேன் என நினைத்து அங்கிருந்த கத்தியை எடுத்து அவரை குத்திவிட்டு 15 பவுன் நகையை எடுத்து வந்துவிட்டேன்.

    பின்னர் வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராதபடி இருந்தேன். நகையை யாரும் பார்த்துவிட கூடாது என்பதற்காக நகைகளை எனது பேண்ட் பாக்கெட்டிலேயே வைத்து கொண்டு சுற்றினேன். மூதாட்டியை கத்தியால் குத்தும்போது எனது கையில் சிறிய காயம் ஏற்பட்டது.

    அதனை கல்லூரியில் பாட்டில் உடைந்து குத்தியதாக வீட்டில் தெரிவித்தேன். மேலும் எனது செலவிற்காக அவ்வப்போது உறவினர்கள் வீடு, பக்கத்து வீடுகளில் திருடி வந்தேன். இதுவரை யாரிடமும் சிக்கியது இல்லை. மூதாட்டி இறந்து விடுவார் என நினைக்கவில்லை. ஆனால் அவர் இறந்து விட்டார். போலீசாரும் என்னை பொறிவைத்து பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.

    இந்த நிலையில் கொலை வழக்கை துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டினர். 

    ×