search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆனி திருவிழா"

    • 23-ந் தேதி கலி வேட்டை நடக்கிறது.
    • 26-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன்குடியிருப்பு ஸ்ரீமன் நாராயணசாமி கோவிலில் ஆனி மாத செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் திருவிழா நேற்று தொடங்கியது.

    இதனையொட்டி நேற்று திருக்கொடியேற்றம் நடந்தது. இந்த விழா 26-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. தினமும் பணிவிடையும், உகப்படிப்பும், உச்சிப்படிப்பும், அன்னதர்மமும், அய்யா வாகனத்தில் பவனி வருதல், ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    18-ந் தேதி காலை 9 மணிக்கு கோலப்போட்டி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கோலப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தொழில் அதிபர் கே.ராஜலிங்கம் பரிசு வழங்குகிறார்.

    23-ந் தேதி மாலை 6 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடி தவக்கோலத்தில் வடக்கு வாசலில் மக்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது.

    26-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செம்பவள பஞ்சவர்ண தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசையும், 6 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், நண்பகல் 1 மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 3 மணிக்கு ஆஞ்சநேயர் திருத்தேர் முன்னே செல்ல, டாக்டர் எஸ்.லெட்சுமணனால் தொடங்கப்பட்ட செம்பவள பஞ்சவர்ண திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    அப்போது கோவில்விளை சந்திப்பில் அன்னதர்மமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தேர் கோவில் முன் வந்து சேரும். அதைத்தொடர்ந்து அன்னதர்மமும், வாண வேடிக்கையும் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், 1 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும், 2 மணிக்கு கொடியிறக்கமும், இனிப்பு வழங்குதலும் நடைபெறுகிறது.

    திருத்தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் எம்.தங்ககிருஷ்ணன், உப தலைவர் ஏ.சந்திரசேகர், செயலாளர் பி.துரைச்சாமி, இணைச்செயலாளர் ஆர்.சிவசுப்பிரமணியன், பொருளாளர் கே.உதயகுமார், துணைப்பொருளாளர் பி.ராமகிருஷ்ணன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் இ.கிருஷ்ணமணி, எஸ்.நாராயணபெருமாள், ஜி.மணிகண்டன், எஸ்.ஸ்ரீதர், எஸ்.நாராயணமணி, ஆர்.ராஜேஸ்வரன், ஆர்.சுரேந்திரன், டி.தங்கலிங்கம் மற்றும் ஊர் மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.
    • 25-ந்தேதி பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது.

    ஆறுமுகநேரியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி உத்திர திருவிழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதனை ஒட்டி இன்று காலை சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்று கொடிப்பட்டம் வீதி உலாவும், அதனை தொடர்ந்து கும்ப பூஜை, ஹோமம் ஆகியவை நடைபெறுகிறது தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறுகிறது. ஆனித் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

    வரும் 25-ந்தேதி பத்தாம் திருவிழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் இரவு ஆன்மீக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், பக்தி பட்டிமன்றம், சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், தேவாரம் நடைபெறுகிறது.

    • மீனாட்சி-சொக்கநாதர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் ஆகம விதிமுறைகள் படி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள மீனாட்சி உடனுறை சொக்கநாதர் கோவில் பாண்டிய மன்னரான மாற வர்ம சுந்தரபாண்டியன் என்ற மன்னரால் கி.பி. 1216 கட்டப்பட்ட மிக பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

    இந்த கோவில் ஆனது குரு சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகும். கோவில் ஆகம விதிமுறைகள் படி 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்கு வருடந்தோறும் ஆனி மாதம் திருக்கல்யாணம் மற்றும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக 2 வருடமாக திருவிழா நடைபெறவில்லை

    இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் கொடிகம்பத்தில் சிவாச் சாரியார்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தனர். இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி -அம்பாள் காட்சி அளித்தனர்.

    விழாவில் வருகிற 10-ந் தேதி அன்று மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணமும், 11-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    • 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடக்கிறது.
    • தேரோட்ட விழா 4-ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ஸ்ரீமந் நாராயணசுவாமி கோவிலில் 93-வது ஆண்டு ஆனித் தேரோட்டத் திருவிழாவின் 1-ம் திருநாளான இன்று தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் திருப்பள்ளி எழுப்புதல் நடந்தது. அய்யா நாராயணசுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.

    அதன்பின் அய்யா நாராயணசுவாமி நாற்காலியில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். தொடர்ந்து 7 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கோவில் கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நாராயணசுவாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினசரி காலை மற்றும் இரவில் அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். விழாவின் 8-ம் நாளான வரும் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பரிவேட்டை விழா நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊருக்கு மேற்கே உள்ள ஆற்றில் பரிவேட்டையாடுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 11-ம் நாளான 4-ம் தேதி (திங்கள் கிழமை) நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல், கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

    • திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • ஜூலை 5-ந் தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா எழுந்தருளல் நடக்கிறது.

    ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலின் ஆனி உத்திர திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான கால்நாட்டுவிழா நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு காலையில் கன்னி விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முகூர்த்தகால் நாட்டும் விழா நடைபெற்றது. இதற்கான சடங்கு வைபவங்களை ஆலய பூஜகர் அய்யப்ப பட்டர் மற்றும் சண்முகம் பட்டர் ஆகியோர் செய்தனர்.

    பக்த ஜன சபை சார்பில் பூபால் ராஜன், தெரிசை அய்யப்பன், சுப்பிரமணியன், தங்கமணி மற்றும் திருமுறை பண்ணிசை குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா செய்திருந்தார். இதன் பின்னர் மாலையில் திருவிளக்கு பூஜையும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

    திருவிழா நாட்களில் தினசரி காலையும் மாலையும் சப்பர பவனி நடக்கிறது. சொற்பொழிவு மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. நிறைவு நாளான ஜூலை 5-ந் தேதி இரவு சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா எழுந்தருளல் நடக்கிறது.

    ×