search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Rivers Day"

    • நெல்லை நீர்வளம் அமைப்பின் சார்பில் நெல்லை நீர் வளம் சங்கமம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

    நெல்லை:

    உலக ஆறுகள் தினத்தை யொட்டி நெல்லை மாவட்ட கலெக்டரின் முயற்சியால் கொண்டுவரப்பட்ட நெல்லை நீர்வளம் அமைப்பின் சார்பில் நெல்லை நீர் வளம் சங்கமம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

    சபாநாயகர் அப்பாவு

    பாளை நூற்றாண்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், நீர்நிலை தன்னார்வலர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை நீர் வளம் நினைவுத் தொகுப்பு என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள நீர் நிலைகளின் வழித்தடங்கள் தொடர்பான தண்ணீர் வரைபடம் வெளியிடப்பட்டது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    தாமிரபரணி ஆற்று தண்ணீரை குளிக்கும் தரத்தில் இருந்து குடிக்கும் தரத்திற்கு உயர்த்த நெல்லை மாவட்டம் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். வருகிற 2024-ம் ஆண்டுக்குள் குடிக்கும் தரத்திற்கு தாமிரபரணி ஆற்றின் நீர் மாற்றப்படும்.

    தாமிரபரணி நதியை ஒட்டி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றி அதனை தரமான முறையில் மாற்றுவதற்கு இரவு பகல் பாராது உழைக்க வேண்டும்.

    தாமிரபரணி நீர் சுத்தமாவதன் மூலம் அதனை நம்பியுள்ள குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் குடிக்கும் தரத்துக்கு மாறிவிடும். அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு நம் நெல்லை மாவட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க முடியும். எனவே அதற்காக அனைவரும் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த நிகழ்ச்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் சுகன்யா, சேரன்மகாதேவி சப் கலெக்டர் ரிஷப், தாமிரபரணி நீர் நிலை செயற்பொறியாளர் மாரியப்பன், மற்றும் பழனிச்சாமி, மதிவாணன், வெங்கட்ராமன், சீனிவாசன், அருண் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நீர்நிலை ஆர்வ லர்கள் கலந்து கொண்டனர்.

    • தாமிரபரணியை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துக்கொண்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகள் உடன் இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து சைக்கிள் ஓட்டி கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள 1200-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு நெல்லை நீர் வளம் என்ற அமைப்பை கடந்த ஆண்டு தொடங்கினார்.

    இந்த அமைப்புடன் இணைந்து பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் நெல்லை முதல் பாபநாசம் வரை தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மாணவ-மாணவிகளை கொண்டு சைக்கிள் பேரணியை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு பெடல்ஸ் பார் தாமிரபரணி என்ற பெயரில் தாமிரபரணியை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகளை வைத்துக்கொண்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணி மேலப்பாளையத்தை அடுத்த பகுதியில் இருந்து தொடங்கி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக தாமிரபரணி நதிக்கரையில் முடிவடைந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பேரணியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, நெல்லை நேச்சர் கிளப், பெண்களால் மட்டுமே இயங்கும் "இன்னர்வீல் கிளப் ஆப் திருநெல்வேலி" மற்றும் தனியார் பள்ளி மாணவ- மாணவிகள் உடன் இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து சைக்கிள் ஓட்டி கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சி குறித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-

    கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் நெல்லை நீர் வளம் என்ற அமைப்பை தொடங்கி செயல்படுத்தி வருகிறோம். இதன் மூலம் 1500-க்கும் மேற்பட்ட நீர் நிலைகளை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறோம். பல்வேறு தன்னார்வலர் அமைப்புகளும் இணைந்து செயல்படுகிறது.

    தாமிரபரணி ஆற்றங்கரை கிராமங்களான கோபாலசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் பகுதிகளில் பல்வேறு வகைகளில் சுத்தப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் அதற்கு முன்னதாகவே 75-க்கும் மேற்பட்ட குளங்களை தூர்வாரும் பணிகளும் நடந்து வருகிறது.

    பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டம் முழுவதும் அடுத்த ஓராண்டுக்குள் 14 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆரைக்குளம் பகுதியில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கு கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் அரசு துறைகள் மற்றும் பல்வேறு இயற்கை சார்ந்த தன்னார்வலர் அமைப்புகளும் கலந்து கொண்டனர். இன்று ஒரே நாளில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சுத்தம் படுத்தும் பணி நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×