search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "womens road picket"

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் ஆலடி ஊராட்சியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களின் அடிப்படை வசதியான குடிநீர் வசதிக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு வீடுகள் தோறும் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதுவும் பொதுமக்களுக்கு போதுமானதாக இல்லை.

    இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களான கொட்டாரங்குப்பம், ராமநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கும் அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கும் சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் விருத்தாச்சலம் பாலக்கொல்லை சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலடி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சுண்ணாம்பு கலந்த குடிநீர் வருவதால் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக கோளாறு சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு உள்ளது. எனவே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகிப்பதுடன் தட்டுப்பாடின்றி அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த கூடபட்டு காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல மாதங்களாக இந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் முறையாக வழங்கப்படவில்லை.

    இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை திருப்பத்தூர் ஆலங்காயம் செல்லும் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பெரியமூக்கனூர் அருகே உள்ள தாய பவட்டம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கபடவில்லை. அப்பகுதி பெண்கள் குடிநீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு மனு கொடுத்தனர். ஆனால், இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் திடீர்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அவிநாசியில் குடிநீர் வராதத்தை கண்டித்து இன்று காலை 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அவினாசி:

    அவினாசியில் 18 வார்டுகள் உள்ளன. குடியிருப்பு நிறைந்த இந்த பகுதிகளுக்கு மேட்டுப்பாளையம் பவானி ஆற்று குடிநீர் பேரூராட்சி சார்பாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் ரூ.150 வசூல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக 15 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. குடிநீர் சீராக விநியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதில் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் சேவூர்- அவினாசி செல்லும் சாலை தாசில்தார் அலுவலகம் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். பொதுமக்களிடம் சமாதானப்பேச்சு நடத்தினர். ஆனால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    தஞ்சையில் குடிநீர் கேட்டு 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜிபட்டி, முத்துநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இங்கு கடந்த சில வாரத்திற்கு முன்னர் அங்குள்ள குடிநீர் நீர்தேக்க தொட்டி பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் குடிதண்ணீர் இல்லாமல் அந்த பகுதியில் உள்ளவர்கள் அவதி அடைந்து வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மானோஜிப்பட்டி மற்றும் முத்துநகர் பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலிகுடங்களுடன் ஈஸ்வரிநகர் சந்திப்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அங்கு மறியலில் ஈடுபட்ட பெண்கள் மறியலை கைவிட மறுத்தனர்.

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.
    ×