search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "women councillor"

    • வார்டில் உள்ள சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்
    • சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 79-வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த லக்சிகாஸ்ரீ என்பவர் உள்ளார். ஜீவா நகர், ராமையா தெரு, ஓம்சக்தி கோவில் தெரு, சுந்தராஜ புரம் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் கடந்த 6 மாதங்களாக அடிக்கடி சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறுவது அடிக்கடி நடந்து வருகிறது.

    இதனால் அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. சில நாட்கள் குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருவதாக பொது மக்கள் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீயிடம் புகார் தெரிவித்தனர். அவரும் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு வார்டில் உள்ள சாக்கடை பிரச்சினை, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் மீண்டும் ஜீவாநகர் பகுதியில் கழிவுநீர் வெளியேறும் பிரச்சினை தலைதூக்கியது. இதனால் அதிருப்தி அடைந்த பொது மக்கள் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீயை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினர். இந்த முறையும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது.

    மாநகராட்சி அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கை கண்டித்தும், 79-வது வார்டில் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தியும் இன்று காலை ஜீவாநகர் மெயின்ரோடு சந்திப்பில் கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ தலைமையில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க. பகுதி செயலாளர் முருகானந்தம் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மாநகராட்சி நிர்வாகத்தை ஆளும் கட்சி பெண் கவுன்சிலர் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ கூறுகையில், வார்டு பிரச்சினை குறித்து பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் பேசினேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக மேயர், கமிஷனர் சந்தித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது வார்டை புறக்கணிக்கிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி வார்டு பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.

    ×