search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virudhunagar district"

    விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாழ்க விவசாயி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    விருதுநகர்:

    போதிய மழையில்லாததால் விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். காப்பீடு செய்த அனைத்து பயிர்களுக்கும் பாரபட்சமில்லாமல் 100 சதவீத இழப்பீடு வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு உற்பத்தி செலவில் இருந்து கூடுதலாக 50 சதவீத ஆதாயவிலையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வாழ்க விவசாயி இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி வாழ்க விவசாயி இயக்கத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் காளிராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைபாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் வெம்பகோட்டை யூனியன் தலைவர் பெருமாள்சாமி, மாநில குழு உறுப்பினர் ராஜசேகர், வக்கீல் ராகவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக 1,254 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    விருதுநகர்:

    புத்தாண்டு கொண்டாட்டத்தை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். வாகனங்களை ஓட்டுவதில் கவனமாக செயல்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை காவல் துறை அறிவித்திருந்தது.

    மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் புத்தாண்டு நாளில் இரவு முழுவதும் முக்கிய பகுதிகளை கண் காணித்து வந்தனர். இதில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 1,254 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக வழக்கு பதிந்தவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்தது. மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    விருதுநகர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்தது. விருதுநகரில் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மின்வெட்டும் ஏற்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.

    சிவகாசி, திருச்சுழி, வத்திராயிருப்பு, பிளவக்கல், கோவிலாங்குளம், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    விருதுநகர்-33

    வெம்பக்கோட்டை-22.2

    பிளவக்கல்-3.2

    மாவட்டத்தில் 296.8 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசியது. இன்று காலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக கோவில் வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதிகாலையில் பெய்த மழை காரணமாக கோவில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

    மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 1-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    விருதுநகர்:

    கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த நோயினால் இறப்புகள் குறைவாக இருந்தபோதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.

    மேலும் இந்த நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும். நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை, வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் பணி கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 14 சுற்று தடுப்பூசிப் பணி முடிவடைந்துள்ளது. தற்போது 15-வது சுற்று தடுப்பூசி போடும் பணி வருகிற 1-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2.24 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு இந்த தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள் மற்றும் எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் முகாமில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சிவஞானம் கேட்டுக்கொள்கிறார்.
    விருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தி மேல்நிலைப்பள்ளியாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், அரசு நடுநிலைப்பள்ளிகளை உயர் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் பணிகளை அம்மா வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது.

    அதன் அடிப்படையில் சிவகாசி தொகுதிக்குட்பட்ட பள்ளபட்டி கிராமத்தில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கிராம மக்கள் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி பள்ளபட்டி என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே இதை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் எடுத்துரைத்தேன்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கூமாப்பட்டியில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா என்னிடம் கோரிக்கை விடுத்தார்.

    விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கூமாப்பட்டியில் மேல் நிலைப்பள்ளி மிகவும் அத்தியாவசியம் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

    அதுபோலவே சாத்தூர் தொகுதி ஓ.மேட்டுப்பட்டியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மக்கள் ஒன்றியச்செயலாளர் சண்முகக்கனி தலைமையில் என்னிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    இந்த பள்ளிகளையும் உடனடியாக மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

    அதன் பேரில் தற்போது இந்த 3 பள்ளிகளையும் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப்யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்ட மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையின் செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட அனைத்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×