search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaccination camp for livestock"

    விருதுநகர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் கோமாரிநோய் தடுப்பூசி முகாம் வருகிற 1-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
    விருதுநகர்:

    கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

    இந்த நோயினால் இறப்புகள் குறைவாக இருந்தபோதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.

    மேலும் இந்த நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும். நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை, வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் பணி கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 14 சுற்று தடுப்பூசிப் பணி முடிவடைந்துள்ளது. தற்போது 15-வது சுற்று தடுப்பூசி போடும் பணி வருகிற 1-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2.24 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு இந்த தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள் மற்றும் எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் முகாமில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சிவஞானம் கேட்டுக்கொள்கிறார்.
    ×