search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vandalised"

    அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை மர்மநபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #PeriyarStatueVandalised
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசு ஆஸ்பத்திரி அருகே 8 அடி உயரம் கொண்ட பெரியார் சிலை உள்ளது. கடந்த 1998-ம் ஆண்டு தி.க. தலைவர் கி.வீரமணி இந்த சிலையை திறந்து வைத்தார்.

    பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் தி.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பெரியார் சிலை சாக்குகளால் போர்த்தி மூடி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மறைந்த பழைய தலைவர்களின் சிலைகளை மூடி வைக்க தேவையில்லை என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறந்தாங்கியில் மூடி வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சாக்குகள் அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    இந்தநிலையில் இன்று அதிகாலை அந்த பகுதிக்கு வந்த யாரோ மர்ம நபர்கள் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். சிலையின் தலைபகுதியை இரண்டு துண்டுகளாக உடைத்து அதே இடத்தில் வீசி இருந்தனர்.



    காலையில் அந்த பகுதிக்கு வந்தவர்கள் பெரியார் சிலை உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறந்தாங்கி முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. அடுத்த சில நிமிடங்களில் அங்கு தி.க., தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். மேலும் ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. சிவ.மெய்யநாதனும் வந்தார்.

    பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய மர்மநபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தி.க. அறந்தாங்கி மாவட்ட இளைஞரணி தலைவர் யோகராஜ் அறந்தாங்கி போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், டி.எஸ்.பி. கோகிலா ஆகியோரும் வந்து விசாரித்தனர்.

    இதற்கிடையே தி.க. மண்டல தலைவர் ராவணன் தலைமையில் அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் கட்சியினர் திடீரென அமர்ந்து மறியல் செய்தனர். உடனடியாக பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். அவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோக செய்தார். இந்த மறியலால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் பெரியார் சிலையை மர்ம நபர்கள் உடைத்து சென்றனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரியார் சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல் அறந்தாங்கியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அதையும் மீறி இன்று அதிகாலை பெரியார் சிலை உடைக்கப்பட்டது பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இந்து கடவுள்கள் குறித்து அவதூறாக பேசியதை இந்து முன்னணியினர் கண்டித்தனர். இதில் பயங்கர மோதல் உருவானது.

    அதேபோல் இந்து கடவுள் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தி.க. தலைவர் கி.வீரமணிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.  #PeriyarStatueVandalised
    பாகிஸ்தானில் பிரசித்தி பெற்ற இந்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், கோவிலை அடித்து நொறுக்கி தீ வைத்து சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #Hindutemplevendalised
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள், கோவிலை  சேதப்படுத்தினர். மேலும் அங்கிருந்த  புனித நூல்களுக்கும், சிலைகளுக்கும் தீ வைத்தனர். இச்சம்பவம் கைர்புர் மாவட்டத்தில் உள்ள கும்ப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அத்துடன், குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற செயல்கள் குரானின் போதனைகளுக்கு எதிரானது எனவும் தெரிவித்தார்.

    கோவிலை சேதப்படுத்திய குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த கோவில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருப்பதால், பாதுகாப்புக்கு யாரையும் நியமிக்கவில்லை. இந்த சம்பவத்திற்கு பின்னர் அப்பகுதியில் உள்ள இந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து பாகிஸ்தான் இந்து கவுன்சில் ஆலோசகர் ராஜேஷ் குமார் ஹர்தாசனி கூறுகையில், இந்து கோவில்களின் பாதுகாப்புக்காக ஒரு சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் இந்த தாக்குதல்கள்  இந்து சமூகத்தின் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மத நல்லிணக்கத்தை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன எனவும் கூறினார்.

    இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில் 220 மில்லியன் மக்களில், 2 சதவீதம் இந்து மக்கள் வாழ்கின்றனர். இதில் பெரும்பாலானோர் சிந்து மாகாணத்தில் வசிப்பது குறிப்பிடத்தக்கது. #Hindutemplevendalised

    அமெரிக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சிலைகளை அவமதித்து, பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. #USHindutemplevendalised
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம், லூயிஸ்வில்லே நகரில் பிரசித்தி பெற்ற சுவாமி நாராயணன் கோவில் உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இந்த கோவிலுக்குள் நுழைந்து, கோவிலின் சிலைகள் மற்றும் கலைநயம் வாய்ந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

    கோவிலின் உட்புற சிலைகள் மற்றும் சுவர்களின் மீது கருப்பு நிற சாயம் அடித்து, சில வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த நாற்காலி ஒன்றின் மீது கத்தி குத்தப்பட்டிருந்தது. பின்னர் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு, அலமாரி காலியாக இருந்தது. இச்சம்பவம் இந்திய-அமெரிக்க மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருந்ததாக பலரும்  குற்றம்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மேயர் கிரெக் பிஷ்ஷர், கண்டனம் தெரிவித்துள்ளார். சேதமடைந்த கோவிலை பார்வையிட்ட அவர், இது குறித்து மேலும் பேசுகையில், “இதுபோன்ற கோழைத்தனம் நம் சமூகத்திற்கு தீங்கானது. நம் நாடு இரக்கம் மற்றும் ஒற்றுமையை மட்டுமே வலியுறுத்துகிறது. நாம் ஒரு நகரம், ஒரு நாடு எனும் வகையில், சமத்துவத்துடன் அனைவருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வாழ வேண்டும்" என கூறினார்.

    எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் இவ்வாறு செய்திருக்கக்கூடாது எனவும், நாம் அமைதியான முறையில் வழிபாட்டிற்காக வந்துள்ளதால் மகிழ்ச்சியாக கடவுளை வழிபட வேண்டும் எனவும் அப்பகுதியைச் சேர்ந்த ராம் படேல் கூறினார். இச்சம்பவம் மிகவும் வருந்தக்கூடியது எனவும், அக்கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் லூயிஸ்வில்லே காவல் துறை அதிகாரி ஸ்டீவ் கான்ராட் தெரிவித்துள்ளார்.

    கென்டக்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்க பிரதிநிதி நிமா குல்கர்னி கூறுகையில், "இந்த சம்பவம் எங்கள் நம்பிக்கை மற்றும் சமூகத்தை பலவீனப்படுத்துவதற்கான அச்சுறுத்தல்" என்றார். கடந்த காலங்களில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #USHindutemplevendalised

    வங்காளதேசம் நாட்டில் நிலம் அபகரிக்கும் முயற்சியில் சிவன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். #Hindutemple
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டங்கைல் மாவட்டத்திற்குட்பட்ட கோக்காடிர் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் சிட்டா ரஞ்சன். தனக்கு சொந்தமான இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிவன் கோவில் ஒன்றை கட்டிய இவர், காப்பாளராக இருந்து நிர்வகித்து வருகிறார். 

    அப்பகுதியில் இருப்பவர்களும் அருகாமையில் வாழும் இந்து மக்களும் இந்த கோவிலில் வழிபாடு செய்து வந்தனர்.

    இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை ) சுமார் பத்துபேர் கும்பலாக வந்து இந்த சிவன் கோவில் மீது தாக்குதல் நடத்தினர். அந்த கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் தலைமையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக நாகர்பூர் காவல் நிலையத்தில் சிட்டா ரஞ்சன் புகார் அளித்துள்ளார்.

    கோவில் அமைந்துள்ள இடத்தை அபகரிக்க முன்னர் சிலமுறை முயற்சித்த அந்த முக்கிய பிரமுகர் தற்போது கோவிலை இடித்து விட்டு நிலத்த அபகரிக்க முயன்றதாக தனது புகாரில் சிட்டா ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

    தாக்குதலில் சேதமடைந்த கோவிலை பார்வையிட்ட போலீசார் இது தொடர்பாக இன்னும் யாரையும் கைது செய்யவில்லை.  #Hindutemple  
    பாரம்பரிய நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். #Sabarimala #SabarimalaProtests
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும்  தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.  

    இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால் கோவிலுக்கு செல்வதற்கான முயற்சியில் சில பெண்கள் இறங்கினர். அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள், செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டினர். ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் இந்த பெண்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். ஆனால் அவர்களை சபரிமலைப் பாதைகளில் போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.



    இந்த எதிர்ப்புக்கும் மத்தியில் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையளர் கவிதா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பெண்ணியவாதி ரெகானா பாத்திமா ஆகியோர் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர். ஆனால் சன்னிதான வாசலை நெருங்கியபோது, பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அதேசமயம், சபரிமலை கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெகானா பாத்திமா புறப்பட்டுச் சென்ற தகவல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், கொச்சியில் உள்ள அவரது வீட்டை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கினர். வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Sabarimala #SabarimalaProtests

    ×