search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Fire"

    • கடந்த மாதமும் இதுபோன்று ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் பலி.
    • தேர்தலை புறக்கணித்துள்ள எதிர்க்கட்சிகள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு.

    வங்காளதேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஸ்சோர் நகரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ரெயிலில் தீப்பிடித்தது. இந்த தீ விபத்து மளமளவென நான்கு பெட்டிகளில் பரவியது.

    இதனால் பயணிகள் அலறி அடித்து வெளியேறினர். இருந்த போதிலும் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    நாளை வங்காளதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய தேர்தலை புறக்கணிப்போம் எனக் கூறிவரும் எதிர்க்கட்சியினர் இதுபோன்ற தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த மாதம் இதுபோன்று நடைபெற்ற ரெயில் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது போலீசார் மற்றும் அரசு எதிர்க்கட்சியான வங்காளதேசம் தேசியவாத கட்சி மீது குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதேவேளையில் வங்காளதேச தேசியவாத கட்சி குற்றச்சாட்டை மறுத்திருந்தது. ஆளும்கட்சியின் அடக்குமுறைக்கு சாக்குபோக்கான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்திருந்தது.

    வங்காளதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசினா ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடந்த வருடம் போராட்டம் செய்தன. இதில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

    • வியாசர்பாடி ரெயில் நிலையத்தை நெருங்கியபோது என்ஜினில் தீப்பற்றியது.
    • உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சென்னை பேசின் பிரிட்ஜ் பாலத்தை கடந்து வியாசர்பாடி ரெயில் நிலையத்தை நெருங்கியபோது என்ஜினில் தீப்பற்றியது. இதனையடுத்து ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. என்ஜின் பகுதியில் இருந்து நெருப்புடன் கரும்புகை எழுந்ததால் பயணிகள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேறினர்.

    விபத்து பற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.
    • ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர்.

    திருப்பதி:

    நிஜாமுதீனிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சுவர்ண் ஜெயந்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த ரெயில் வடமாநிலங்களில் இருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக திருவனந்தபுரம் செல்கிறது. நிஜாமுதீனிலிருந்து நேற்று புறப்பட்டு வந்தது.

    ரெயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். ரெயில் தெலுங்கான மாநிலம் குன்றத்திமடுகு அருகே வந்தபோது, பி-2 ஏசி பெட்டியில் திடீரென புகை வந்தது. இதனை கண்ட பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார்.

    ராம்புரம் கிராமம் அருகே என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ரெயில் நின்றவுடன் அதில் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் கீழே இறங்கி அலறியடித்து ஓடினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் மற்றும் போலீசார் புகை வந்த ரெயில் பெட்டியை சோதனை செய்தனர். அப்போது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. தீயை அணைத்து தற்கலிகமாக சரி செய்யப்பட்டது. பின்னர் ராம்புரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டோர்னக்கல் ரெயில் நிலையத்தில் 40 நிமிடம் ரெயில் நிறுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியை ரெயிலிலிருந்து கழட்டிய பின், ரெயில் புறப்பட்டு சென்றது.

    ரெயில் பெட்டியில் புகை வந்தவுடன் பயணி அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    • போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
    • தென் மாநிலங்களில் அசம்பாவித சம்பவம் ஏற்படுத்துவதற்காகவே, டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளான்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு கடந்த 2-ந்தேதி இரவு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் டி1 பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. அந்த ரெயிலில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் கருகி பலியானார்கள்.

    நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கேரள குற்றப்பிரிவு போலீசாரும், தேசிய புலனாய்வு முகமையினரும் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவன் டெல்லியை சேர்ந்த ஷாரூக் செய்பி (வயது 24) என தெரியவந்தது.

    ரெயிலில் தீ வைத்த அவன், பயணிகள் அங்கும் இங்கும் ஓடிய நேரத்தில் தப்பி சென்று இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டபோது மகாராஷ்டிரா மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ரத்தினகிரி பகுதியில் பதுங்கி இருந்த ஷாரூக் செய்பியை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவன் கேரளா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான். அவனை கோழிக்கோடு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 11 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

    போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. ஷாரூக் செய்பி திட்டமிட்டு டி1 பெட்டியை தேர்ந்தெடுத்து தீ வைப்பு செயலில் ஈடுபட்டுள்ளான். அந்த பெட்டியை அடுத்து, ஏ.சி.பெட்டி உள்ளது. அந்த பெட்டிக்கு தீ பரவினால், அங்குள்ள திரைச்சீலைகள், போர்வை போன்றவையும் தீயில் எரியும். இதனால் ரெயில் முழுவதும் தீ பிடிக்கும் எனக்கருதியே டி1 பெட்டியை தேர்வு செய்ததாக ஷாரூக் செய்பி போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.

    மேலும் அவன் தென் மாநிலங்களில் அசம்பாவித சம்பவம் ஏற்படுத்துவதற்காகவே, டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளான். கேரளா செல்லும் ரெயிலில் ஏறிய அவன் சொரனூர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கி உள்ளான். பின்னர் பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று கேன்களில் பெட்ரோல் வாங்கி உள்ளான். அதன்பிறகு தான் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளான். அவனுக்கு வெளி மாநிலங்களில் இருந்து பலரும் உதவி செய்வதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×