search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNPSC GROUP-4 EXAM"

    • திருச்சி மாவட்டத்தில் 320 மையங்களில் இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நடைபெற்றது
    • தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படாததால் மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் தேர்வு எழுத முடியாமல் திரும்பினர்

    திருச்சி:

    தமிழக அரசுத்துறைகளில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட், வி.ஏ.ஓ., பில் கலெக்டர் உள்ளிட்ட 7ஆயிரத்து 301 காலி பணியிடங்களை நிரப்புதற்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வு இன்று காலை தொடங்கியது.

    9.30 மணிக்குத் தொடங்கி 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் என்பதால் 9 மணிக்கு மேல் தேர்வுமையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் அனுமதிக்கப்படாததால் மையங்களில் தேர்வு எழுத வந்தவர்களில் சிலர் தேர்வு எழுத முடியாமல் திரும்பினர்.

    பல நாட்கள் தேர்வுக்கு தயாராகி தேர்வு எழுத முடியாமல் போனதால் வருத்தத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர்.

    திருச்சி மாவட்டத்தில் 320 தேர்வு மையங்களில் 94 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து தேர்வினை எழுதினர்.

    தேர்வுமையங்களில் தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க 320 தேர்வறை கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், சப்கலெக்டர் தலைமையில் 12 பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்வர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அதேநேரம் தேர்வுமையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்துதரப்படாததால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கன்டோன்மென்ட் வெஸ்ட்ரி பள்ளியில் தேர்வு எழுத வந்த மணப்பாறையை சேர்ந்த சரஸ்வதி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வீல்சேர் வழங்கப்படாததால் சிரமப்பட்டு முட்டிக்காலில் வந்த பெண்ணை காவல் உதவிஆய்வாளர் அகிலா மற்றும் ஊர்க்காவல்படை பெண் போலீஸ் இணைந்து தூக்கிச்சென்று தேர்வு மையத்தில் இறக்கிவிட்டதை பலரும் பாராட்டினர்.

    இதுபோன்ற தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர்.

    முன்னதாக திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் கலெக்டர் மா.பிரதீப்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    ×