search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student studying"

    ஒரு மாணவர் மட்டும் படித்தாலும் பள்ளியை மூட மாட்டோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். #KASengottaiyan

    கோபி:

    கோபியில் 1089 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கோபி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-

    தமிழகம் எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 15 லட்சத்து 47 ஆயிரம் மாணவ -மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.

    மேலும் அரசு பள்ளிகளில் இந்த மாதம் இறுதிக்குள் இணைய தள வசதியுடன் கணினியும் இணைத்து தரப்படும். இந்த வருடம் எல்.கே.ஜி-யு.கே.ஜி வகுப்பு சேர்க்கையில் ஒரு லட்சம் மாணவ-மாணவிகள் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் ஒரு மாணவர் மட்டும் படிக்கும் பள்ளிகள் 33 உள்ளது. இதே போல் 9 மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் 123 உள்ளது. வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கை அதிகரிக்கும். குறைந்த சேர்க்கை காரணம் காட்டி பள்ளிகளை மூடும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்பட பலர் அருகில் இருந்தனர்.

    முன்னதாக கோபி பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாமை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றினார். #KASengottaiyan

    சிங்கம்புணரி அருகே அரசு பள்ளி கட்டிடம் சேதம் அடைந்ததால், வகுப்பறையை தவிர்த்து மாணவர்கள் பள்ளி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி கிருங்காக்கோட்டை ஊராட்சி. இங்கு உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 120 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் 1960-ல் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. இந்த கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்த நிலையில், இடப்பற்றாக்குறை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2 கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டு 1, 2, 3 ஆகிய வகுப்புகள் புதுகட்டிடத்தில் இயங்கி வந்தன.

    இந்த நிலையில் பழைய ஓட்டுக்கட்டிடத்தில் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மட்டும் பயின்று வந்தனர். இந்த கட்டிடம் மிக மோசமாக பழுதடைந்த நிலையில், மேற்கூரை ஓடுகள் உடைந்தும், சுவர்களில் விரிசல் ஏற்பட்டும் எப்போது விழுமோ என்ற அபாயத்தில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் வகுப்பறையை தவிர்த்து, பள்ளி மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

    மேலும் இந்த பள்ளி வளாகத்தில் பழமையான மரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து இந்த பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பழமையான இந்த பள்ளிக்கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. மேலும் பள்ளியின் மேற்கூரை ஓடுகள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே இந்த பள்ளி ஓட்டுக் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான மரங்களில் முறிந்த கிளைகளை வெட்ட வேண்டும்.

    இதை போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

    மேலும் இடியும் நிலையில் உள்ள இந்த பள்ளி ஓட்டுக் கட்டிடம் தான் தேர்தலின் போது வாக்குச்சாவடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×