search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilankan parliament"

    இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்று ராஜபக்சே மீண்டும் வலியுறுத்தியுள்ளார். #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் சிறிசேனா பதவியில் இருந்து நீக்கினார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக்கினார். அதற்கு எதிர்ப்பு கிளம்பவே இலங்கை அரசியலில் குழப்பம் நிலவியது.

    அதன்பின்னர் ஏற்பட்ட குழப்பம் நீங்கி ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதே நேரம் ராஜபக்சேவை எதிர் கட்சி தலைவராக அதிபர் சிறிசேனா நியமித்தார்.

    பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபச்சே ஏற்கனவே தெரிவித்து இருந்தார். தற்போது இதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    “பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு பாராளுமன்றத்தில் போதிய எம்.பி.க்களின் ஆதரவு இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாததால் அவரால் புதிய சட்டங்களை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது.

    இதனால் நாட்டில் பிளவு ஏற்படும். மேலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ரனில் விக்ரமசிங்கே நிறைவேற்றவில்லை. எனவே இது மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது.

    எனவே தற்போதைய பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார். பாராளுமன்றத்தில் பேசும்போதும் இதே கருத்தை தான் அவர் வலியுறுத்தினார்.

    ரனில் விக்ரமசிங்கே அரசு அரசியல் சட்டத்தில் மாற்றம் செய்து புதிய சட்ட வரையறு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இலங்கையில் சிங்களர்களின் ஆதிக்கம் குறைந்து விடும் என ராஜபக்சே அரசு குற்றம் சாட்டி வருகிறது. #Rajapaksa
    இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றக் கூட்டத்தை அதிபர் சிறிசேனாவின் ஆதரவு எம்பிக்கள் மற்றும் ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் புறக்கணித்தனர். #SriLankanParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்கரம சிங்கேவை அகற்றி விட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமிப்பதாக அதிபர் சிறிசேனா அறிவித்தார்.

    அதை ரனில் விக்ரமசிங்கே ஏற்காததால் இலங்கை அரசியலில் குழப்பங்கள் நிலவுகிறது. அதை தொடர்ந்து இன்னும் 20 மாதங்கள் ஆட்சி காலம் இருக்கும் நிலையில் பாராளுமன்றத்தை கலைத்து சிறிசேனா உத்தரவிட்டார். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் இலங்கை பாராளுமன்ற கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டம் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா தலைமையில் நடந்தது.

    ஆனால் இந்த கூட்டத்தை அதிபர் மைத்ரியபால சிறிசேனா மற்றும் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவு எம்.பி.க்கள் புறக்கணித்தனர்.

    இதுகுறித்து அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் எம்.பி. நிமல் டி சில்வா கூறியதாவது:-

    சபாநாயகர் கரு. ஜெயசூர்யா ஒருதலைபட்சமாக ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். ராஜபக்சேவை பிரதமராக ஏற்க மறுக்கிறார். எனவே, சபாநாயகர் தனது முடிவில் இருந்து மாறும்வரை பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம். தொடர்ந்து புறக்கணிப்போம் என்றார்.

    இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. ரவூப் ஹக்கீம் சபாநாயகர் கரு. ஜெய சூர்யாவை நேற்று சந்தித்தார். அப்போது சர்ச்சைக்குரிய முறையில் நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை அச்சு மற்றும் டி.வி. ஊடகங்கள் பிரதமராக அங்கீகரித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

    ராஜபக்சே தலைமையிலான ஆட்சியையும் ஊடகங்கள் அங்கீகரித்துள்ளன. எனவே சட்ட விரோதமான இந்த ஆட்சிக்கு ஊடகங்கள் அங்கீகாரம் வழங்க கூடாது என பாராளுமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ராஜபக்சேவை பிரதமர் என குறிப்பிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். #SriLankanParliament
    பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக மெஜாரிட்டி இருந்தாலும் கூட மீண்டும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிசேனா தெரிவித்துள்ளார். #RanilWickremesinghe #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா பிரதமராக நியமித்தார்.

    ஆனால் இந்த நியமனத்தை ரனில் விக்ரமசிங்கே ஏற்கவில்லை. நான் தான் தொடர்ந்து பிரதமராக இருக்கிறேன் என்று கூறி வருகிறார்.

    இதற்கிடையே ராஜபக்சே தனது மெஜாரிட்டியை நிரூபித்தால் தான் அவரை பிரதமராக ஏற்க முடியும் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இதற்காக வருகிற 14-ந்தேதி பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

    ஆனால் ராஜபக்சேவுக்கு போதிய ஆதரவு இல்லை. எனவே எதிர்க்கட்சியில் உள்ள எம்.பி.க்களையும், ரனில் விக்ரமசிங்கே கட்சியில் உள்ள எம்.பி.க்களையும் இழுப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

    எதிரணியில் இருந்து ஒன்றிரண்டு பேர் ராஜபக்சே அணிக்கு தாவிவிட்டாலும் கூட இன்னும் மெஜாரிட்டியை நிரூபிக்கும் அளவுக்கு போதிய பலம் வரவில்லை.

    எனவே ஓட்டெடுப்பு நடந்தால் ராஜபக்சே தோல்வி அடைந்து பிரதமர் பதவியை இழக்கும் நிலை ஏற்படலாம்.


    இந்த நிலையில் 16 உறுப்பினர்களை கொண்ட தமிழ்தேசிய கூட்டணி எம்.பி.க்களை இழுப்பதற்கு அதிபர் சிறிசேனா தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் ராஜபக்சேவை ஆதரிக்க மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். ஆனாலும் சிறிசேனா தனது முயற்சியை கைவிடவில்லை.

    இதற்கிடையே தமிழ் தேசிய கூட்டணி கட்சி பிரதிநிதிகள் அதிபர் சிறிசேனாவை சந்தித்து பேசினார்கள். அப்போது ஒருவேளை பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக மெஜாரிட்டி இருந்தாலும் கூட மீண்டும் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் சிறிசேனா கூறியிருக்கிறார்.

    பாராளுமன்ற ஓட்டெடுப்பு நடக்கும்போது தமிழ்தேசிய கூட்டணி சபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அவர்கள் உடன்படவில்லை.

    சிறிசேனா தனது கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எப்படியாவது மெஜாரிட்டியை நிரூபித்து நிலையான அரசை ஏற்படுத்துவேன். எனவே கட்சியினர் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார். #RanilWickremesinghe #Rajapaksa
    இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே இப்போதைக்கு பாராளுமன்றம் கலைப்பு இல்லை என சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLankanParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, அன்றிரவு ராஜபக்சேயை அழைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    கடந்த 3 ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த சிறிசேனாவும், ராஜபக்சேயும் திடீரென கைகோர்த்ததால் இலங்கையில் கடும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    225 எம்.பி.க்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், எனவே பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறிசேனாவும் ராஜபக்சேவும் கடந்த மாதம் 28-ந்தேதி இலங்கை பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை முடக்கி அறிவித்தனர். அதன் பிறகு அவர்கள் எம்.பி.க்களை விலைபேசி வளைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. 113 எம்.பி.க்கள் இருந்தால்தான் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்ற நிலையில் சுமார் 100 எம்.பி.க்களே ராஜபக்சேக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் 13 எம்.பி.க்கள் தேவைப்படும் நிலையில், சிறிசேனா- ராஜபக்சே கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ள அழுத்தம் காரணமாக இலங்கை பாராளுமன்றத்தை வரும் 14-ந்தேதி கூட்டப் போவதாக சிறிசேனாவும், ராஜபக்சேயும் அறிவித்துள்ளனர். ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும், தமிழர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும் 13 எம்.பி.க்களை பேரம் பேசி இழுத்து விட முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

    கடந்த இரு தினங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள், எம்.பி.க்களுடன் சிறிசேனாவும், ராஜபக்சேயும் மீண்டும் பேச்சு நடத்தினார்கள். தங்களுக்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, ஓட்டெடுப்பின் போது நடுநிலை வகிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதை ஏற்க தமிழ் எம்.பி.க்கள் மறுத்து விட்டனர்.

    இது சிறிசேனாவுக்கும் ராஜபக்சேக்கும் கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் துணை மந்திரியாக இருந்த மனுஷா நானயக்காரா என்பவர் ராஜபக்சே அணியில் இருந்து விலகி ரனில் பக்கம் சாய்ந்து விட்டார். இதுவும் ராஜ பக்சேக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இதற்கிடையே 14-ந்தேதி பாராளுமன்றம் கூடும்போது, பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட ரனில் விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவருக்கும் உத்தரவிடுவேன் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

    இதனால் இன்னும் 5 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்துக்கு ஏற்ப எம்.பி.க்களை திரட்ட வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலை சிறிசேனாவுக்கும், ராஜபக்சேக்கும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மனுஷா நானயக்காரா போன்று மேலும் சில எம்.பி.க்கள் ரனில் பக்கம் ஓடி விடக் கூடாது என்ற பயம் ராஜபக்சேக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் மேலும் 3 பேருக்கு மந்திரி பதவி அளித்தார்.

    அதன்படி ராஜபக்சேயின் சகோதரர் சமல் சுகாதார மந்திரியாகவும், எஸ்.பி. திச நாயக்க நெடுஞ்சாலைகள் துறை மந்திரியாகவும், பவித்ரா வன்னியராச்சி பெட்ரோலியம் வள மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதன் தொடர்ச்சியாக சில உத்தரவுகளை சிறிசேனா வெளியிட்டார். பெரும்பாலான அதிகாரங்களை தன் வசம், தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் சிறிசேனா உத்தரவிட்டிருப்பதால் இலங்கையில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளதால் சிறிசேனா விரக்தி அடைந்துள்ளார். எனவே அவர் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. பாராளுமன்றம் 14-ந்தேதி கூட்டப்படுவதற்கு முன்பே அவர் அதை கலைத்து விடுவார் என்று கொழும்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இதற்கு பிரதமராக பதவி ஏற்ற ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்று அவர் நேற்றிரவு திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் வேறு வழி தெரியாத சிறிசேனாவும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என்று இன்று காலை அறிவித்தார்.

    சிறிசேனாவும் ராஜபக்சேயும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என்று கூறி இருப்பதால், அவர்களால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


    அதிபர் சிறிசேனா, பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே, சபாநாயகர் ஜெயசூர்யா மூவரும் தினம், தினம் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது இலங்கையில் அரசியல் நெருக்கடிகளை அதிகரிக்க செய்துள்ளது. 14-ந்தேதி பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே மெஜாரிட்டியை நிரூபித்து காட்டினாலும் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க இயலாது என்று சிறிசேனா மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் ரனில் ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். இது கொழும்பில் அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

    இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதுபோல பிரதமராக இருப்பவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லையாம்.

    இதை காரணம் காட்டி ராஜபக்சே பதவியை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. இதனால் இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் புதிய குழப்பங்களும் நெருக்கடியும் அதிகரித்தப்படி உள்ளது. #SriLankanParliament #Rajapaksa #Sirisena #Rajapaksa #RanilWickremesinghe
    தமிழின மக்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலம் தமிழ் எம்.பி.க்கள் ஆதரவைபெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். #Tamilprisoners #SrilankaTamilprisoners #Rajapaksa
    கொழும்பு:

    இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தன்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்தது செல்லாது. நாட்டின் பிரதமராக நான் தொடர்ந்து நீடிக்கிறேன் என  விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    மேலும், பிரதமர் மாற்றம் தொடர்பாக விவாதிப்பதற்காக அவசரமாக பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு விக்கிரமசிங்கே கடிதம் அனுப்பினார்.

    பாராளுமன்றம் அவசரமாக கூட்டப்பட்டால் அங்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர விக்கிரமசிங்கே திட்டமிட்டிருந்த நிலையில், நவம்பர் 16-ம் தேதிவரை பாராளுமன்றத்தை முடக்கம் செய்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவு பிறப்பித்தார்.

    இலங்கை பாராளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பி.க்கள் உள்ளனர். பிரதமர் பதவியில் நீடிப்பதற்கான மெஜாரிட்டியை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு வேண்டும். ராஜபக்சே - ரணில் விக்ரமசிங்கே இருவருமே தங்களுக்கு போதுமான பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி வருகிறார்கள்.

    ராஜபக்சே-சிறிசேனா அணியினருக்கு 96 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களுக்கு மெஜாரிட்டியை பெற மேலும் 18 எம்.பி.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது. ரணில் விக்ரமசிங்கேவுக்கு 115 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் 5 பேரை ராஜபக்சே வளைத்து விட்டதாகவும் இதன் மூலம் அவருக்கு 101 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக தெரிகிறது.

    இதற்கிடையில், வரும் 7-ம் தேதி பாராளுமன்றத்தை கூட்ட அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா ஒப்புதல் அளித்துள்ளார். அப்போது ராஜபக்சே அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால் தீர்மானத்தை ஆதரித்தும், ராஜபக்சேவுக்கு எதிராகவும் வாக்களிக்கப் போவதாக தமிழ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட 21 எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழ் எம்.பி.க்களின் மனப்போக்கை மாற்றி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்பதற்காக ராஜபக்சே காய்நகர்த்தி வருகிறார்.

    இதில் ஒருகட்டமாக தமிழின மக்களின் நீண்டகால கோரிக்கையான இலங்கை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதன் மூலம் தமிழ் எம்.பி.க்கள் ஆதரவைபெற ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.


    இந்த தகவலை ராஜபக்சேவின் மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    தமிழ் மக்களின் அடிப்படை சிக்கல்களை தீர்க்கும் வகையில் பெறுமதியான கலந்துரையாடல்களை உருவாக்க எமது தரப்பு தயாராக உள்ளது. நீண்ட நாள் கைதிகளாக உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபாலா சிறிசேனா மற்றும் பிரதமர் ராஜபக்சே ஆகியோர் தொடர்ந்து கவனம் செலுத்தி விரைவில் தகுந்த முடிவை அறிவிப்பர் என  நாமல் ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான உச்சகட்ட போர் முடிவடைந்த பின்னர் சரணடைந்த பல்லாயிரம் தமிழர்களையும், பின்னர் அரசின் தேடுதல் வேட்டையில் பிடிபட்ட பலரையும் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் ராஜபக்சே அரசு முன்னர் அடைத்து வைத்தது.

    எவ்வித விசாரணையுமின்றி இப்படி பல ஆண்டுகாலமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை முந்தைய ராஜபக்சே அரசும், பின்னர் வந்த மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான அரசும் நிராகரித்து வந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.  #Tamilprisoners #SrilankaTamilprisoners #Rajapaksa
    ×