search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Srilankan president sirisena"

    இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே இப்போதைக்கு பாராளுமன்றம் கலைப்பு இல்லை என சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLankanParliament
    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேயை கடந்த மாதம் 26-ந்தேதி திடீரென நீக்கிய அதிபர் சிறிசேனா, அன்றிரவு ராஜபக்சேயை அழைத்து பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    கடந்த 3 ஆண்டுகளாக எதிரிகளாக இருந்த சிறிசேனாவும், ராஜபக்சேயும் திடீரென கைகோர்த்ததால் இலங்கையில் கடும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

    225 எம்.பி.க்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாகவும், எனவே பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறிசேனாவும் ராஜபக்சேவும் கடந்த மாதம் 28-ந்தேதி இலங்கை பாராளுமன்றத்தை நவம்பர் 16-ந்தேதி வரை முடக்கி அறிவித்தனர். அதன் பிறகு அவர்கள் எம்.பி.க்களை விலைபேசி வளைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. 113 எம்.பி.க்கள் இருந்தால்தான் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும் என்ற நிலையில் சுமார் 100 எம்.பி.க்களே ராஜபக்சேக்கு ஆதரவாக உள்ளனர். மேலும் 13 எம்.பி.க்கள் தேவைப்படும் நிலையில், சிறிசேனா- ராஜபக்சே கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

    இந்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்துள்ள அழுத்தம் காரணமாக இலங்கை பாராளுமன்றத்தை வரும் 14-ந்தேதி கூட்டப் போவதாக சிறிசேனாவும், ராஜபக்சேயும் அறிவித்துள்ளனர். ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும், தமிழர்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்தும் 13 எம்.பி.க்களை பேரம் பேசி இழுத்து விட முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.

    கடந்த இரு தினங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள், எம்.பி.க்களுடன் சிறிசேனாவும், ராஜபக்சேயும் மீண்டும் பேச்சு நடத்தினார்கள். தங்களுக்கு ஆதரவு தராவிட்டாலும் பரவாயில்லை, ஓட்டெடுப்பின் போது நடுநிலை வகிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இதை ஏற்க தமிழ் எம்.பி.க்கள் மறுத்து விட்டனர்.

    இது சிறிசேனாவுக்கும் ராஜபக்சேக்கும் கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்த நிலையில் துணை மந்திரியாக இருந்த மனுஷா நானயக்காரா என்பவர் ராஜபக்சே அணியில் இருந்து விலகி ரனில் பக்கம் சாய்ந்து விட்டார். இதுவும் ராஜ பக்சேக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    இதற்கிடையே 14-ந்தேதி பாராளுமன்றம் கூடும்போது, பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட ரனில் விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவருக்கும் உத்தரவிடுவேன் என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

    இதனால் இன்னும் 5 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்துக்கு ஏற்ப எம்.பி.க்களை திரட்ட வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலை சிறிசேனாவுக்கும், ராஜபக்சேக்கும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மனுஷா நானயக்காரா போன்று மேலும் சில எம்.பி.க்கள் ரனில் பக்கம் ஓடி விடக் கூடாது என்ற பயம் ராஜபக்சேக்கு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் மேலும் 3 பேருக்கு மந்திரி பதவி அளித்தார்.

    அதன்படி ராஜபக்சேயின் சகோதரர் சமல் சுகாதார மந்திரியாகவும், எஸ்.பி. திச நாயக்க நெடுஞ்சாலைகள் துறை மந்திரியாகவும், பவித்ரா வன்னியராச்சி பெட்ரோலியம் வள மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதன் தொடர்ச்சியாக சில உத்தரவுகளை சிறிசேனா வெளியிட்டார். பெரும்பாலான அதிகாரங்களை தன் வசம், தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையில் சிறிசேனா உத்தரவிட்டிருப்பதால் இலங்கையில் உள்ள அனைத்து கட்சி எம்.பி.க்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த ஒரு வாரமாக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளதால் சிறிசேனா விரக்தி அடைந்துள்ளார். எனவே அவர் பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. பாராளுமன்றம் 14-ந்தேதி கூட்டப்படுவதற்கு முன்பே அவர் அதை கலைத்து விடுவார் என்று கொழும்பில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    இதற்கு பிரதமராக பதவி ஏற்ற ராஜபக்சே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என்று அவர் நேற்றிரவு திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் வேறு வழி தெரியாத சிறிசேனாவும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என்று இன்று காலை அறிவித்தார்.

    சிறிசேனாவும் ராஜபக்சேயும் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டோம் என்று கூறி இருப்பதால், அவர்களால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.


    அதிபர் சிறிசேனா, பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே, சபாநாயகர் ஜெயசூர்யா மூவரும் தினம், தினம் புதிய அறிவிப்புகளை வெளியிடுவது இலங்கையில் அரசியல் நெருக்கடிகளை அதிகரிக்க செய்துள்ளது. 14-ந்தேதி பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே மெஜாரிட்டியை நிரூபித்து காட்டினாலும் அவருக்கு பிரதமர் பதவியை வழங்க இயலாது என்று சிறிசேனா மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் ரனில் ஆதரவாளர்கள் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். இது கொழும்பில் அரசியல் குழப்பத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

    இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்தை அதிபரால் கலைக்க முடியாது என்று கூறப்படுகிறது. அதுபோல பிரதமராக இருப்பவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து காட்ட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லையாம்.

    இதை காரணம் காட்டி ராஜபக்சே பதவியை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. இதனால் இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் புதிய குழப்பங்களும் நெருக்கடியும் அதிகரித்தப்படி உள்ளது. #SriLankanParliament #Rajapaksa #Sirisena #Rajapaksa #RanilWickremesinghe
    ×