என் மலர்
நீங்கள் தேடியது "ஊட்டி மலைப்பாதை"
- மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரெயில் புறப்பட்டு வந்தது.
- யானை தண்டவாளத்தை விட்டு நகராமல் சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது.
குன்னூர்:
மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை ஆகிய சமவெளி பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் காட்டு யானைகள் உணவு தட்டுப்பாடு காரணமாக நீலகிரி மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு இடம்பெயர்ந்து வந்த ஒரு காட்டு யானை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை, கே.என்.ஆர்., மரப்பாலம் ஆகிய பகுதிகளில் முகாமிட்டு வந்தது.
அந்த யானை இன்று காலை மரப்பாலம் பகுதிக்கு வந்தது. பின்னர் அங்குள்ள தண்டவாள பகுதியில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி மலை ரெயில் புறப்பட்டு வந்தது. அப்போது மரப்பாலம் பகுதியில் தண்டவாள பாதையில் ஒற்றை காட்டு யானை நிற்பது தெரிய வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில் பைலட் உடனடியாக பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். அதன்பிறகும் அந்த யானை தண்டவாளத்தை விட்டு நகராமல் சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்தது. பின்னர் ஒருவழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பிறகு மேட்டுப்பாளையம் மலை ரெயில் மீண்டும் புறப்பட்டு குன்னூரை நோக்கி சென்றது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வழியில் மரப்பாலம் பகுதி தண்டவாளத்தில் நின்றிருந்த காட்டு யானையை சுற்றுலா பயணிகள் ஆர்வம் கலந்த அதிர்ச்சியுடன் கண்டு மகிழ்ந்தனர்.
- பதறிபோன டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு, பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரையும் எழுப்பினர்.
- சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் தற்போது 2-வது சீசன் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து, ஊட்டிக்கு பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது ஊட்டியில் இதமான காலநிலை நிலவி வருகிறது. வார விடுமுறை தினம் என்பதால், நேற்றும், இன்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அவர்கள் ஊட்டியில் நிலவும் சிதோஷ்ண நிலையை அனுபவித்தும் இயற்கை காட்சிகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீலகிரிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு ஒரு சுற்றுலா பஸ்சில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், நாமக்கல் ராசிபுரத்தில் இருந்து நீலகிரிக்கு புறப்பட்டனர்.
அவர்கள் இன்று அதிகாலை கோவை வந்து, மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரிக்கு மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தனர். அதிகாலை நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் பஸ்சில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
பஸ் மேட்டுப்பாளையம் அடுத்த கல்லார் தூரிப்பாலம் பகுதியில் வந்த போது திடீரென பஸ்சின் பின்பக்க சக்கரம் தீ பிடித்து எரிந்தது. இதனை பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் தங்கள் வாகனத்தை வேகமாக இயக்கி பஸ்சை முந்தி சென்று, டிரைவரிடம் தகவல் தெரிவித்தனர். இதை கேட்டதும் பதறிபோன டிரைவர் உடனடியாக பஸ்சை சாலையோரம் நிறுத்தி விட்டு, பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரையும் எழுப்பினர்.
மாணவர்கள் எழுந்து பார்த்த போது, பஸ்சின் பின் பகுதியில் தீ பிடித்து கொண்டிருந்தது. இதனால் மாணவர்கள் அனைவரும் எழுந்து, அவசர, அவசரமாக வெளியில் ஓடி வந்தனர். சற்று நேரத்தில் பஸ் முழுவதும் தீ பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, பஸ்சில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ மள,மளவென எரிந்து கொண்டிருந்தால் சற்று சிரமம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீவிபத்தில் பஸ் முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. பஸ்சில் இருந்த பொருட்களும் எரிந்து விட்டதாக தெரிகிறது. அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் உயிர் தப்பினர்.
பின்னால் வந்த வாகன ஓட்டிகள் சரியான நேரத்தில் பார்த்து டிரைவரிடம் சொன்னதாலும், மாணவர்கள் உடனடியாக பஸ்சை விட்டு கீழே இறங்கியதாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பஸ் எதனால் தீ பிடித்து எரிந்தது, தீபிடித்தற்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரம் தென்காசியில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலையில் ஊட்டி மலைப்பாதையில் மீண்டும் சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களின் சுற்றுலா பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாகன ஓட்டிகளையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.






