என் மலர்
நீங்கள் தேடியது "திருவெண்பாக்கம்"
- திருவெண்பாக்கம் அடைந்து இறைவனிடம் அழுது புலம்பி முறையிட்டு வருந்தி 'நீ கோவிலில் உளாயோ?' என மிகவும் மனம் நொந்து வினவினார்.
- 'பூண்டி' என்னுமிடத்தில் அணைக்கட்ட திட்டமிடப்பட்டு, அரசாங்கத்தால் அணை கட்டும் பணியும் கடந்த 1942-ம் ஆண்டு செயல்பட்டது.
சைவ சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவொற்றியூரில் 'சங்கிலி நாச்சியார்' என்னும் மங்கையை மணக்க திருவொற்றியூர் இறைவன் திருமுன்பு செய்த பிரதிக்கஞை தவறி திருவொற்றியூரினின்றும் திருவாரூருக்குப் புறப்பட்ட பொழுது கண்பார்வை மறைந்து போயிற்று. அங்கிருந்து மிகுந்த சிரமத்துடன் 'வடதிருமுல்லைவாயில்' இறைவனை வழிபட்டு திருவெண்பாக்கத்தை நோக்கி வரும் போது உமையம்மை மின்னல் போன்ற ஒளியமைத்து வழிகாட்டி மறைந்தாளாம். ஸ்ரீதடிக் கௌரி அம்பிகா அம்மைக்கு இதனால் மின்னொளியம்மை என்ற பெயரும் உண்டு.
திருவெண்பாக்கம் அடைந்து இறைவனிடம் அழுது புலம்பி முறையிட்டு வருந்தி 'நீ கோவிலில் உளாயோ?' என மிகவும் மனம் நொந்து வினவினார். அதற்கு இறைவன் 'உளோம் போகீர்'(இருக்கிறேன் போய் வாருங்கள்) என அயலார் போலக்கூறி கண்ணொளி மறைந்த சுந்தரருக்கு ஊன்று கோல் ஒன்றை வீசியருளினார். இதனால் இங்குள்ள ஸ்ரீ ஆதார தண்டேஸ்வர சுவாமிக்கு ஊன்றீஸ்வரர் எனப்பெயர் அமைந்தது.
கண் வேண்டிய சுந்தரருக்கு இறைவன் கண்ணை அளிக்காமல் ஊன்று கோலை அளித்ததால், வன்றொண்டர் கோபித்துக் கொண்டு அக்கோலை வீசியெறிய, அது இறைவனின் திருமுன்பு படுத்திருக்கும் நந்தியெம்பெருமானின் கொம்பில் பட்டதாம். இதனால் கொம்பு ஒடிந்தது போல நந்தி இன்றும் ஒற்றைக்கொம்புடனே காணப்படுகிறார். பின்னர் இத்தலத்தை விட்டுச்சென்ற சுந்தரர் காஞ்சிபுரம் சென்று ஏகாம்பரநாதரை பாடிப்பரவி இடக்கண்ணும், திருவாரூர் தியாகேசனைப்பாடி போற்றிப் பின்னர் பல தலங்களை விழிபட்டு வெள்ளை யானையில் 'கயிலை' போய் சேர்ந்தார் என்பது வரலாறு.
சென்னை நகருக்கு தேவையான குடிநீர் பற்றாக்குறையை நீக்க குசத்தலை ஆற்றில் 'பூண்டி' என்னுமிடத்தில் அணைக்கட்ட திட்டமிடப்பட்டு, அரசாங்கத்தால் அணை கட்டும் பணியும் கடந்த 1942-ம் ஆண்டு செயல்பட்டது. அப்போது திருவிளம்புதூர் உட்பட பல ஊர்களை குடிபெயர்க்க அரசாங்கம் உத்தரவிட்டது. திருவெண்பாக்கம் என்னும் திருவளம்புதூர் ஊரில் நடுவில் இருந்த சிதிலமடைந்த சுமார் 1350 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஊன்றீஸ்வரர் ஆலயத்தையும் பெயர்த்து அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் தொண்டுள்ளம் கொண்ட அருட்செல்வர் திரு. ஏ.என். பரசுராம் எம்.ஏ. அவர்கள் பெரு முயற்சி எடுத்து திருப்பணிக்குழுவை அமைத்துக்கொண்டு பூண்டி ஏரி நீர்த்தேக்கத்தில் இருந்த திருக்கோவில் மூலவர் அம்மன் மற்றும் இதர மூர்த்தங்களையும் பிரகாரத்தில் இருந்த பழைய கல்வெட்டுக்கள் அனைத்தையும் பின்னமின்றி பெயர்தெடுத்து பூண்டியின் மேடான இடத்தில் பழமை மாறாமல் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் திருக்கோவில் அமைத்து 5.7.1968 ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு செய்வித்தார்கள்.
அதன் பிறகு பூஜைகள், திருவிழாக்கள் போன்றவை சிறப்புற நடைபெறவும், பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் சிப்பந்ததிகளுக்கு சம்பளம் அளிக்கவும் ஏதுவாக திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோவிலின் உபகோவிலாக இணைக்கப்பட்டது. இதன் பிறகு 7.7.2000 அன்று திருக்குடமுழுக்கும் செய்விக்கப்பட்டது.
குறிப்பு:-
மேற்படி திருக்கோவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 10கி.மீ. தொலைவில் உள்ளது.
- கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
- அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை.
திருவள்ளூரில் இருந்சேல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் திருவெண்பாக்கம் (பூண்டி) கிராமத்தில் அமைந்துள்ளது, மின்னொளி அம்மாள் சமேத ஊன்றீஸ்வரர் திருக்கோவில். இந்த கோவில் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இவ்வாலய இறைவன் ஊன்றீஸ்வரர், வெண்பாக்கநாதர், ஆதாரதண்டேஸ்வரர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
அம்பாளின் திருநாமம் மின்னொளி அம்மை என்பதாகும். கனிவாய்மொழி நாயகி என்ற பெயரும் உண்டு. தேவாரப் பாடல்கள் பெற்ற 276 சிவாலயங்களில், இது 250-வது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். அதேநேரம் தொண்டை நாட்டில் உள்ள தலங்களில் 17-வது தேவாரத் தலம் இது.
இந்த ஆலயத்துதின் தீர்த்தம் கயிலாய தீர்த்தம் கொசஸ்தலை ஆறு, தல விருட்சம் இலந்தை மரமாகும். கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, சிவபெருமான் ஊன்று கோல் கொடுத்து உதவியதால். இங்குள்ள இறைவனுக்கு 'ஊன்றீஸ்வரர்' என்று பெயர் வந்தது.

கோவிலின் வெளிப்புற தோற்றம்
இதற்கு முன்பு இந்த சிவன் கோவில் கொசஸ்தலை ஆற்றின் கரையில் திருவுளம்புதூர் என்ற ஊரில் இருந்தது. 1942-ம் ஆண்டு பூண்டி நீர் அணை கட்டுவதற்காக திருவுளம்புதூர் உள்ளிட்ட பல கிராமங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது.
திருவுளம்புதூரில் உள்ள பழைய கோவிலுக்கு பதிலாக. புதிய கோவில் கட்டுவதற்காக திருவெண்பாக்கத்தில் (பூண்டி) மாற்று நிலத்தை அரசு வழங்கியது.
திருவுளம்புதூர் பழைய கோவிலில் இருந்து மூலவர், தூண்கள். சிற்பங்கள் தவிர மற்ற தெய்வ சிலைகள் அகற்றப்பட்டு, புதிய இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த புதிய கோவிலுக்கு 1968-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் பழைய கோவிலில் பிரதான கோபுரத்தின் சில பகுதிகள் பூண்டி ஏரியின் கரையில் இருந்து இன்னும் காணப்படுவதாக கூறப்படுகிறது.
தலவரலாறு
சைவ குரவர்களில் ஒருவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் திருவாரூரில் பரவை நாச்சி யாரை மணந்து வாழ்ந்து வந்தார். சிறிது காலங்கள் உருண்டோடிய பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார், திருவொற்றியூரில் சிவ சேவை செய்து வந்த சங்கிலி நாச்சியாரை மணக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் சிவபெருமானிடம் கூற சிவபெருமானோ இரண்டா வது திருமணம் செய்யக்கூடாது என்று மறுப்பு தெரிவித்தார்.
சுந்தரர் தன்னுடைய நிலையில் மாறாமல் இருந்ததால் சிவபெருமானே அவருக்கு சங்கிலி நாச்சி யாரை தன் தலைமையில் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். அப்போது 'இனிமேல் முதல் மனைவியான பரவை நாச்சியாரை பார்க்கச்செல்லக்கூடாது' என்று சிவபெருமான் கூறினார். அதற்கு செல்ல மாட்டேன்' என்று கூறினார் சுந்தரர். சங்கிலி நாச்சியாரும் சுந்தரரிடம், நீங்கள் என்னை விட்டு பிரிந்து போகக்கூடாது எனக் கூறினார். மேலும் சத்தியமும் செய்து கேட்டார்.
உடனே சுந்தரர், அந்த இடத்தில் இருந்த மகிழம்பூ மரத்தின் அடியில் நின்று, 'உன்னை விட்டு பிரிந்து, மீண்டும் முதல் மனைவியிடம் செல்ல மாட்டேன்' என்று சத்தியம் செய்து கொடுத்தார். சில காலங்கள் சங்கிலி நாச்சியாருடன் வாழ்ந்து வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென முதல் மனைவி பரவை நாச்சியாரின் நினைப்பு வந்து மனதை வருத்தியது. அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
அதனால் சிவபெருமானுக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி திருவொற்றியூரில் இருந்து திருவாரூருக்கு கிளம்பினார் சுந்தரர், திருவொற்றியூர் எல்லையை விட்டு அவர் வெளியேறிய போது சிவன் அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோகும்படி செய்து விட்டார்.
சத்தியத்தை மீறியதால் தன் கண் பார்வை போனதை உணர்ந்த சுந்தரர், சிவபெருமானிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தர வில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டு தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்து சேர்ந்தார் சுந்தரமூர்த்தி நாயனார்.
இங்கும் சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். ஆனால் சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. பரம்பொருளாகிய நீங்கள் இங்கு தான் இருக்கிறீர்களா? இருந்தால் எனக்கு கண் தருவீர்களே' என்று சொல்லி வேண்டினார். சுந்தரரின் நிலையைக் கண்டு சிவபெருமான் இரங்கினாலும், அவருக்கு கண்களை தருவதற்குப் பதிலாக ஊன்றுகோல் ஒன்றை மட்டும் கொடுத்தார்.
தன் நண்பனான சிவன் தனக்கு அருள் செய்யாமல் விளையாடுகிறாரே என்று எண்ணிய சுந்தாருக்கு கோபம் வந்துவிட்டது. அவர் தனக்கு கண் தரும்படி சிவனிடம் வாக்குவாதம் செய்தார். சிவனோ இறுதிவரையில் அவருக்கு கண் தரவில்லை. இதனால் கோபம் அதிகரித்த சுந்தரர், சிவன் கொடுத்த ஊன்று கோலைத் தூக்கி வீசினார். அப்போது ஊன்றுகோல் அங்கிருந்த நந்தி மீது பட்டு விட்டது. இதனால் நந்தியின் வலது கொம்பு ஒடிந்து விட்டது.

கொம்பு உடைக்கப்பட்ட நந்தி சிலை
இதைக்கண்டு சிவபெருமான் ஆத்திரம் அடைந்தார். ஆனால் அவரது மனைவியான மின்னொளி அம்மனோ, 'தவறு செய்வது மனித இயல்பு எனக்கூறி சிவபெருமானை சமாதானம் செய்தார். சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக் கொண்டு தடுமாறிய போது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டி செல்வதற்காக கிளம்பினாள். ஆனால் சிவன், அம்பாளைத் தடுத்து விட்டாராம்.
இதனை உணர்த்தும் விதமாக இவ்வாலயத்தில் அருளும் அம்மனின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின்னர் அம்பாள் சுந்தரரிடம், 'மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்ப நிகழ்கிறது.
தற்போது உன்னுடைய கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினையே. எனவே கலங்காது செல். தகுந்த காலத்தில் ஈசனின் அருளால் உன் பார்வை திரும்பும்' என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்களால் சுந்தரரை சாந்தப்படுத்தினார். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழி காட்டினாராம்.
இதனால் இத்தல அம்மன் 'மின்னொளி அம்பாள்' என்றும், கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கனிவாக பேசி அருளியதால் `கனிவாய் மொழி நாயகி' என்றும் அழைக்கப்படுகிறார்.
பின்னர் இத்தலத்தில் இருந்து தன்னுடைய யாத்திரையை தொடங்கிய சுந்தரர், காஞ்சிபுரம் சென்றார். அங்கு ஏகாம்பரநா ரை பாடிப்பரவி இடது கண்ணும், திருவாரூருக்கு சென்று தியாகேசனைப் பாடி வலது கண்ணும் பெற்று, பின்னர் பல தலங்களை வழிபட்டு வெள்ளை யானையில் கயிலாய மலையை சென்றடைந்தார் என்பது வரலாறு.
இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இத்தல மூலவருக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர். கருவறைக்கு முன்புறம் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து இருக்கிறது. அருகில் சுந்தரர் இடது கையில் ஊன்றுகோல் வைத்தபடி காட்சி தருகிறார். கண் பார்வை இழந்த கோலத்தில் இருக்கும்படியாக இவரது சிலை சிறப்பாக வடிவ மைக்கப்பட்டுள்ளது.
இது தவிர ஆலயத்தில் வழித்துணை விநாயகர், கணபதி, பாலகணபதி, தட்சிணாமூர்த்தி, ஆறுமுகவேலவர், வள்ளி, தெய்வானை, லிங்கோத்பவர், மகாலட்சுமி, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர் போன்ற திருமேனிகளும் உள்ளன.
இவ்வாலய இறைவனுக்கு வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத்தடை விலகும். கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இத்தல சுவாமிக்கும், அம்பாளுக்கும் தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இதனால் படிப்படியாக பார்வை குறைபாடு நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயம் தினமும் காலை காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.






