என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரபத்மன்"

    • சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான்.
    • 6 குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்.

    படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களை பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான்.

    அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களை பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான்.

    இதைத்தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுஉருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த 4 பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.

    காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கி சென்று சிவபெருமானை நோக்கி தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களை பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களை பெற்றனர்.

    இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து, 108 யுகம் உயிர் வாழவும், 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன் சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், என கேட்டான்.

    பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தை பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மை போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.

    அசுரர்களின் இந்த கொடுமையை தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது 6 நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றில் இருந்து தோன்றிய 6 தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் 6 குழந்தைகளாக தோன்றின. அந்த 6 குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் 6 குணங்களை குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப்பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த 6 குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க… அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு 6 முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப்பெருமானாகத் தோன்றினர்.

    இத்திருவுருவை பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த 6 குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார். முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன். முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார்.

    திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும்போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் 5 நாட்களில் அழித்தார். 6-ம் நாள் எஞ்சியவன் சூரபத்மன் தான்.

    தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல.

    ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த 7 பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான்.

    மிகப்பெரிய அலைகளுடன் முருகனை பயமுறுத்திப் பார்த்தான். உடனே 100 அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனை கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

    முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர். சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார்.

    சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகா

    ருண்ய மூர்த்தியான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வை

    தாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

    கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.

    • சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான்.
    • ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார்.

    பிரம்மதேவனுக்கு தக்கன், காசிபன் என்னும் இரு மகன்கள் இருந்தார்கள். அவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்தான்.

    ஆனால் வரத்தின் வலிமையைச் சிரத்தில் கொண்டு சிவனை மதியாது யாகம் செய்தான். இதனால் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திர கடவுளால் கொல்லப்பட்டான்.

    காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவான சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்பெறுபவர்) ஏவப்பட்ட "மாயை" என்னும் அரக்கப் பெண்ணில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

    இதனைத் தொடந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரபத்மனும், சிங்க முகம் கொண்ட சிங்காசுரனும், யானைமுகம் கொண்ட தாரகாசுரனும், ஆட்டின் முகம் கொண்ட அசமுகி என்ற அசுர குணம் கொண்ட பிள்ளைகளைப் பெற்றனர்.

    இவர்களுள் சூரபத்மன் சர்வலோகங்களையும் அரசாளும் சர்வ வல்லமைகளைப் பெற எண்ணி சுக்கிலாச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அதன் மூலம் 108 யுகங்கள் உயிர் வாழவும், 1008 அண்டங்களையும் ஆரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவசக்தியால் அன்றி வேறு ஒரு சக்தியாலும் அவனை அழிக்க முடியாது என்னும் வரத்தையும் பெற்றான்.

    இவ்வரத்தின் பயனாக சூரன் தம்மைப்போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்களை எல்லாம் ஆண்டு வந்தான்.

    சூரபத்மன் பதுமகோமளை என்னும் பெண்ணை திருமணம் செய்தான். வீரமகேந்திரபுரியை இராசதானியாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான்.

    அவனுக்கு பதுமகோமளை மூலம் பானுகோபன், அக்கினிமுராசுரன், இரணியன், 10 தலைகளைக் கொண்ட-வச்சிரவாகு ஆகிய நான்கு மகன்களும், வேறு மனைவியர் மூலம் மூவாயிரவரும் பேர் (3000) பிறந்தனர். இவர்களுடன் இன்னும் 120 பிள்ளைகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

    சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையிலிட்டு சித்திரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சி செய்யலானான்.

    அசுரர்களின் இக்கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களைகளை அழிக்கும் சக்தி படைத்த ஆறுமுகன் அவதரிக்க செய்தார்.

    அதன்படி தான் முருகன் திருச்செந்தூர் தலத்தில் எழுந்தருளினார். அவருக்கும் சூரனுக்கும் 6 நாட்கள் கடும் போர் நடந்தது. 6-வது நாள் சூரனை முருகப் பெருமான் வீழ்த்தினார். அது சூரசம்ஹாரம் எனப்படுகிறது. அந்த போர் எப்படி.

    ஆறுமுகன் அவதாரம்

    தேவர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஆகிய ஐந்து முகங்களும், இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்னும் ஆறாவது முகமும் உண்டு.) அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன.

    அவற்றை வாயு பகவான் ஏந்திச்சென்று வண்ண மீன் இனம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.

    அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்து போன்ற ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்தாள். அவையாவும் ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினான்.

    ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும்.

    பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்" எனப்படுகின்றது.

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்க முடியாது சிவனருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடலானார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்பில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.

    அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வைபட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மௌத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர்.

    இவர்கள் ஆனைவரும் முருகனின் படைவீரர்களாயினர்.

    இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். அம்மையப்பன் வெற்றிதரும் வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.

    அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான். விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிந்தார்.

    ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்தினான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிந்தான்.

    சூரபத்மன் இச்செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான்.

    பின்னர் திருச்செந்தூர் நோக்கி முருகனின் மொத்தப்படையும் கிளம்பிய முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் வந்து தங்கினார். அங்கு பராசர முனிவரின் மகன்கள் (சனகர், சனாதனர்,சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்றனர்.

    அதன் பிறகு முருகப்பெருமாள் சூரபத்மனுடன் போர் நடத்தினார்.

    • முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரபாகுவை முருகன் தூது அனுப்பினார். இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும்.
    • பானுகோபன் மாயாஜல வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன்.

    சூரபத்மன் ஆணவமாக, அதர்மமாக நடந்து கொண்டதால் அவனை முருகன் அழித்தார். இதை சூரசம்ஹாரம் என்கிறோம்.

    இந்த சம்ஹாரம் எங்கு நடந்தது? எப்படி நடந்தது? எத்தனை நாட்கள் நடந்தது? என்பன போன்றவற்றை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நாம் புராண கால நிகழ்வுக்கு செல்ல வேண்டும்.

    அசுரர்களில் நம்பர்-ஒன் அசுரனாக இருந்த சூரபத்மன் வீரமகேந்திரபுரி என்ற நாட்டில் வசித்து வந்தான். அந்த நாடு ஒரு குட்டித்தீவாகும்.

    இலங்கைக்கும் தெற்கே அந்த தீவு இருந்தது. லெமூரியா கண்டம் அழிந்தபோது அந்த தீவும் கடலால் சூழப்பட்டது என்கிறார்கள். தற்போது அந்த தீவு கடலுக்குள் மூழ்கி உள்ளது.

    அந்த தீவுக்கு செல்ல திருச்செந்தூர் ஏற்ற இடமாக இருந்தது. எனவே திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள் போற்ற முருகப் பெருமான் அத்தலத்தில் எழுந்தருளினார்.

    முதலில் சூரனுடன் பேசிப் பார்ப்போம் என்று வீரபாகுவை முருகன் தூது அனுப்பினார். இதுதான் 10 நாள் சூரசம்ஹார நிகழ்வின் தொடக்க நாளாகும்.

    தூதை ஏற்காத சூரன், வீரவாகுதேவரை சிறை பிடிக்க முயன்றான். இதையடுத்து வீரவாகு போர் நடத்தினார்.

    2-வது நாள் சூரனின் மகன் வச்சிரவாகுவை கொன்றார். 3-வது நாள் அசுரர் கூட்டத்தின் தலைவனான சகத்திரவாகுவை கொன்றார்.

    பிறகு முருகனிடம் திரும்பி வந்து நடந்தவற்றை வீரவாகு விளக்கமாக கூறினார்.

    இதையடுத்து 4-வது நாள் முருகனே களத்தில் குதித்தார். அவருக்கும் சூரனுக்கும் திருச்செந்தூர் கடலோரத்தில் 6 நாட்கள் கடும் போர் நடந்தது.

    அந்த 6 நாட்களும் முருகன் வெற்றிக்காக அனைவரும் விரதம் இருந்தனர். அதனால்தான் இப்போதும் 6 நாட்கள் சஷ்டி விரதம் இருக்கிறார்கள்.

    இந்த 6 நாள் போர் எப்படி நடந்தது என்பதை பாருங்கள்...

    பானுகோபன் வதைப் படலம்:

    தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து அழித்துப் பின், தருமகோபன் (சூரனின் மந்திரி), சூரனின் மகன் அக்கினிமுகாசுரன் உள்ளிட்ட மூவாயிரவர் பேர் இறந்தபின் சூரனின் மகனான பானுகோபன் போருக்கு வந்தான்.

    பானுகோபன் மாயாஜல வித்தைகள் செய்து போர்செய்யும் வல்லமை படைத்தவன். சிறந்த சிவ பக்தன். பானுகோபன் நன்நீர்க் கடலில் முருகன் சேனையை ஆழ்த்த முருகன் அதை முறியடித்தார். அதன்பிறகு பானுகோபன் முருகன் வேலுக்கு பலியானான்.

    சிங்கமுகன் வதை:

    பானுகோபன் பலியான தகவவல் அறிந்தததும், சூரனின் தம்பி சிங்காசுரன் போருக்கு வந்தான். சிங்கமுகன் ஒரு பெரும் ஞானி. மாபெரும் வீரன். இவன் பல மாய வித்தைகள் செய்தும், பல விதமாக முருகவேளுடன் போர் செய்தான். இவனது தலை விழுந்தால் உடனே அதற்குப் பதிலாக புதிய தலை தோன்றும் வரம் பெற்றவன். அதனால் அவனை முருகப் பெருமான் வேல்கொண்டு கொல்லாமல் குஞ்சபடையால் நெஞ்சைப் பிளந்து சம்காரம் செய்தான்.

    சூரன் சம்காரம்:

    சூரன் அண்டம் விட்டு அண்டம் பாயும் வரம் பெற்றவன். சிறந்த சிவபக்தன். ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டு அதர்ம வழியில் சென்றான்.

    தன் சொந்தபந்தங்களையும், துணை நின்ற படைச் சேனைகளையும் இழந்து செய்வதறியாது நின்ற சூரனின் ஆணவம் அப்போதும் அடங்கவில்லை. தானே போருக்கு செல்வதாக முடிவு செய்து முருகப் பெரூமான் முன் தோன்றி சரமாரியாக அம்புக்கணைகளைத் தொடுத்தான்.

    அவையாவும் முருகவேளின் கடைக்கண் பார்வையால் அழிந்தன. சூரன் தனது மாயஜாலங்களினால் பலவாறாக தோன்றி போர் செய்தான். அப்போது முருகன் சூரனை நோக்கி இப்போதும் நீ உயிர்வாழலாம் தேவர்களை சிறையில் இருந்து விடுவித்து விடு என்று அறிவுறுத்தினார்.

    அப்போதும் அவனின் ஆணவம் அடங்கவில்லை. அதனால் போர் செய்யவே துடித்தான்.

    வீரமகேந்திரபுரத்தில் பலப்பல மாயங்கள் செய்து போர் புரிந்தான் சூரன். கடலாய், இருளாய் மாறி மாறிச் செய்யும் போர் எதுவும் சூரனுக்கு உதவவில்லை. உதவிசெய்ய இருந்த உற்றமும் சுற்றமும் அழிந்து உறவும் அற்றுப் போனதினால் சூரனும் மயங்கித் தத்தளித்தான்.

    தன்னுடன் போர் செய்ய வந்தது இறைவனே என அறிந்தும், அடிபணிய ஆணவம் விடவில்லை.

    முருகன் சூரனின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு தன் விஸ்வரூபத்தைக் காட்டினார். எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டினார். சிவனும், அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தினார். தன் தன்மை மாறாது போர் செயலானான்.

    சூரன் போர் செய்த ஒவ்வொரு தினமும் தனது ஆயுதங்களை ஒவ்வொன்றாக இழந்தான். அவன் தனக்கு சிவனால் வழங்கப் பெற்ற "இந்திரஞாலம்" என்னும் தேரை அழைத்து முருகனின் படைச் சேனையையும் துக்கிச் சென்று பிரபஞ்ச உச்சியில் வைக்கும்படி கட்டளை இட்டான்.

    இந்திரஞாலம் என்ற தேரும் அவன் கட்டளையை நிறைவேற்ற முருகனின்படையை தூக்கி பிரபஞ்ச உச்சிக்கு கொண்டு சென்றது. முருகனின் வேலானது சீறிப்பாய்ந்து தேரைத் தடுத்து நிறுத்தி முருகனிடம் கொண்டு வந்து சேர்த்தது. முருகன் அத்தேரை தம் வசப்படுதி தன் உடைமையாக்கிக் கொண்டார்.

    இது கண்ட சூரபத்மன் செய்வதறியாது திகைத்தான். அதனால் சிவனால் அவனுக்கு வழங்கப்பெற்ற சூலப்படையை முருகனை அழிக்கும்படி ஏவினான்.

    சூலப்படை முருகனை நோக்கி வந்தபோது முருகனின் வேல் அதனை மழுங்கச் செய்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூரன், கடைசியாக தனது அம்புப் படையை முருகனை அழிக்க அனுப்பினான். முருகனின் வேல் அதை பொடிப் பொடியாக்கி செயலிழக்கச் செய்தது.

    முருகனால் இறப்பது நிச்சயம் என உறுதியாக தெரிந்திருந்தும் தேவர்களை விடுதலை செய்வது மானக் குறைவு என எண்ணிய சூரன் ஆணவ மிகுதியால் தொடர்ந்து போராடினான். இது கண்ட முருகப் பெருமான் நிராயுதபாணியாக இருக்கும் எதிரியுடன் ஆயுதம் தாங்கி போர்புரிவது யுத்த தர்மத்திற்கு விரோதமானது என எண்ணினான்.

    எனவே, இந்திரனை மயிலாக உருமாறும்படி கூறி அதன் மீது பறந்து சூரனை தாக்கலானார். சூரனும் தனது மாயாஜால வித்தைகளினால் மறைந்து தாக்கி மறைந்தான்.

    தனது படையினரையும், படைக் கலங்களையும் இழந்த சூரன் அண்டங்கள் எல்லாம் மறைந்து ஒழிந்து பதுங்கினான். கடைசியாக முருகப் பெருமான் எய்திய வேலானது அவன் சென்ற இடமெல்லாம் துரத்திச் சென்று கடைசியாக நடுக்கடலடியில் மாமரமாய் மாறுவேடத்தில் நின்ற சூரனை; நீரினுள் சென்று மாமரத்தை இருகூறாக்கி சூரனை சம்காரம் செய்தது.

    ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி முருகனிடம் மன்றாடினான்.அவன்மேல் இரக்கம் கொண்ட முருகன் பிளவுபட்ட மாமர பாதிகள் இரண்டையும் தன் அருளால் சேவலாகவும், மயிலாகவும் மாற்றினார். மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக்கொண்டார்.

    வெற்றி வீரத் திருமகனாய், முருகப் பெருமான் திருச்செந்தூர் திரும்பினார்.

    சூரனுடன் முருகப் பெருமான் போர் புரிந்து அவனது ஆணவத்தினை அடக்கி ஆட்கொண்ட நாளே இறுதி நாளாகிய சஷ்டி தினமாகும்.

    சூரனை அழித்த பாவம் தீர, திருச்செந்தூரில் போருக்கு முன்னரே கட்டப்பட்ட ஆலயத்தில், கைகளில் ஜபமாலையோடு, முருகன் சிவ பூசை செய்தார். இந்தக் கோலமே நாம் இன்றும் திருச்செந்தூர் கருவறையில் காணும் முருகனின் கைகளில் ஜப மாலையுடன் செந்தூர் மூலத்தானத்து முதல்வன் நிற்க, சற்று எட்டிப் பார்த்தால், கருவறைக்குள் சிவலிங்கமும் தெரியும்.

    இங்கே முருகப் பெருமான் அபயம் / வரம் தரும் கோலத்தில் இல்லாமல், ஜபம் செய்யும் கோலத்தில் உள்ளான். கையில் வேல் கிடையாது. சும்மா அலங்காரத்துக்கு வேல் அல்லது யோக தண்டத்தையோ தோள் மீது சார்த்தி வைத்திருப்பார்கள்; பின் கரம் சத்திப்படை ஏந்தி, இன்னொரு கரம் ஜபமாலை தாங்கி நிற்க, தியானத்தில் முழந்தாளில் கைவைத்து, ஈசனை மலர்களால் அர்ச்சிக்கும் இன்னொரு கரம் உள்ளது.

    முருகனுக்கு இடப்பக்கத்தில் உலகீசர் (ஜகன்னாதர்) என்னும் சிவலிங்கம் உள்ளது. அவருக்கே முதல் பூசைகள் செய்யப்படுகின்றன!

    மூலவரின் காலடியில் இரு மருங்கிலும் அவரைப் போலவே சின்னஞ்சிறு சிலைகள் உள்ளன, வெள்ளியில் ஒன்று; தங்கத்தில் ஒன்று!

    கருவறையைக் காலையிலும், மாலையிலும் வெளி-வலம் வரும் மூர்த்திகளாக அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

    ஆலயத்தில் சிறு செம்பாறைகளை குடைந்தே கருவறை அமைந்துள்ளது அதனால்தான் செந்து+இல்=செந்தில் என பெயர் ஆனது.

    பின்னாளில் பிரகாரங்கள் (வீதிகள்) என்று பெருகிப் பாறைக் குன்றுகள் மறைந்தாலும், இன்றும் இந்தச் செந்திலில் உள்ளவனே மூலத்தானத்து முதல்வன்.

    கிழக்கே கடலைப் பார்த்த திருமுகம். ஒருமுகம். சிரிமுகம். பாலமுகம். சிறு பாலகன் ஆதலால், அதே உயரம் தான் ஆளுயரம். இல்லை! தலைமுடி மாலை சூடி, மணி முடி தரித்து, வங்கார மார்பில் அணிப் பதக்கமும் தரித்து, வெற்றிப் பீடத்தில் ஏறி நிற்கும் காட்சி!

    சூரசம்ஹாரம் நடைபெறும் தினத்தில் திருச்செந்தூர் ஆலயக் கடல் நீரானது சம்ஹாரம் நடைபெறுவதற்கு வசதியாக செந்தில் ஆண்டவனின் அருள் கருணையால் உள் முகமாகச் சென்று சூரசம்ஹாரம் முடிந்து செந்தில் ஆண்டவர் இருப்பிடம் திரும்பும் போது கடலானது பழைய நிலைக்கு வருவதை காணலாம். கருவறையில் உள்ள மூலவரின் முகத்தில் சூரசம்ஹார களைப்பினால் ஏற்பட்ட வியர்வைத் துளிகளையும் காணலாம்.

    சூரசம்காரங்கள் முடிந்த பின்னர், இந்திரன் தேவயானையை முருகப் பெருமானிடமே ஒப்படைக்க முடிவுசெய்தார். முருகனும் சரவணப் பொய்கையில் முன்னர் தாம் அருளிய வாக்கின் படியே, தேவானை அம்மையைப் திருப்பரங்குன்றில் திருமணம் செய்துகொண்டார். பின்னர், வள்ளியை திருத்தணியில் திருமணம் புரிந்தார்.

    • கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
    • மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது.

    கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே கந்த சஷ்டி விரத விழாவாகும். முருகன் கோவில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை சஷ்டி அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை அழித்த நாள்.

    கந்த விரத மகிமை

    முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக கந்தசஷ்டி விரதம் அமைகிறது. கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    • ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும்.
    • ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர்.

    ஐப்பசித் திங்கள் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் கந்தப் பெருமானை நினைத்து வழிபட்டு விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகின்றது. மிளகுகளை விழுங்கி, பழம் மட்டும் சாப்பிட்டு, தீர்த்தம் குடித்து இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப *கந்தசஷ்டி* விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்குவார்கள் முருகனுடைய விரதங்களுள் கந்த சஷ்டி விரதம், கார்த்திகை விரதம், வெள்ளிக்கிழமை விரதம் ஆகிய மூன்றும் பிரதானமானவையாகும். கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து ஆறு வருடங்களும், கார்த்திகை விரதம் பன்னிரெண்டு வருடங்களும் வெள்ளிக்கிழமை விரதம் மூன்று வருடங்களும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

    அசுர சக்திகளின் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டியதால் கந்த சஷ்டி விரதமே பெருவிழாவாகஎடுக்கப்படுகின்றது. ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்த சஷ்டி விரதானுஷ்டானத்தை பெருவாரியான ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும்,குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

    ஞான சக்திக்கும் அசுர சக்திக்கும் இடையே ஏற்பட்ட போர் சூரன், சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும் துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட் பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்றுவந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது.

    கந்த புராணக் கதையைச் சங்கரன் பிள்ளை சட்டியிலே மாவறுத்தார் என்ற சொற்றொடர் மூலம் நகைச் சுவையார் வழங்குவார். சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் ஷஷ்டித் திதியிலே மாமரமாக வந்த சூரனைக் கடிந்தார் என்பது இதன் பொருள். வெறும் கதை சொல்லும் புராணமாகக் கந்த புராணத்தை எண்ண முடியாது. சைவ சித்தாந்த பேருண்மைகளை உருவகப்படுத்திக் கதை வடிவில் சுவைபடத் தரும் அருமையான நூல் இதுவாகும்.

    • என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
    • பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.

    இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் பாராயணம் செய்வதால், என்னவென்று சொல்ல முடியாத சாந்தி,மனஅமைதி, நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

    கந்த சஷ்டி விரத ஆறு நாட்களும் கந்தப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் எல்லாம் பூரண கும்பம் வைத்து விஷேட அபிஷேகமும், சண்முகார்ச்சனையும், கந்த புராண படனப்படிப்பும் நடைபெறும்.

    விரதம் முடிவுற்ற அன்று முருகன் ஆலயத்தில் சூரன் போர் நடைபெற்று, மறுநாள் விரதம் அனுஷ்டித்த அனைவரும் பாறணை பண்ணி விரத பூசையை நிறைவு செய்கின்றனர். பாறணை பண்ணும் அன்று ஆறு பேருக்கு அன்னதானம் வழங்கி உட்கொள்ள வேண்டும்.

    • நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார்.
    • 16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார்.

    Thiruporur Kandaswamy temple

    தமிழ்க் கடவுள் முருகன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் திருத்தலங்களில் எல்லாம் இன்று ''கந்தனுக்கு அரோகரா'', ''முருகனுக்கு அரோகரா'', ''வெற்றி வேல்'', ''வீரவேல்'' போன்ற மெய்சிலிர்க்க வைக்கும் கோஷங்கள் கேட்டபடி உள்ளன.

    முருகப்பெருமான் இப்பூலவுகில் அவதாரம் எடுத்ததன் நோக்கமே, அசுரர்களை சம்ஹாரம் செய்து அழிப்பதற்குதான். அந்த அவதார நோக்கம் நிறைவு பெறும் திருநாளாக இன்றைய தினம் திகழ்கிறது.

    குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதுவது போல முருகன் வீற்றிருக்கும் இடங்களில் எல்லாம் (திருத்தணி தவிர) இன்று சூரன் சம்ஹாரம் செய்யப்படுவான்.

    இந்த சூரன் மாயை, கன்மம், ஆணவம் ஆகிய 3 வடிவங்களில் தோன்றி கடும் அட்டகாசம் செய்து வந்தான்.

    திருச்செந்தூரில் சூரபத்மன் எனும் மாயையை முருகன் அடக்கினார். இந்த போர் திருச்செந்தூர் கடலில் நடந்தது. அடுத்து திருப்பரங்குன்றத்தில் அசுரர்களுடன் போரிட்ட முருகப்பெருமான் வினைப்பயன் எனும் கன்மத்தை அழித்தார். இந்த போர் நிலத்தில் நடந்தது.

    நிறைவாக தராகசுரனை எதிர்கொண்ட முருகப்பெருமான் திருப்போரூரில் அவனது ஆணவத்தை அடக்கினார். இந்த போர் விண்ணில் நடந்தது. இப்படி முருகப்பெருமான், தனது அவதார லட்சியத்தை திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகிய மூன்று தலங்களில் நிறைவேற்றினார்.

    இந்த மூன்று தலங்களில் திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் இரண்டும் அறுபடை வீடு தலங்களாகும். திருப்போரூர் தலம் படை வீடுகளில் ஒன்றாக இடம் பெறா விட்டாலும் அவற்றுக்கு நிகரான சிறப்பும், மகிமைகளும் கொண்டது. சென்னை அருகில் இருக்கும் இத்தலம், மிக மிக தொன்மையானது. பிரளயத்தால் 6 தடவை அழிந்த இத்தலம் 7-வது தடவையாக கட்டப்பட்டுள்ளது.

    முருகப்பெருமானே, சிதம்பரசாமி என்பவரை ஆட்கொண்டு, இங்கு தற்போதுள்ள கோவிலை கட்ட வைத்தார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அதிசயம் நடந்தது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    16-ம் நூற்றாண்டில் சிதம்பர சாமிகள் என்ற மகான் வாழ்ந்து வந்தார். தண்டபாணி சுவாமிகள், சீரடி சாய்பாபா போன்றே இவரது பெற்றோர் யார் என்பது யாருக்கும் தெரியாது.

    மதுரை மீனாட்சி அம்மையின் குழந்தை போல இவர் வளர்ந்தார். ஒருநாள் இவர் தியானம் செய்தபோது மயில் ஒன்று தோகை விரித்தாடுவது போன்ற காட்சியைக் கண்டார்.

    அதற்கு விடை காண மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று 45 நாட்கள் கடும் தவம் செய்தார். பிறகு மதுரை மீனாட்சி கலி வெண்பா பாடினார்.

    இதனால் மனம் மகிழ்ந்த மீனாட்சியம்மை, சிதம்பரசாமிக்கு காட்சி கொடுத்து, ''வடக்கில் யுத்தபுரி என்று ஒரு ஊர் உள்ளது. அங்கு குமரனின் திருமேனியையும், பழைய ஆலயத்தையும் கண்டுபிடித்து புதிய கோவில்கட்டு'' என்று உத்தரவிட்டாள்.

    உடனே சிதம்பர சாமிகள் யுத்தபுரி எனப்படும் திருப்போரூருக்கு புறப்பட்டு வந்தார். அந்த காலக்கட்டத்தில் அந்த இடம் பனை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.

    அங்கு பெண் பனைமரம் ஒன்றின் கீழ் முருகப்பெருமான் ஒரு புற்றுக்குள் சுயம்பு உருவில் இருப்பதை கண்டுபிடித்தார். அதை எடுத்து சென்று தன் குடிலில் வைத்து பூஜை செய்து வந்தார்.

    ஒருநாள் அவர் கனவில் பழைய முருகன் கோவில் அமைப்பும், அது பூமியில் புதைந்துகிடக்கும் இடமும் தெரியவந்தது. சோழ மன்னர்களும், பாண்டிய மன்னர்களும் திருப்பணி செய்த அந்த இடத்திலேயே சிதம்பரசாமிகள் புதிய கோவிலை கட்ட முடிவு செய்தார்.

    அந்த இடம் அப்போது ஆற்காடு முஸ்லிம் நவாப் மன்னரின் சொத்தாக இருந்தது. மன்னரின் மகளுக்கு தீராத வயிற்று வலி இருந்தது.

    அந்த வியாதியை சிதம்பரசாமிகள் குணப்படுத்தினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆற்காடு நவாப், அங்கு முருகனுக்கு கோவில் கட்ட, 650 ஏக்கர் நிலத்தை கொடுத்து கோவில் கட்ட உதவிகள் செய்தார்.

    சிதம்பரசாமிகள் கோவில் கட்டும் தகவல் அறிந்ததும், நிறைய பேர் தாமாகவே முன் வந்து பொருள் உதவி செய்தனர். கோவிலை கட்டி முடித்த பிறகு, அந்த ஆலயத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சிதம்பர சாமிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது.

    அப்போது ஒரு சிறுவன் அவரிடம் வந்தான். ''என்ன பெயர் வைப்பதில் குழப்பமாக உள்ளதா?'' என்றான். சிதம்பரசாமிகள் ஆச்சரியத்துடன் அந்த சிறுவனை பார்க்க அவன், ''என் பெயர் கந்தன். உங்கள் பெயர் சிதம்பரசாமி. இரண்டையும் சேர்த்து ''கந்தசாமி கோவில்'' என்று வைக்கலாமே என்று கூறியபடி கோவில் கருவறைக்குள் சென்று மறைந்து விட்டான்.

    இதன் மூலம் இந்த கோவிலை கட்ட வைத்ததோடு, அதற்கு பெயர் சூட்டியதும் முருகப்பெருமானே என்பதை அறியலாம். இத்தலத்துக்கு ஆதிகாலத்தில் தாருகாபுரி, சமராபுரி, போரியூர், செருவூர், சமரப்பதி, சமதளப்பூர் என்றெல்லாம் பெயர்கள் இருந்தன. அந்த காலத்து மண்டபத் தூண்களில் உள்ள கல்வெட்டுக்கள் மூலம் கி.பி.691-ல் இரண்டாம் நரசிம்ம பல்லவன், 1076-ல் முதலாம் குலோத்துங்க சோழன் இத்தலத்தில் திருப்பணிகள் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    மூலவர் சுயம்பு மூர்த்தி என்பதால், முக்கிய பூஜைகள் நடத்துவதற்காக சுப்பிரமணியர் யந்திரம் பிரதிஷ்டை செய்துள்ளனர். கூர்ம (ஆமை) பீடத்தின் மேல் உள்ள இந்த யந்திரத்தில் முருகனின் 300 பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இந்த யந்திரத்துக்கு திரிசதி அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும். வியாபாரம் பெருகும் என்பது ஐதீகம்.

    கோவில் சுற்றுச்சுவரில் முருகரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் எனும் சேவல் வடிவசிலை உள்ளது. இவருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் பாஸ்போர்ட், விசா தொடர்பான சிக்கல்கள் தீரும்.

    மூலவர் சுயம்பு என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகு மட்டும் சாத்துகிறார்கள். இவர் பிரம்மன் போன்று அட்சரமாலை, கண்டிகை கொண்டும் சிவன் போன்று வலது கையால் ஆசீர்வதிக்கும் அபயஹஸ்த நிலை கொண்டும், விஷ்ணு போன்று இடது கையை தொடையில் வைத்து ஊரு ஹஸ்த நிலையிலும் என மும்மூர்த்திகளின் அம்சமாக உள்ளார்.

    இதனால் ஐப்பசி மாதம் முருகனுக்கு அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி நாளில் 4 காலை பூஜை நவராத்திரி 9 நாட்களும் வள்ளி, தெய்வானைக்கு 9 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. தமிழ் நாட்டில் எந்த முருகர் தலத்திலும் இத்தகைய வழிபாடு நடத்தும் பழக்கம் இல்லை.

    இத்தலத்தில் பனை மரத்தில் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்றை புனிதமாக கருதி பாதுகாத்து வருகிறார்கள். முருகன் சிலையை கண்டெடுத்த சிதம்பர சுவாமிகள் இந்த பனை பாத்திரத்தில்தான் முருகன் சிலையை வைத்திருந்தாராம்.

    கோவில் பிரகாரத்தில் சிவபெருமான், வான்மீகநாதர் என்ற பெயரில் குடும்பத்தோடு உள்ளார். அங்குள்ள அம்பிகைக்கு புண்ணிய காரணியம்மன் என்று பெயர். தீபாவளிக்கு மறுநாள் வரும் விரதமான கேதார கவுரி விரத தினத்தன்று இந்த அம்மனுக்கு இளம்பெண்கள் அதிரசம் படைத்து வழிபட்டால் நல்ல கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.

    இத்தலத்தில்தான் அகத்திய முனிவர் பிரணவ பொருளுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டார். இதனால் இத்தலத்து சன்னதிகள் ஓம் வடிவில் உள்ளன.

    ஒரு தடவை பெருமாள், லட்சுமி இருவருக்கும் கான்வ முனிவரால் சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தை பெருமாளும், லட்சுமியும் இத்தலத்துக்கு வந்து நிவர்த்தி பெற்றனர். இத்தகைய சிறப்புடைய இத்தலத்தில் விநாயகர் கிழக்கு நோக்கி உள்ளார். அவரை வழிபட்ட பிறகு ராஜகோபுரம் வழியே உள்ளே செல்ல வேண்டும். அதற்கு முன்பாகவே வட்ட வடிவிலான மண்டபத்தில் கொடி மரம், மயில் வாகனம், பலி பீடம் உள்ளது. பலி பீடம் முன்பு பக்தர்கள் உப்பு, மிளகு கொட்டி காணிக்கை செலுத்துகிறார்கள்.

    ராஜகோபுரத்தை கடந்து 24 கால் மண்டபம் வழியாக சென்றால் வலது பக்கம் தெய்வானை சன்னதி, இடது பக்கம் வள்ளி சன்னதியை காணலாம். தெய்வானை சன்னதி அருகில் கோவில் கட்ட நிலம் கொடுத்த ஆற்காடு நவாப் படம் வரையப்பட்டுள்ளது. கருவறை எதிரே வெள்ளை யானையான ஐராவதம் உள்ளது.

    பக்கத்தில் ஸ்ரீசக்ரம் உள்ளது. நமது மனக்கவலைகள் தீர நாம் மறக்காமல் இந்த யந்திரத்தை வழிட வேண்டும். இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை. ஆனால் சூரியன், சனி ஆகிய இரு கிரகங்களுக்கு மட்டும் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இத்தலத்தின் தல விருட்சமாக வன்னிய மரம் உள்ளது. குழந்தை வரம் வேண்டும் பெண்கள் இந்த மரத்தில் தொட்டி கட்டி சென்றால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

    திருமணம் வரம் கோரியும் இந்த மரத்தில் மஞ்சள் கயிற்றால் முடிச்சுப்போட்டு கட்டுகிறார்கள். அந்த வகையில் இத்தலம் மிகச் சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில் கோவிலை கட்டிய சிதம்பர சாமிகளுக்கு தனி சன்னதி உள்ளது. திருப்போரூர் முருகன் மீது 726 பாடல்கள் பாடிய இவர், ஒரு வைகாசி விசாக தினத்தன்றுதான் முருகனோடு இரண்டற கலந்தார். எனவே வைகாசி விசாகத்தன்று முருகன் எதிரே, சிதம்பரசாமி சிலையை வைத்து, அவர் மூலவருடன் இரண்டற கலப்பது போல பாவனை செய்வார்கள்.

    ஆண்டு முழுவதும் விழா கோலமாக காணப்படும் இத்தலத்தில் சஷ்டி, கிருத்திகை, பிரதோஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கந்த சஷ்டி மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெறும்.

    ×