என் மலர்
நீங்கள் தேடியது "நிதி நிறுவனம் மோசடி"
- தங்களது நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு வெறும் ஓரே ஆண்டில் ரூ. 82,000 தரப்படும் என்று அறிவித்தனர்.
- இருப்பினும், கடந்த சில ஆண்டு முதல் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைச் சரியான முறையில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள்கணேஷ், சாமிநாதன்.
இருவரும் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இவர்கள், தங்களது நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் அவர்களுக்கு வெறும் ஓரே ஆண்டில் ரூ. 82,000 தரப்படும் என்று அறிவித்தனர். இதனால் பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
முதலில் சில மாதங்கள் முதலீடு செய்தவர்களுக்குச் சரியாகவே பணத்தைத் திருப்பி அளித்து வந்துள்ளனர்.
இருப்பினும், கடந்த சில ஆண்டு முதல் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைச் சரியான முறையில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் 3 பிரிவுகளில் கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த கணேஷ், சுவாமிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட னர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில் இன்று கணேசன் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கு கும்பகோணம் பெசன்ட் சாலையில் ஒரு வங்கியில் உள்ள லாக்கர்களில், இவர்களுக்கு நகை அல்லது பணம் ஏதேனும் பத்திரபதிவு அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்த சான்றுகள் உள்ளதா என தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- கடன் தொல்லையால் பெண்கள் தற்கொலை.
- கலெக்டர் அலுவலகங்களிள் உடனடியாக உதவி மையத்தை தொடங்க வேண்டும்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக வைத்து ஏராளமான நிதி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த நிதி நிறுவனங்களில் ஏழை மக்கள், விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி வருகிறார்கள்.
இவ்வாறு கடன் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப செலுத்தாமல் இருந்தால், அவர்களுக்கு ஒரு சில நிதி நிறுவனங்களால் தொல்லை கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இதையடுத்து, நிதி நிறுவனங்களுக்கு கடிவாளம் போடும் விதமாக புதிய அவசர சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, சிறிய நிதி நிறுவனங்களுக்கு எதிராக புதிய அவசர சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பெங்களூருவில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
அப்போது மாநிலத்தில் எங்கெல்லாம் முறையாக அனுமதி பெறாமலும், சட்டவிரோதமாகவும் செயல்படும் நிதி நிறுவனங்களை உடனடியாக மூட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறிப்பாக நிதி நிறுவனங்கள் ரவுடிகளை வைத்து மிரட்டி பணத்தை வசூலிக்க கூடாது. மாலை 6 மணிக்கு மேல் யாரும் வீட்டுக்கு சென்று பணம் வசூலிக்க கூடாது. இதனை போலீசார் கண்காணிக்க வேண்டும். மக்கள் ஏதேனும் புகார் அளித்தால், அதன்பேரில் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக சிறிய நிதி நிறுவனங்களின் தொல்லைகளில் இருந்து மக்களை பாதுகாக்க மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உடனடியாக உதவி மையத்தை தொடங்க வேண்டும்.
அதுபோல் மக்களுக்கு தொல்லை கொடுக்கும் நிதி நிறுவனங்கள் பற்றி தெரியவந்தால் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். இதற்காக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.
- பாசி நிறுவனத்தின் சொத்துக்கள் வருகிற 2-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.
- கோவை விளாங்குறிச்சியில் உள்ள 4,352 சதுர அடியில் உள்ள அசையா சொத்தும் அடங்கும்.
கோவை:
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு 2009-ல் பாசி போரக்ஸ் டிரேடிங் நிதிநிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாக கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூல் செய்தது. ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு மீண்டும் பணத்தை திரும்பி வழங்கவில்லை.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் திருப்பூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். ஆனால் விசாரணை சரியாக நடக்கவில்லை என கூறி பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், 58,571 பேரிடம் ரூ.930.71 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ்(43), அவரது தந்தை கதிரவன்(70) மற்றும் கமலவள்ளி(45) 2011-ல் கைது செய்யப்பட்டனர். 2013-ல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் ஜாமீனில் வந்தனர்.
இந்த வழக்கு கோவை டான்பிட் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பளித்தார். அதில் மோசடி செய்த மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோருக்கு தலா 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தார். மேலும் இந்த தொகையை இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 1,402 பேர் மட்டுமின்றி இதர முதலீட்டாளர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரித்து வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பில் கூறியிருந்தார். இதையடுத்து 2 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே பாசி நிறுவனத்தின் சொத்துக்கள் வருகிற 2-ந் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட பாசி போரக்ஸ் நிதி நிறுவனத்துக்கு, சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இடைமுடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் கோவை விளாங்குறிச்சியில் உள்ள 4,352 சதுர அடியில் உள்ள அசையா சொத்தும் அடங்கும். இச்சொத்து, தமிழக முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997-ன் கீழ் தகுதிபெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரால் வருகிற 2-ந் தேதி மதியம் 12 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம் 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் அறை எண்.240-ல் பொது ஏலம் மூலம் மேற்காணும் சொத்து விற்பனை செய்யப்பட உள்ளது.
ஏலம் எடுக்க விரும்புவோர் ஏல நிபந்தனைகள் தொடர்பான விவரங்களை திருப்பூர், கோவை கலெக்டர் அலுவலகங்கள், திருப்பூர், உடுமலை, தாராபுரம், கோவை வடக்கு கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், கோவை வடக்கு தாசில்தார் அலுவலகங்களில் பெற்று கொள்ளலாம்.
இந்த சொத்து நிலையில் உள்ளவாறே ஏலம் விடப்படும். இதில் கலந்து கொள்வது தொடர்பாக உரிய படிவத்தை வருகிற 31-ந் தேதி மாலை 5 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
- அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜெண்டு வினோத்குமாரிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரராகவன்-இந்திரா தம்பதியரின் மகன் வினோத்குமார் (வயது 28). இவர் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் ஏஜெண்டாக இருந்து வந்துள்ளார்.
இவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30-க்கும் அதிகமான நபர்களிடமிருந்து சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை பெற்று மாத வட்டி தரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டி பணம் கிடைக்கவில்லை. நிதி நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் ஏஜெண்டுகள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் நிதி நிறுவன அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. காட்பாடியில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை வளையத்தில் இருக்கும் நிதி நிறுவன இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜெண்டு வினோத்குமாரிடம் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்த திருவலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் வினோத்குமார் எழுதி வைத்த கடிதத்தையும் பறிமுதல் செய்தனர். அந்த கடிதத்தில், நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பான்கார்டு எண்ணை குறிப்பிட்டு, இவர்களின் பெயரில் இயங்கும் நிதி நிறுவனத்தில் என்னிடம் கேட்ட நபர்களுக்கு முதலீடு செய்து கொடுத்துள்ளேன். இப்போது அவர்கள் இல்லை என்பதால் எனது மற்றும் என்னை சார்ந்தவர்களின் பணத்தை திருப்பி வாங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் கொடுத்த பணத்தின் ஆவணங்கள் அனைத்தும் எனது ஆன்லைன் புக்கில் உள்ளது.
என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். அனைத்து ஆவணங்களும் எனது பேங்கில் உள்ளது.
போலீஸ் இவர்களை பிடித்து அனைவரின் பணத்தையும் வாங்கி தர வேண்டும்.
முதலீடு செய்த அனைவரும் அந்நிறுவனத்திடம் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். கடிதத்துடன் செல்பி எடுத்த பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வினோத்குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை காட்பாடி இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
முதலீட்டாளர்கள் தற்கொலை போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.






