search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "simultaneous polls"

    பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால் ரூ.33,200 செலவாகும் என சட்ட கமிஷன் தெரிவித்துள்ளது. #LawPanel #SimultaneousPolls
    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஒரே நேர தேர்தலுக்கு தேவைப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பற்றியும் கட்ட கமிஷன் கூறியிருந்தது.

    அது குறித்து சட்ட கமிஷன் தனது அறிக்கையில், ‘பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுமானால், 12.9 லட்சம் வாக்குப்பதிவு அலகுகள், 9.4 லட்சம் கட்டுப்பாட்டு அலகுகள் மற்றும் 12.3 லட்சம் ஒப்புகைச்சீட்டு வழங்கும் அலகுகள் கூடுதலாக தேவைப்படுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து இருக்கிறது. இந்த 3 அலகுகளும் சேர்ந்த வாக்குப்பதிவு எந்திரம் ஒன்றுக்கு ரூ.33,200 செலவாகும். அந்தவகையில் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்காக ரூ.4,555 கோடி தேவைப்படுகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

    இதைப்போல அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு 10 லட்சத்து 60 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் கூறியதாகவும் சட்ட கமிஷன் தனது வரைவு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. #LawPanel #SimultaneousPolls 
    நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்காக செய்யப்பட வேண்டிய சட்ட திருத்தங்கள் குறித்து சட்ட ஆணையம் இந்த வாரம் சிபாரிசு செய்ய உள்ளது. #SimultaneousPolls #LawPanel
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக, அனைத்து கட்சிகளிடையே கருத்து ஒற்றுமை ஏற்படுத்த முயன்று வருகிறது.

    வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடப்பதால், அதிக செலவு ஏற்படுவதுடன், நலத்திட்ட பணிகள் பாதிப்பு, பாதுகாப்பு படையினருக்கு பணிச்சுமை போன்ற பாதிப்புகளும் ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம், இந்த பாதிப்புகளை தவிர்க்க விரும்புகிறது.



    மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ஆணையமும் சிபாரிசு செய்துள்ளது. இப்படி தேர்தல் நடத்த, மக்களவை, சட்டசபைகளின் பதவிக்காலம் தொடர்பான அரசியல் சட்டத்தின் 83(2), 172(1) ஆகிய பிரிவுகளிலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும்.

    இந்த திருத்தங்கள் உள்பட சட்டரீதியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து சட்ட ஆணையம் இந்த வாரம் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய உள்ளது. இத்தகவல்களை சட்ட ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    சட்ட ஆணையத்தின் சிபாரிசுகள், மத்திய அரசை கட்டுப்படுத்தாது. இருப்பினும், இந்த சிபாரிசுகள், அரசியல் கட்சிகளிடையே ஒரு விவாதத்தை உருவாக்க உதவும் என்று கருதப்படுகிறது.

    முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம், சட்ட ஆணையம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    மக்களவை, சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை 2 கட்டங்களாக செய்யலாம். 2019-ம் ஆண்டு, சில மாநிலங்களுக்கும், 2024-ம் ஆண்டு சில மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தலாம். இதற்காக, அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தங்கள் செய்ய வேண்டும். அவற்றுக்கு பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    ஒருவேளை, இடையிலேயே ஒரு அரசு கவிழ்ந்தால், புதிதாக அமையும் மாற்று அரசு, மீதி பதவிக்காலத்துக்குத்தான் பதவி வகிக்க வேண்டுமே தவிர, இன்னொரு 5 ஆண்டுகளுக்கு அல்ல.

    ஒரு அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும்போது, அதன் பின்னாலேயே நம்பிக்கை தீர்மானமும் கொண்டுவர வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை பலம் இல்லாதநிலையில், முந்தைய அரசையே நீடிக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #SimultaneousPolls #LawPanel
    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளுடன் தேசிய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது. #OneNationOneElection #LawCommission
    புதுடெல்லி:

    ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

    மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அ.தி. மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. பிஜூ ஜனதாதளம், போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்றால், சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.

    ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும் பிரச்சினை தொடர்பாக தேசிய சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு இருந்தது. அதன்படி கட்சிகள் தங்கள் கருத்துகளை கடிதம் மூலம் சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைத்தன.

    இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து அனைத்துக்கட்சிகளுடனும் 2 நாட்கள் ஆலோசனை நடத்த முடிவு செய்த சட்ட ஆணையம், இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், 59 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.

    தேசிய சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர் சிங் சவுகான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சிரோமணி அகாலிதளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் டாக்டர் வேணுகோபால், எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை இவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கால வரையறையில் அவர்கள் தங்கள் கருத்துகளை எடுத் துரைத்தனர்.

    கூட்டம் முடிந்த பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் எந்த ஆண்டில் இருந்து தொடங்கும்? என்று நாங்கள் கேள்வி கேட்டோம். அவர்கள் அதற்கு சரியான பதிலை தரவில்லை. இது ஒரு தொடக்கம் என்றுதான் அவர்கள் கூறினர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்று நாங்கள் சொன்னோம்.

    ஏனென்றால் 5 ஆண்டுகள் பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்து இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. வேண்டுமென்றால், போதிய அவகாசம் கொடுத்து, எல்லா கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டால் 2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தலாம் என்று கூறினோம்.

    அமெரிக்காவைப் போல, நாடாளுமன்றத்துக்கு ஒருமுறை, அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒருமுறை என்று இருமுறை தேர்தலை நடத்தலாம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 தேர்தல்களை நடத்தலாம்.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

    கூட்டம் முடிந்து வெளியே வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாதது என்ற தங்கள் கட்சியின் கருத்தை கூட்டத்தில் தெரிவித்ததாக கூறினார். மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ உள்ள கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டால் ஓரிரு ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த தேசத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான கோவா பார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கும், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் எதிரானது என்றார். ஒரு மாநில முதல்-மந்திரி சட்டசபையை கலைக்குமாறு சிபாரிசு செய்தால் என்ன ஆகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    விஜய் சர்தேசாய் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள பாரதீய ஜனதா-கோவா பார்வர்டு கூட்டணி அரசில் வேளாண்மை துறை மந்திரியாக இருக்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

    2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேசிய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

    இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.  #OneNationOneElection #LawCommission  #tamilnews
    மாநில சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் 2024-ம் ஆண்டில் வேண்டுமானால் ஒரே சமயத்தில் தேர்தலை நடத்தலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் இன்று தெரிவித்துள்ளார். #OneNationOneElection
    புதுடெல்லி :

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு காய்நகர்த்தி வருகிறது. மத்திய சட்ட ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் சட்ட ஆணைய கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டத்தின் முடிவில் , துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு சட்ட ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் நாங்கள் எதிர்பு தெரிவித்தோம். 2019-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒன்றாக தேர்தல் நடத்த கூடாது, வேண்டுமானால் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து 2024-ம் ஆண்டில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தலாம்  என தெரிவித்தார்.

    மேலும், ‘ 5 ஆண்டுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் கொண்டுவர கூடாது, அதை எற்கவும் முடியாது. ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலம் உள்பட பல மாநிலங்கள் சாச்ர்பில் இன்றைய சட்ட ஆணைய கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது ’ எனவும் தம்பிதுரை கூறினார். #OneNationOneElection
    ×