search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarkar Review"

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் விமர்சனம். #Sarkar #SarkarReview
    தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்ரேட் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிடுகிறார்கள்.

    முதலமைச்சராக இருக்கும் பழ.கருப்பையாவின் ஆட்கள் தான் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்பதை விஜய் அறிந்துக் கொள்கிறார். மேலும் பலருடைய ஓட்டுகளும் கள்ள ஓட்டாக போடப்பட்டுள்ளது. இதை ஏன் மக்கள் கேட்கவில்லை என்று விஜய் ஆவேசப்படுகிறார். 



    விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வழக்கு தொடர, பழ.கருப்பையாவால் முதலமைச்சர் பதவிக்கு போகமுடியாமல் போகிறது. இதனால் கோபமடையும் பழ.கருப்பையா விஜய்யை பழிவாங்க நினைக்கிறார். ஆனால், விஜய்யோ பழ.கருப்பையாவை எதிர்த்து தமிழ்நாட்டை ஒழுங்குபடுத்த நினைக்கிறார்.

    இறுதியில், விஜய்யை பழ.கருப்பையா பழிவாங்கினாரா? பழ.கருப்பையாவை விஜய் எப்படி சமாளித்து எதிர்த்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    துறுதுறுவென இருக்கும் மிகவும் இளமையான விஜய்யை இப்படத்தில் பார்க்க முடிகிறது. நடனம், நடிப்பு, வசனம், ரொமான்ஸ் என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார். வசனங்கள் எல்லாம் தியேட்டரில் அனல் பறக்கிறது. குறிப்பாக கள்ள ஓட்டு போட்டவுடன் மக்களுடன் பேசுவது, பழ.கருப்பையாவுடன் நேருக்கு நேர் பேசும் காட்சிகள் விசில் பறக்கிறது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் மிரளவைத்திருக்கிறார்.



    நாயகியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், விஜய்யை பார்த்தவுடன் காதல் வசப்படுவது, அவருடன் பயணிப்பது என அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார். பழ.கருப்பையாவிற்கு மகளாக வரும் இவர், தந்தைக்கு அறிவுரை கூறுவது, விஜய்யை எதிர்ப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். 
    முதலமைச்சராக வரும் பழ.கருப்பையாவின் நடிப்பு அபாரம். மிகவும் சாதாரணமாக நடிப்பை வெளிப்படுத்தி விட்டு செல்கிறார். இவருக்கு உதவியாளராக வரும் ராதாரவி, விஜய்யை தூண்டி விடுவது, பின்னர் அவர் யார் என்று தெரிந்தவுடன் பயப்படுவது என ரசிக்க வைத்திருக்கிறார்.

    தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், கள்ள ஓட்டு விவகாரம், கந்து வட்டி பிரச்சனை என அனைத்தையும் அலசியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். யாரை வைத்து என்ன சொன்னால் எப்படி படம் வரும் என்று கணித்து வைத்திருக்கிறார் இயக்குனர். விஜய்யிடம் அழகாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக வசனங்கள் கைத்தட்டல் பெற்றிருக்கிறது. 



    ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான நிலையில், தற்போது கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவுடன் பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. விஜய்யை மிகவும் அழகாக காண்பித்திருக்கிறார் கிரீஷ். பல இடங்களில் இவரது கேமரா விளையாடி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘சர்கார்’ நின்னு ஜெயிப்பான். 
    ×