search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reopening"

    • சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தது.
    • கடையை மூட வேண்டும் என்றும் காமலாபுரம் ஊராட்சியில் தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தின் வழியாக செல்லும் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 3 அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த 3 கடைகளும் அரசு விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலை ஒட்டியே செயல்பட்டு வருவதாகவும், கடையை மூட வேண்டும் என்றும் காமலாபுரம் ஊராட்சியில் தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மேலும், தொடர்ந்து சாலை விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் அருகிலேயே காமலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. சாலையை ஒட்டியே மது விற்பனை நடைபெறுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இங்குள்ள 3 மதுக்கடைகளிலும் தினமும் சராசரியாக 3 லட்சம் ரூபாய்க்கும் மேல் மதுபானம் விற்பனை செய்வதால் கடையை அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், காமலாபுரத்தில் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மூடப்பட்டது. அதிகாரிகள் சொன்னதால் கடையை மூடியதாக ஊழியர்கள் கூறினர். இதனால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இந்தநிலையில், கடந்த 20 நாட்களாக மூடப்பட்ட மதுக்கடை மீண்டும் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்டது. இதனால், கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மீண்டும் மாணவ மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவதுடன், விபத்துக்கள் அதிகமாகும் என்றும் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    அதனால், இங்குள்ள மதுக்கடையை நிரந்தமாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் அதிகாரிகள் கூறும்போது ஒருசில நிர்வாக காரணங்களால் மூடப்பட்ட கடை தற்போது திறக்கப் பட்டதாக தெரிவித்தனர்.

    • ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்றனர்.
    • இனிப்புகள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்பு.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளிகள் திறப்பையொட்டி ஆர்வமுடன் வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் 1,217 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும், 318 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டது. காலை முதலே பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினர்.

    அவர்களை பள்ளி நுழைவு வாயிலில் நின்று ஆசிரியர்கள் வரவேற்றனர். கொரோனா வழிகாட்டுதலின்படி அனைத்து மாணவ-மாணவிகளும் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தனர். பின்னர் தங்களது வகுப்பறைகளுக்கு சென்றனர்.

    ஏற்கனவே அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டு விட்டது. இதனால் இன்று பள்ளி திறந்ததும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ஒருசில பள்ளிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி ஆய்வு செய்தார்.

    தென்காசி மாவட்டத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 1,289 பள்ளிகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏற்கனவே சுத்தம் செய்யும் பணிகள் முழுமை அடைந்து விட்டது.

    இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்களும் உற்சாகமாக வரவேற்றனர். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்ட பின்னரே வகுப்பறைக்குள் மாணவர்களை அனுமதித்தனர்.

    அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவிகள் தங்களுடைய உடைகள், வாலி உள்ளிட்ட பொருட்களை சுமந்து வந்தனர். அவர்களது பெற்றோரும் அவர்களுடன் பள்ளிவரை வந்து வழியனுப்பி சென்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,870 பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறைக்கு பின்னர் அவை இன்று திறக்கப்பட்டதால் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்து அழுது அடம்பிடித்தன. சில குழந்தைகள் சாலையில் அழுது உருண்டதையும் காணமுடிந்தது.

    பெரும்பாலான பள்ளிகளில் சீருடைகள், உபகரணங்கள் உள்ளிட்டவை வந்து சேரவில்லை. இதனால் அடுத்த 20 நாட்களுக்குள் அவை வந்ததும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டுவிடும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    ×