search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Red Flower"

    • செங்காந்தள் விதைகள் கிலோ 3 ஆயிரத்துக்கும் அதிகமாக விலைக்கு வாங்கப்பட்டது.
    • இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை.

    தாராபுரம்

    திருப்பூர் மாவட்டம் மூலனூர்,தாராபுரம், வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக பரப்பளவில் செங்காந்தள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உற்பத்தியாகும் விதைகள் மூலம் முக்கிய உயிர் காக்கும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்த அதிக அளவில் கொள்முதல் செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப படுகிறது.

    இதனால் செங்காந்தள் விதைகள் கிலோ 3 ஆயிரத்துக்கும் அதிகமாக விலைக்கு வாங்கப்பட்டது. இடைத் தரகர்களின் ஆதிக்கத்தால் கடந்த இரு ஆண்டுகளாக 1500 ரூபாய்க்கு வாங்கப்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    செங்காந்தள் சாகுபடியை மத்திய அரசு மூலிகை பயிர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் விதைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்தநிலையில் விதைக்கான விலை நிர்ணயம் மற்றும் மூலிகை பயிர் பட்டியலில் செங்காந்தளை சேர்க்க வலியுறுத்தி சேலம் திண்டுக்கல் ஈரோடு பொள்ளாச்சி ஆகிய 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில்,தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலும் பரவலாகவும் ஏனைய 12 மாவட்டங்களிலும் பயிரிடப்படும் பத்தாயிரம் ஏக்கர் அளவில் பயிரிடப்படும் கண்வலி விதை விவசாயிகள் சீரான விலை இன்றி இடைத்தரகர்களால் தொடர்ந்து ஏமாறும் நிலை நீடித்து வருகிறது.

    ஆகவே, கண்வலி விதைக்கு நிரந்தர விலை நிர்ணயம் தேவை என்பதை வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் மூலனூரில்,ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி தலைமையில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு செங்காந்தள் விதை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கீழ்க்கண்ட கோரிக்கைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முன் வைக்கப்பட்டன. அவை கண்வலி விதை விவசாயத்தை அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிக்க வேண்டும். மேலும், வங்கிகள் மூலம் பொருளீட்டுக்கடன் பெறவும், பயிர் காப்பீடு செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    கண்வலி விதைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 2,500 என நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.ஆண்டு தோறும் விவசாய பிரதிநிதிகள், வேளாண் துறை அலுவலர்கள், நிறுவனங்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தி, அதில் உற்பத்தி மற்றும் செலவினங்களை பொறுத்து விலை நிர்ணயம் செய்து, ஆண்டு முழுவதும் ஒரே விலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

    தேவையான நிதியை ஒதுக்கி ஒன்றிய அரசும், மாநில அரசும் அரசே கொள் முதல் செய்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளிடம் உள்ள கண்வலி விதையை இருப்பு வைத்துக் கொண்டு, இரண்டு ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் கடன் கொடுக்கவும், இரண்டுக்கு மேல் வைத்திருந்தால் குறைந்த வட்டியில் வைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ரூ.200 கோடி நிதியை கூட்டுறவு துறைக்கு ஒதுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து செங்காந்தள் விவசாயி பழ.ரகுபதி கூறுகையில், கடந்த பத்தாண்டு களுக்கும் மேலாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து தமிழ்நாடு செங்காந்தள் விதை பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக போராடி வருகிறோம். வேளாண் துறையில் இருந்தும், வருவாய் துறையில் இருந்தும் விவசாயிகளின் கோரிக்கைகளை மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுப்பி வருகிறார்கள்.

    கடந்த 2020 இல் அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக இது குறித்து பேசியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக விவசாய பிரதிநிதிகளை அழைத்து வேளாண் துறையினர் முழு தகவல்களையும் திரட்டி கண்வலி விதை சாகுபடியை அங்கீகரிக்கப்பட்ட பயிராக அறிவிக்க, அதற்கான கோப்புகள் தயாரிக்கப்பட்டு கடந்த நவம்பர் 2020 ல் மத்திய அரசுக்கு அனுப்பியும் உள்ளது. ஆனால் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறினார்.

    ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,வரும் கூட்டத்தொடரில் இந்த சிக்கல்கள் குறித்து பேசி உரிய தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூட்டத்தில் உறுதியளித்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×