என் மலர்
நீங்கள் தேடியது "Rapid Chess Match"
- 14-வது சுற்று ஆட்டம் ஒன்றில் மாக்னஸ் கார்ல்சென், ஹேக் மார்ட்டிரோசியனுடன் மோதினார்.
- பதற்றத்தில் இருந்த கார்ல்சென் கட்டத்தில் இருந்த மற்ற காய்களை தள்ளிவிட்டு விட்டார்.
உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. முதலில் நடந்த ரேபிட் வடிவிலான போட்டியில் ஓபன் பிரிவில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனும், பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினாவும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
அடுத்து அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய உலக பிளிட்ஸ் போட்டி நடந்தது. இதில் ஓபன் பிரிவில் 19 சுற்றுகளும், பெண்கள் பிரிவில் 15 சுற்றுகளும் நடந்தன.
இந்த பிளிட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை கார்ல்சென் கைப்பற்றினார். உலக பிளிட்ஸ் போட்டியில் கார்ல்சென் 9-வது முறையாக பட்டத்தை வென்றார்.
முன்னதாக இந்த போட்டியின் 14-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென், அர்மேனியா கிராண்ட்மாஸ்டர் ஹேக் மார்ட்டிரோசியனுடன் மோதினார். 69-வது நகர்த்தலின் போது, 2 வினாடி மட்டுமே எஞ்சி இருந்ததால் கார்ல்சென் வேகமாக காயை நகர்த்தினார்.
அப்போது பதற்றத்தில் கட்டத்தில் இருந்த மற்ற காய்களை தள்ளிவிட்டு விட்டார். பிளிட்ஸ் விதிப்படி, நேரம் கணக்கீட்டை நிறுத்துவதற்குள் காய்களை மீண்டும் சரியான இடத்தில் வைக்க வேண்டும். டென்ஷனில் இருந்த கார்ல்செனால் அதை செய்ய முடியவில்லை.
பிறகு நடுவர் தலையிட்டு இது விதிமீறல் என்று கார்ல்செனுக்கு எடுத்துரைத்தார். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இந்த சுற்றில் மார்ட்டிரோசியன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் கார்ல்சென் அடுத்த 4 ஆட்டங்களில் வரிசையாக வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றை எட்டி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
- இந்தியாவின் சவிதா ஸ்ரீ, வைஷாலி ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் 4-வது, 5-வது இடத்தை பெற்றனர்.
தோகா:
உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் முதலில் ரேபிட் வடிவிலான போட்டி 3 நாட்கள் நடந்தது.
இதில் 13 சுற்றுகளை கொண்ட ஓபன் பிரிவில் மொத்தம் 247 வீரர்கள் பங்கேற்றனர். 3-வது நாளான நேற்று கடைசி 4 சுற்று ஆட்டங்கள் நடந்தன. முந்தைய நாள் முடிவில் 3-வது இடத்தில் இருந்த 'நம்பர் ஒன்' வீரரான மாக்னஸ் கார்செல்ன் (நார்வே) கடைசி நாளில் வித்தையை காட்டினார். அலெக்சி சரனா (செர்பியா), ஹான்ஸ் நீமேன் (அமெரிக்கா), யஜிஸ் கான் எர்டாக்மஸ் (துருக்கி) ஆகியோரை வரிசையாக பதம் பார்த்தார்.
கடைசி ரவுண்டில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் 24-வது நகர்த்தலில் டிரா செய்ததுடன் முதலிடத்துக்கும் முன்னேறினார். அதே சமயம் 2-வது நாளில் 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ரஷியாவின் விளாடிஸ்லாவ் ஆர்ட்மீவ் தனது கடைசி 4 ரவுண்டுகளிலும் டிரா செய்ததால் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டார்.
13 சுற்று முடிவில் கார்ல்சென் 10½ புள்ளிகளுடன் (9 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வி) முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்தார். ரேபிட்டில் 6-வது முறையாக மகுடம் சூடிய அவருக்கு ரூ.74 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. ஒட்டுமொத்தத்தில் உலக போட்டியில் அவர் வென்ற 19-வது பட்டம் இதுவாகும்.
விளாடிஸ்லாவ் 9½ புள்ளிகளுடன் 2-வது இடத்தோடு அதற்குரிய ரூ.53 லட்சத்தையும், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 9½ புள்ளிகளுடன் 3-வது இடத்துடன் ரூ.38 லட்சத்தையும் பரிசாக பெற்றனர். எதிர்பார்க்கப்பட்ட கிளாசிக்கல் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 8½ புள்ளிகளுடன் (6 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி) 20-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா 8½ புள்ளிகளுடன் 28-வது இடத்தை பெற்றார்.
11 சுற்றுகளை கொண்ட இதன் பெண்கள் பிரிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா, சீனாவின் ஜூ ஜினெர், நடப்பு சாம்பியனான இந்தியாவின் கோனெரு ஹம்பி ஆகியோர் 6 வெற்றி, 5 டிரா என தலா 8½ புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர்.
இதில் கடினமான எதிராளியை சந்தித்து புள்ளி எடுத்தது, சராசரி ரேபிட் ரேட்டிங் புள்ளி அடிப்படையில் டாப்-2 இடங்களை உறுதி செய்த கோர்யாச்கினா, ஜூனெர் இடையே டைபிரேக்கர் நடத்தப்பட்டது. டைபிரேக்கரில் கோார்யாச்கினா 1½-½ என்ற புள்ளி கணக்கில் ஜூனெரை தோற்கடித்தார்.
முடிவில் அலெக்சாண்ட்ரா கோர்யாச்கினா முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.42 லட்சம் பரிசாக கிடைத்தது. 2-வது இடத்தை ஜூ ஜினெரும், ஹம்பி 3-வது இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ.28½ லட்சம், ரூ.20 லட்சம் வீதம் பரிசாக கிடைத்தது. இந்தியாவின் சவிதா ஸ்ரீ, வைஷாலி ஆகியோர் தலா 8 புள்ளிகளுடன் 4-வது, 5-வது இடத்தை பெற்றனர். திவ்ஷா தேஷ்முக் 8-வது இடத்தை (7½ புள்ளி) பிடித்தார்.
ரேபிட் போட்டி முடிந்த நிலையில் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி இன்றும், நாளையும் அதே இடத்தில் நடக்கிறது. இதில் ஓபன் பிரிவு 19 சுற்றுகளாகவும், பெண்கள் பிரிவு 15 சுற்றுகளாகவும் நடத்தப்படுகிறது. இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு வருவார்கள். ஒவ்வாரு ஆட்டமும் 3 நிமிடங்களை கொண்டது. அத்துடன் ஒவ்வொரு நகர்வுக்கும் 2 வினாடி வீதம் அதிகரிக்கப்படும்.
- அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் Freestyle செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் Freestyle செஸ் தொடரில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 43வது நகர்வில் வெற்றி பெற்றார்.
கடந்த 3 நாட்களில் கார்ல்சனை 2வது முறையாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தியுள்ளார்.
- ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
- ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார்.
உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியின் 4வது சுற்றில் உலகின் நம்பர் 1 செஸ் வீரர் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
இதன்மூலம் ரேபிட் செஸ் போட்டியின் புள்ளிப் பட்டியலில் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்து அசத்தினார்.
- சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியாவில் நடைபெற்றது.
- முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (10 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்.
இந்த ஆண்டுக்கான கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி குரோஷியா தலைநகர் ஜாக்ரெப்பில் நடைபெற்றது.
9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ரேபிட் பிரிவில் 9-வது மற்றும் கடைசி சுற்றில் சென்னையை சேர்ந்த 19 வயது குகேஷ், அமெரிக்காவின் வெஸ்லி சோவை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் குகேஷ் 36-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். 9-வது சுற்று முடிவில் குகேஷ் 14 புள்ளிகள் பெற்று (6 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி) சாம்பியன் பட்டம் வென்றார்.
போலந்து வீரர் ஜான் கிர்சிஸ்டோப் டுடா (11 புள்ளி) 2-வது இடமும், முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (10 புள்ளி) 3-வது இடமும் பிடித்தனர்.
இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் பாபியனோ கருனாவுடன் (இருவரும் தலா 9 புள்ளி) இணைந்து 4-வது இடம் பெற்றார். இதைத்தொடர்ந்து பிளிட்ஸ் பிரிவு போட்டி நடக்கிறது.
- முதல் நாளான நேற்று 3 சுற்று ஆட்டங்கள் நடந்தன.
- இந்திய வீராங்கனைகளான கொனேரு ஹம்பி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்களது மூன்று சுற்றையும் டிராவில் முடித்தனர்.
கொல்கத்தா:
6-வது டாட்டா ஸ்டீல் இந்தியா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்பட 10 வீரர்களும், பெண்கள் பிரிவில் 5 இந்தியர்கள் உள்பட 10 பேரும் பங்கேற்றுள்ளனர். முதல் 3 நாட்களில் ரேபிட் வடிவிலான போட்டி நடைபெறும். இது 9 சுற்று கொண்டது.
முதல் நாளான நேற்று 3 சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய இந்த போட்டியில் கார்ல்சென், தமிழகத்தின் பிரக்ஞானந்தாவுடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. வெள்ளைநிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 35-வது நகர்த்தலில் டிரா கண்டார். இதே போல் நிஹல் சரினுடனும் டிரா செய்த கார்ல்சென், இன்னொரு ஆட்டத்தில் விதித் குஜராத்தியை 69-வது நகர்த்தலில் வீழ்த்தினார்.
கார்ல்செனுடன் டிரா கண்ட பிரக்ஞானந்தா, டேனில் துபோவுடனும் (ரஷியா) டிரா செய்தார். ஆனால் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசட்டோரோவிடம் 46-வது நகர்த்தலில் பணிந்தார். அர்ஜூன் எரிகைசி தனது முதல் 3 ஆட்டங்களிலும் டிரா கண்டார். ஓபன் பிரிவில் 3 சுற்று முடிவில் அப்துசட்டோரோவ் 2½ புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இந்தியாவின் எஸ்.எல். நாராயணன் மற்றும் கார்ல்சென், பிலிப்பைன்சின் வெஸ்லி சோ தலா 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார்கள்.
பெண்கள் பிரிவில் 3 சுற்று முடிவில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியச்கினா, கேத்ரினா லாக்னோ, இந்தியாவின் வந்திகா அகர்வால் ஆகியோர் தலா ஒரு வெற்றி, 2 டிரா என 2 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர்.
அதே சமயம் திவ்யா தேஷ்முக் மற்றும் சுவிட்சர்லாந்தின் கோஸ்ட்னிக் ஆகியோரிடம் டிரா செய்த பிரக்ஞானந்தாவின் சகோதரியான ஆர்.வைஷாலி, ரஷியாவின் வேலன்டினா குனினாவிடம் தோல்வியை தழுவினார். மற்ற இந்திய வீராங்கனைகளான கொனேரு ஹம்பி, ஹரிகா, திவ்யா தேஷ்முக் ஆகியோர் தங்களது மூன்று சுற்றையும் டிராவில் முடித்தனர்.
இரு பிரிவிலும் இன்று மேலும் 3 சுற்றுகள் நடைபெறும்.
- 6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார்.
- வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கொல்கத்தா:
6-வது டாட்டா ஸ்டீல் இந்தியா ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஓபன் பிரிவில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசி உள்பட 10 வீரர்களும், பெண்கள் பிரிவில் 10 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.
இதில் முதலில் அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய ரேபிட் வடிவிலான போட்டி நடந்து வருகிறது. 9 சுற்று கொண்ட இந்த போட்டியில் 4-வது, 5-வது, 6-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. முதல்நிலை வீரர் கார்ல்சென் நேற்றைய தினம் எரிகைசி, நாராயணன், வெஸ்லி சோ (பிலிப்பைன்ஸ்) ஆகிய 3 பேரையும் வரிசையாக தோற்கடித்து அமர்க்களப்படுத்தினார்.
தமிழகத்தின் பிரக்ஞானந்தா, 103-வது நகர்த்தலில் நிஹல் சரினை போராடி வீழ்த்தினார். வின்சென்ட் கீமர் (ஜெர்மனி), விதித் குஜராத்தி ஆகியோருக்கு எதிரான ஆட்டங்களில் 'டிரா' கண்டார்.
6 சுற்று முடிவில் கார்ல்சென் 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அப்துசட்டோரோவ் (உஸ்பெகிஸ்தான்) 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், வெஸ்லி சோ 3½ புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் ரஷியாவின் அலெக்சாண்ட்ரா கோரியச்கினா தன்னை எதிர்த்து ஆடிய வந்திகா அகர்வால் (இந்தியா), தமிழக வீராங்கனை வைஷாலி, கேத்ரினா லாக்னோ (ரஷியா) ஆகியோருக்கு 'செக்' வைத்து வெற்றிக்கனியை பறித்தார். கோரியச்கினாவிடம் தோல்வியை தழுவிய வைஷாலிக்கு மற்ற இரு ஆட்டங்களிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
6 சுற்றுகள் முடிவில் கோரியச்கினா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறார். நானா ஜாக்னிட்ஸ் (ஜார்ஜியா) 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். வைஷாலி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இரு பிரிவிலும் இன்று கடைசி 3 சுற்றுகள் நடைபெறும்.






