search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Raft Festival"

    • மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
    • முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 3ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரமோற்சவ விழாவில் தேர்த்திருவிழா, தெப்ப த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரமோத்சவ விழா கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த மார்ச் 26ந்தேதி நடைபெற்றது. தினமும் காலை பஞ்சமூர்ர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, கடந்த 3ந்தேதி தேரோட்டம் நடை பெற்றது. தொடர்ந்து, நேற்று இரவு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இதில், சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது. உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் வாரிய தலைவர் வக்கில் வெற்றிச்செல்வன், துணைத் தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கில் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி, உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடைபெறவுள்ளது.

    • கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தெப்பதிருவிழா கோலாகலமாக நடந்தது.
    • மாரியம்மன் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் அர்த்த நாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கிருஷ்ண தேவராயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நகராட்சியால் நிர்வாகிக்கப்படும் பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு பாரம்பரியமாக மாரியம்மன் திருவிழாவின் போது தெப்ப தேர் ஓட்டுவது வழக்கம்.

    கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தெப்ப தேர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தெப்பதிருவிழா கோலாகலமாக நடந்தது. மாரியம்மன் திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதை தொடர்ந்து நேற்று மாலை தெப்ப திருவிழா நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங், டி.எஸ்.பி. மகாலட்சுமி, வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் கணேசன், அர்த்நாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், ஊர்கவுண்டர் ராஜா, மாரியம்மன் கோவில் முக்கியஸ்தர் முத்துகணபதி, தீயணைப்பு துறை அலுவலர் குணசேகரன், தாசில்தார் அப்பன் ராஜ் ஆகியோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அலங்கரிக்கபட்ட தெப்பதேரில் பெரிமாரி யம்மன், சின்னமாரியம்மன், அழகு முத்து மாரியம்மன் எழுந்தருளிய பின் சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டு தெப்பத் தேர் வடம் பிடிக்கப்பட்டது. கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை சென்ற தெப்பத்தேரில் பவனிவந்த அம்மன்களுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடுகுளப் பகுதிக்கு வந்த தேருக்கு 4 திசைகளிலும் ஆராதனை செய்யப்பட்டு கிழக்கு கரையில் நிலை சேர்க்கப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்பதிருவிழாவைக் காண்பதில் ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்படுவதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

    • தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது.
    • இந்த ஆண்டும் திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.காலை சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.

    தாளவாடி:

    தாளவாடி அருகே உள்ள திகனாரை கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ரங்கசாமி-மல்லிகார்ஜுனா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டும் திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.காலை சாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. பின்னர் மதியம் 12 மணியளவில் சாமி வீதி உலா நடந்தது.

    ரங்சாமி, மல்லி கார்ஜுனா சாமிகளின் உற்சவ சிலைகள் மலர்களால் அலங்கரிக்கபட்ட சப்பரத்தில் வைக்கபட்டு திகனாரை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் ஊர்வலமாக கொண்டு செல்லபட்டு தெப்ப திருவிழாவுக்காக அங்கு உள்ள குளத்தை அடைந்தது.

    பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. குளத்தின் நடுபகுதிக்கு சப்பரத்தை பக்தர்கள் சுமந்து சென்றனர். அங்கு குளத்து தண்ணீரில் தேர்வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கபட்டு குளத்தை 3 முறை சுற்றி வந்தது.

    குளத்தின் கரையில் பக்தர்கள் நின்று தெப்ப திருவிழாவை கொண்டாடினர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இதையடுத்து குளத்தின் மறுகரைக்கு சப்பரம் ஊர்வலமாக எடுத்து வரபட்டது. பின்னர் பக்தர்கள் சாமிக்கு பூக்கள் வைத்து தரிசனம் செய்தனர்.

    தெப்பதிருவிழாவிற்கு தாளவாடி, மெட்டல்வாடி, எரகனள்ளி, தொட்ட காஜனூர் ஆகிய கிராமத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×