search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Porunai Literary Festival"

    • பாளை நேருஜி கலையரங்கில் நடைபெற்று வரும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.
    • ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

    நெல்லை:

    தமிழக அரசு சார்பில் பொருநை இலக்கிய திருவிழா பாளையில் நேற்று தொடங்கியது.

    கனிமொழி எம்.பி.

    பாளை நேருஜி கலைய ரங்கில் நடைபெற்று வரும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அவர் மாணவ, மாணவிகள் எழுதிய தபால் கவிதை தொகுப்பினை கலெக்டர் விஷ்ணு, பொது நூலக இயக்ககத்தின் இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) இளம்பகவத், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் கலாப்பிரியா ஆகியோரிடம் வழங்கினார். விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    இலக்கிய திருவிழாக்கள்

    தமிழகத்தில் இலக்கிய செழுமைமிக்க தமிழ்மொழி யின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவாணி மற்றும் பொருநை என 5 மண்டலங்களில் இலக்கியத் திருவிழாக்களை சிறப்பாக நடத்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் பொருநை இலக்கிய திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக புத்தகம் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

    புத்தகம் வாசிப்பு

    குறிப்பாக பள்ளி, மாணவ-மாணவிகள் புத்தகம் வாசிப்பதன் மூலம் தன்னுடைய அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள முடியும். புத்தகம் தொடர்ந்து வாசிப்பதன் மூலம் தமிழ் இலக்கியங்களை எளிதாக அறிய முடியும்.

    இந்த பொருநை இலக்கிய திருவிழா மிக முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. படிப்பை நேசித்தவர் பேரறிஞர் அண்ணா, புத்தகம் வாசிப்பதை மிகவும் ஆர்வம் கொண்டு இறுதி மூச்சு வரை புத்தகத்தை நேசித்தவர் கலைஞர்.

    எனவே புத்தகம் வாசிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள் தான் திராவிட இயக்கத்தின் தலைவர்கள். திராவிட இயக்கம் தான் தமிழர்களை தலை நிமிர செய்தது.

    பள்ளியில் எது சரி, எது தவறு என்று சொல்லி தரக்கூடிய பல நேரங்களில் புத்தங்கள் நமக்கு கைக்கொடுக்கிறது. புத்தகங்கள் படிக்க, படிக்க உங்கள் சிந்தனைகள் விரிவாகும்.

    புத்தகங்கள் தரும் உலகம் என்பது நம்முள் பல கேள்விகளை பல கருத்துக்களை முன் வைக்கும். புத்தகத்தை படித்து படித்து சிந்திக்கும் தலைவன் தான் நம்மை அழைத்துச் செல்லும் தலைவனாக இருக்க முடியும். அத்தகைய தலைவர்கள் தான் திராவிட இயக்க தலைவர்கள்.

    இன்று தமிழகத்தில் ஜாதி மதம் என்ற பெயரால் யாரும் நுழைய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றால் அதற்கு திராவிட இயக்க எழுத்தாளர்கள் தான் காரணம். எனவே, பொதுமக்கள், இளம் தலைமுறையினர், மாணவ, மாணவியர்கள் அனைவரும் பொருநை இலக்கிய திருவிழாவிற்கு வந்து ஓலைச் சுவடி வடிவிலான இலக்கியங்கள், மூல புத்தக மற்றும் நாட்டு புறக் கலைகள் தொடர்புடைய பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பொருநை இலக்கிய திருவிழா நெல்லையில் வருகிற 26,27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
    • பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி திருவனந்தபுரம் சாலை, மேடை போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் மைதானத்திற்கு வந்தடைந்தது.

    நெல்லை:

    பொருநை இலக்கிய திருவிழா நெல்லையில் வருகிற 26,27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    அதற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, துணைமேயர் ராஜூ, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், ஒருங்கி ணைப்பாளர் சபேசன் மற்றும் பள்ளி கல்வித்துறையினர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி திருவனந்தபுரம் சாலை, மேடை போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் மைதானத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 வகை நிலங்களை குறிக்கும் வகையில் மக்களின் வாழ்வியல், நாகரீகம், தொழில் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் வேட மணிந்து பங்கேற்றுள்ளனர்.

    • தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
    • பொருநை இலக்கிய திருவிழா குறித்த லோகோவை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வருகிற 26, 27 -ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    கலெக்டர் பேட்டி

    இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை, வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில் முதல் திருவிழாவாக நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    5 அரங்குகள்

    இந்த பொருநை திருவிழாவில் தனித் தனியாக மொத்தம் 5 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. அதன்படி நேருஜி அரங்கம், நூற்றாண்டு மண்டபம் வ.உ.சி அரங்கம், பி.பி.எல். திருமண மண்டபம், பாளை மேற்கு கோட்டை வாசல் ஆகிய 5 அரங்குகளில் திருவிழா நடைபெறும்.

    இதில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த உள்ளன. இதுகுறித்து அந்தந்த பள்ளி கல்லூரி நிர்வாகத்தினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    ஓலைச்சுவடிகள்

    இலக்கிய திருவிழாவில் ஓலைச்சுவடிகள் மற்றும் நாட்டுப்புற கலை பொருட்கள் குறித்து காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே நெல்லை புத்தக திருவிழாவில் கலை பொருட்கள் காட்சிப்படுத்தியிருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

    எனவே பொதுமக்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் தங்களிடம் ஓலைச்சுவடி நாட்டுப்புற கலை பொருட்கள் இருப்பின் வரும் 24-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவ லகத்தில் மக்கள் தொடர்பு அலுவலரிடம் வழங்கலாம்.

    பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்

    பொருநை இலக்கிய திருவிழா தொடர்பான லோகோ இன்று வெளியிடப்படுகிறது. https://porunailitfest.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இலக்கிய திருவிழாவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மண்டல அளவில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை ஒருங்கிணைத்து இத்திருவிழா நடக்கிறது

    நெல்லையில் கானி மக்கள் மத்தியில் இருக்க கூடிய மருத்துவம் சார்ந்த விஷயங்களை டிஜிட்டல் மையம் ஆக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக பொருநை இலக்கிய திருவிழா குறித்த லோகோவை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார். அப்போது மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் பயிற்சி உதவி கலெக்டர் கோகுல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×