search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Negative thoughts"

    • ஒரு செயலை தொடங்கும்போது அது தவறாக போய்விடுமோ என்ற அவநம்பிக்கை அதிகரிக்கும்.
    • தேவையற்ற அச்சங்கள் மனதை உலுக்கும்.

    மற்றவர்களுடன் பேசுவதை விட தங்கள் மனதோடு தான் பலரும் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஏதாவது சிந்தித்தபடியோ, நடந்து முடிந்த சம்பவங்களைப் பற்றி அசை போட்டபடியோ பொழுதை கழிப்பார்கள். இதே மனநிலை நீடித்தால் எதிர்மறை எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்துவிடும். ஏதாவது ஒரு செயலை தொடங்கும்போது அது தவறாக போய்விடுமோ என்ற அவநம்பிக்கை அதிகரிக்கும். தேவையற்ற அச்சங்கள் மனதை உலுக்கும்.

    எதிர்மறை எண்ணங்களை கையாள்வதற்கு முன், அவற்றை அடையாளம் காண்பது முக்கியம். எந்த மாதிரியான எண்ணங்கள் மனதில் அடிக்கடி எழுகிறது? அதற்கான காரணம் என்ன? அதனை செயல்படுத்துவது சாத்தியமா? என்பது பற்றி சிந்திக்க வேண்டும். மனதுக்குள்ளேயே சுய விமர்சனம் செய்து தேவையற்ற எண்ணங்கள் எழுவதை தடுக்க வேண்டும். அதையும் மீறி எழும் எதிர்மறை எண்ணங்களை விரட்டுவதற்கான சில வழிமுறைகள்...

    * ஒவ்வொரு நொடியும் கடக்கும்போது அந்த சமயத்தில் நடக்கும் விஷயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்த வேண்டும். அதனை பயிற்சியாக மேற்கொண்டு வரலாம். நாளடைவில் கடந்த கால நினைவுகளோ, தேவையற்ற சிந்தனைகளோ மனதை ஆக்கிரமிப்பதற்கு இடம் கொடுக்காது. மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவதற்கும் அனுமதிக்காது.

    * அறிவாற்றல், நடத்தையை மேம்படுத்தும் தெரபி சிகிச்சைகளையும் பெறலாம். இவை எதிர்மறையான சிந்தனைகளை அடையாளம் காணவும், அவற்றை மேலும் நேர்மறையானதாக மாற்றவும் உதவும்.

    * எதிர்மறை சிந்தனைகள் எழும்போதெல்லாம் கவனத்தை திசை திருப்ப, மனதுக்கு பிடித்தமான விஷயங்களை நோட்டில் எழுதலாம்.

    * உடற்பயிற்சி செய்வது உடல் நலத்தை மட்டுமல்ல மன நலத்தையும் பேண உதவும். உடற்பயிற்சி செய்யும்போது வெளியிடப்படும் எண்டோர்பின் ஹார்மோன் இயற்கையாகவே மனநிலையை அதிகரிக்கச் செய்யும் என்று கருதப்படுகிறது. எதிர்மறை எண்ணங்களை எதிர்த்துப் போராடவும் இது உதவும்.

    * எதிர்மறை எண்ணங்களைப் பற்றி உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், குடும்ப மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். அப்படி மனம் விட்டு பேசுவது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மனதுக்கு நிவாரணம் அளிக்க உதவும்.

    * செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், இணையதளங்களில் எதிர்மறையான செய்திகளை படிப்பதை தவிருங்கள். எதிர்மறை எண்ணங்களைத் தூண்டக்கூடிய சூழல் நிலவினால் அங்கிருந்து விலகி இருங்கள்.

    * போதுமான தூக்கம், சரியான வேளையில் சாப்பிடுதல், விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் போன்ற சுய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    * வாழ்க்கையில் இலக்குகள் இருப்பது அவசியம். ஆனால் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை அவை உருவாக்கினால் எதிர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும். எனவே, தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க, அடையக்கூடிய இலக்குகளை அமைக்கவும். அதனை நோக்கி பயணிக்கவும்.

    * எதிர்மறையான சிந்தனையோ, பேச்சுக்களோ வெளிப்படும்போது நேர்மறை எண்ணங்களை தூண்டும் உறுதிமொழிகளை எடுக்க வேண்டும். நம்பிக்கையை அதிகரிக்க செய்யும் வார்த்தைகள், நேர்மறையான விஷயங்களை சுட்டிக்காட்டும் பழமொழிகள், அறிஞர்களின் பொன்மொழிகள் போன்றவற்றை படிக்கலாம்.

    • எளிதில் உணர்ச்சிவசப்பட்டால் எந்த காரியமும் கைகூடாது.
    • எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது.

    வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிரமங்களை எளிதாக கையாள்வதற்கும், தேர்ந்தெடுக்கும் வேலையை திறமையாக செய்து முடிக்கவும் மனம் தெளிந்த நிலையில் இருக்க வேண்டும். ஏதேனும் மன குழப்பங்களுக்கு ஆளானால் எந்தவொரு காரியத்தையும் சிறப்பாக செய்துமுடிக்க முடியாது.

    எளிதில் உணர்ச்சிவசப்பட்டாலும் எந்த காரியமும் கைகூடாது. உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. கோபம், சோகம், வேதனை, மன அழுத்தம் போன்றவை உணர்வுகளை தடுமாற வைக்கும். வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை சமாளித்து உணர்வுகளை நிர்வகிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

    எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அது உணர்ச்சிகளை கையாள்வதற்கு உதவிகரமாக அமையும். சந்தோஷமாக இருந்தாலோ, மனக்கவலை அடைந்தாலோ உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு தயங்கக்கூடாது. உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் அதனை பகிர்ந்து கொள்ளுங்கள். ஒருபோதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தாதீர்கள். ஏனெனில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.

    ஏதாவதொரு சூழலில் மன நெருக்கடிக்கு ஆளானால் சிறிது நேரம் தனிமையில் இருக்கலாம். எந்த வேலையிலும் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருக்கலாம். அந்த சமயங்களில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்கக்கூடாது. மனதை வேறு செயல்களில் ஈடுபடுத்தலாம். அல்லது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

    மன அழுத்தம்தான் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி. ஒருவேளை மன அழுத்தத்திற்கு ஆளானால் அதில் இருந்து மீள்வதற்குரிய வழிமுறைகளை கற்றுக்கொள்ள வேண்டும். மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகளில் ஈடுபடலாம். ஆழ்ந்த சுவாசம், தியானம், உடற் பயிற்சி போன்ற உடலை தளர்வடைய செய்யும் பயிற்சிகளில் கவனம் செலுத்தலாம். விளையாடுவதற்கும் போதிய நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகள்தான் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்றில்லை. அவர்களுடன் சேர்ந்து குழு விளையாட்டுகளில் ஈடுபடலாம். மனதிற்கு பிடித்தமான எந்தவொரு விளையாட்டையும் தயங்காமல் மேற்கொள்ளலாம். நடனமும் ஆடலாம்.

    தவறாமல் உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவை உண்பது, போதுமான நேரம் தூங்குவது போன்றவை மன நலனை பாதுகாக்கவும், உணர்வுகளை சம நிலையில் பராமரிக்கவும் உதவும். மன நெருக்கடியில் இருக்கும் சமயங்களில் நெருக்கமானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள். அவர்களுடன் குழு விவாதங்களிலும் ஈடுபடலாம்.

    வெளி உலக தொடர்பை வளர்த்துக்கொள்வதும் அவசியமானது. தொண்டு நிறுவனங்களில் சேர்ந்து பணி புரியலாம். தன்னார்வலர்களாக மாறி அவ்வாறு சமூக சேவைகள் புரிவது மனதிற்கு ஆத்ம திருப்தியை தரும். அர்த்தமுள்ள செயல்களில் நேரத்தை செலவிடுகிறோம் என்ற மன நிறைவும் கிடைக்கும்.

    உங்கள் நலனில் அக்கறை கொள்பவர்களுடன் சிரித்து பேசி மகிழ்வதும் உணர்ச்சி ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க துணை புரியும்.

    • சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.
    • மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    வாழ்க்கை எனும் அழகான பயணத்தில் பொருளாதாரம், குடும்பம் அல்லது சூழ்நிலையின் காரணமாக நாம் விரும்பிய செயலையோ அல்லது வேலையையோ செய்ய முடியாமல் போகலாம். பலர் பொருளாதார மேம்பாட்டிற்காக தனக்கு பிடித்த, இயல்பாக வரக்கூடிய வேலையை செய்யாமல், வேறு வேலையை முழுமனம் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

    பல வருடங்கள் கழித்து, நாம் வாழ்ந்த வாழ்க்கையை யோசித்துப் பார்த்தால், நமக்கு பிடித்ததை செய்யவில்லையே, வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டோமே என்ற கவலை ஏற்படும்.

    ஒருசில நேரங்களில் பொருளாதாரம் அல்லது சூழ்நிலைக்காக சில விஷயங்களை செய்யாமல் இருப்பதோ அல்லது தள்ளிப்போடுவதோ நல்லதுதான், ஆனால் எல்லா நேரத்திலும் அவ்வாறு செய்தால், ஒரு கட்டத்தில் 'ஏன் இந்த வாழ்க்கையை வாழ்ந்தோம்? யாருக்காக வாழ்ந்தோம்? என்ற கேள்வி தோன்ற ஆரம்பிக்கும்.

    வாழ்க்கையை உங்களுக்காக வாழ்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் செய்கிற வேலையை செய்தால், நாமும் அவர்களைப் போல மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களுடைய மகிழ்ச்சியை வேறு யாராலும் வரையறுக்க முடியாது.

    எது உங்களுக்கு திருப்தியானது அல்லது நிறைவானது என்று யாராலும் சொல்ல முடியாது. அதை உங்களால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எந்த வேலை பிடித்து இருக்கிறதோ, அந்த வேலையை தேர்ந்தெடுத்து முழுமையாக மன நிம்மதியுடன் செய்யுங்கள்.

    மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

    எப்போதாவது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பது நல்லது. ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி தொடர்ந்து யோசிக்கக்கூடாது. நீங்கள் எப்படி இருந்தாலும், எவ்வளவு விசித்திரமாக இருந்தாலும், உங்களை நீங்களே பாராட்டுங்கள்! ஒவ்வொரு நபரும் தனித்துவமானவர்.

    பெண்களே உங்களுக்கு இருக்கும் தனித்துவத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். அவ்வப்போது பிடித்தவற்றை வாங்குங்கள். பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள். பிடித்த உணவை பிடித்த இடத்தில் சாப்பிடுங்கள். இது போன்ற சின்ன சின்ன சந்தோஷத்திற்கு தடை போடாதீர்கள்.

    நீங்கள் இதுவரை பிடிக்காத வேலையை செய்து கொண்டிருந்தால், இனி உங்களுக்கு பிடித்தவாறு அதை எப்படி மாற்றிக்கொள்ளலாம் என்று யோசியுங்கள். இடைவேளை நேரத்தில் உங்களுக்கு பிடித்த செயலில் உங்களை ஈடுபடுத்துங்கள். புதிய வேலையை செய்யத் தோன்றினால் தயக்கமின்றி செய்யுங்கள்.

    'வயதாகி விட்டது, இனி நாம் என்ன செய்து என்ன நடக்கப் போகிறது?' என்று எண்ணாதீர்கள். இதுவரை உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்ந்தீர்கள் என்பதை பற்றி யோசிப்பதை விடுத்து, இனி உங்களுக்கு பிடித்தவாறு எப்படி வாழலாம் என்று யோசியுங்கள்.

    • எந்த செயலையும் தள்ளி போடுவதற்கு நம்மிடம் காரணங்கள் இருக்கும்.
    • கேள்விகள் கேட்பதை என்றுமே நிறுத்திக்கூடாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.

    மனிதராய் பிறந்த எல்லோரிடத்திலுமே ஆற்றலும், அறிவும்,திறமையும் உண்டு. பலர் தங்களது தகுதியையும், திறமையையும் அறியாமல் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள். நம்மை நாமே கேள்வி கேட்பதன் மூலமாக நமக்குள் மறைந்துள்ள திறமைகளை கண்டறிந்து அவற்றின் மூலம் வாழ்வில் உயர முடியும்.

    பலம்என்ன ?

    தங்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் எளிதாக அறிந்து கொள்ளும் பலர் பலம் என்னவென்று அறிவதற்கு சிரமப்படுவார்கள். நம்மிடம் இருக்கும் திறமைகள் என்னென்ன? நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? எவற்றில் எல்லாம் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம்? என்பது போன்ற கேள்விகளை நம்மிடம் நாமே கேட்பதன் மூலம் நம்முடைய பலம் என்ன என்பதை எளிதாக கண்டறியலாம்.

    பிறரிடம் கேட்டறிதல்

    எதிர்மறையான சூழ்நிலையில் சிக்கி இருக்கும் போது நமது பலம் என்னவென்று தெரியாமல் போக வாய்ப்பு உண்டு. அந்த சமயங்களில் பெற்றோர் ஆசிரியர், நெருங்கிய நண்பர் போன்றவர்களிடம் நாம் எதில் சிறப்பாக செயல்படுகிறோம்? என கேட்டறிந்து அந்த திறமைகளை மெருகேற்றிக்கொள்ளலாம்.

    தள்ளிப்பபோடுவது கூடாது

    நமது கேள்விகளுக்கு விடை கிடைத்து திறமைகளை அறிந்த பிறகு அவற்றை வளர்த்து கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எந்த செயலையும் தள்ளி போடுவதற்கு நம்மிடம் காரணங்கள் இருக்கும். அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு நம்மைவளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான செயல்களில் ஈடுபட வேண்டும்.

    தயக்க வேண்டாம்

    திறமைகளை மேம்படுத்தி கொள்ளும் முயற்சியின்போது நமக்குள் பல சந்தேகங்கள் எழலாம். எந்த தயக்கமும இல்லாமல் அவற்றுக்கான விடைகளை நமது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். புதிதாக ஒரு செயலை செய்யும் போதோ ஒரு விஷயத்தை கற்கும்போதோ மனதில் கேள்விகள் உருவாகும். அவற்றுக்கான விடைகளை கேட்டறிந்து அதற்கேற்ப செயல்பட்டு முன்னேறலாம்.

    முக்கியமான கேள்வி

    முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு கேள்வியை தினந்தோறும் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். அன்றைய நாள் முடிந்த பிறகு தாங்கள் செய்த செயல்களை ஆராய்ந்து இதுதான் என்னுடைய சிறப்பான செயலா? என கேட்டு கொள்ளும் போது நாம் செய்த தவறுகள் நமக்கு தெரியவரும் அவற்றை திருத்திக்கொண்டு ஒவ்வொரு நாளையும் சிறப்பான நாளாக மாற்றி அமைக்க வேண்டும்.

    கேள்விகள் கேட்பதை என்றுமே நிறுத்திக்கூடாது என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். நம்மிடம் நாம் கேட்கும் கேள்விகளும், அதற்கு பெறுகிற பதில்களும் நமது முயற்சிக்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.

    தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள்.
    தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு, பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

    தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள்.

    பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். இதனால் தற்கொலை செய்து கொள்ளக்கூட நேரிடலாம்.

    இவற்றை போக்குவதற்கு சில வழிகள்!

    * நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள், உங்களை நீங்களே ரசியுங்கள்.

    * எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள். இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

    * உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித்தனமாய் முயற்சி செய்யுங்கள்.

    * என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

    * உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

    * கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

    * அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

    * உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். உண்மையை மற்றவருக்கும் பகிருங்கள்.
    ×