என் மலர்
நீங்கள் தேடியது "Mauni Amavasya"
- கும்பமேளாவின் அடுத்த முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது.
- மவுனி அமாவாசை அன்று தோராயமாக ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு ரெயிலை இயக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு கும்பமேளா விழா நடைபெறுகிறது. பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான ராஜ குளியல் (மகர சங்கராந்தி) கடந்த 14-ந் தேதி நடந்தது. அப்போது 3½ கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
கும்பமேளா தொடங்கியதில் இருந்து தற்போது வரையில் 9 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கும்பமேளாவின் அடுத்த முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மவுனி அமாவாசையையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரெயில்களை இயக்க பிரயாக்ராஜ் கோட்டம் விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
சிறப்பு ரெயில்களை இயக்குவதுடன், பயணிகளுக்கு சுமுகமான அனுபவத்தை உறுதி செய்வதற்காக, வண்ண குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் தங்குமிடம் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டத்தின் மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி அமித் மாளவியா இது குறித்து கூறியதாவது:-
ஜனவரி 29-ந் தேதி மவுனி அமாவாசை அன்று 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அவற்றில் பெரும்பாலானவை பிரயாக்ராஜ் சந்திப்பில் இருந்து இயக்கப்படும்.
குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் வழக்கமான ரெயில்களுடன், கோட்டத்தில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
இந்த திட்டங்களின் மூலம் பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டம், மவுனி அமாவாசை அன்று தோராயமாக ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு ரெயிலை இயக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
2019-ல் மவுனி அமாவாசையின் போது இயக்கப்பட்ட 85 ரெயில்களை விஞ்சும் வகையில், ஒரே நாளில் 150 சிறப்பு ரெயில்களை இயக்குவது ஒரு முக்கிய சாதனையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
- இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்.
இந்நிலையில் இன்றுடன் முதல் அமிர்த ஸ்நானம் [புனித நீராடல்] முடிவடைந்து நாளை [ஜனவரி 29] மவுனி அமாவாசையையொட்டி 2 ஆம் கட்ட அமிர்த ஸ்நானம் தொடங்குகிறது.
மவுனி அமாவாசை நாளில், மக்கள் புனித நதிகளில் நீராடி, தான தர்மங்கள் செய்வார்கள். இந்த நாளில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. முன்னோர்கள் பூமிக்கு வருவதாக நம்பப்படும் இந்த நாளின் முக்கியத்துத்தால் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
எனவே நாளை திரிவேணி சங்கமத்தில் நீராட மகா கும்பமேளாவுக்கு லட்சக்கணக்கானோர் இன்றுமுதலே படையெடுத்து வருகின்றனர். இதனால் பிரயாக்ராஜுக்கு வரும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன.
மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் நகருக்கு 48 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை இருக்கும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.
விமான கட்டணங்கள் 300% முதல் 600% வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லி-பிரயாக்ராஜ் இடையே விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மகா கும்பமேளாவில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் மொத்தமாக 40 கோடி பேர் வருகை தருவார்கள் என அரசு கணக்கிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






