என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: நாளை மவுனி அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவுக்கு படையெடுக்கும் மக்கள்..
    X

    VIDEO: நாளை மவுனி அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவுக்கு படையெடுக்கும் மக்கள்..

    • ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.
    • இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததைக் குறிக்கும் விதமாகக் கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.

    இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புனித நீராடினார்.

    இந்நிலையில் இன்றுடன் முதல் அமிர்த ஸ்நானம் [புனித நீராடல்] முடிவடைந்து நாளை [ஜனவரி 29] மவுனி அமாவாசையையொட்டி 2 ஆம் கட்ட அமிர்த ஸ்நானம் தொடங்குகிறது.

    மவுனி அமாவாசை நாளில், மக்கள் புனித நதிகளில் நீராடி, தான தர்மங்கள் செய்வார்கள். இந்த நாளில் திரிகிரஹி யோகம் உருவாகிறது. முன்னோர்கள் பூமிக்கு வருவதாக நம்பப்படும் இந்த நாளின் முக்கியத்துத்தால் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    எனவே நாளை திரிவேணி சங்கமத்தில் நீராட மகா கும்பமேளாவுக்கு லட்சக்கணக்கானோர் இன்றுமுதலே படையெடுத்து வருகின்றனர். இதனால் பிரயாக்ராஜுக்கு வரும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன.

    மகா கும்பமேளாவிற்காக பிரயாக்ராஜ் நகருக்கு 48 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் சேவை பிப்ரவரி மாத இறுதி வரை இருக்கும் என்று ரெயில்வே தெரிவித்துள்ளது.

    விமான கட்டணங்கள் 300% முதல் 600% வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக டெல்லி-பிரயாக்ராஜ் இடையே விமான டிக்கெட் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மகா கும்பமேளாவில் பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் மொத்தமாக 40 கோடி பேர் வருகை தருவார்கள் என அரசு கணக்கிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×